Thalaivar 173: ரஜினியின் அடுத்த படத்தை இயக்குவது யார்? நாளை அறிவிக்கிறார் கமல்ஹாசன்
சென்னை: நடிகர் கமல்ஹாசனின் ராஜ்கமல் இன்டர்நேஷனல் நிறுவன தயாரிப்பில் நடிகர் ரஜினிகாந்த் நடிக்கும் 173 ஆவது படத்தை இயக்க போவது யார் என்ற அறிவிப்பு நாளை (ஜனவரி 3) காலை 11 மணிக்கு வெளியாகிறது. இதை ராஜ்கமல் இன்டர்நேஷனல் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
தலைவர் 173 படத்தை இயக்குவதாக இருந்த சுந்தர் சி திடீரென விலகிய நிலையில் தற்போது வேறொரு இயக்குநர் அறிவிக்கப்படுகிறார். சுந்தர் சி சொன்ன கதை, ரஜினிக்கு திருப்திப்படவில்லை என சொல்லப்பட்ட நிலையில் தற்போது புதிதாக ஒப்பந்தமாகியுள்ள இயக்குநரிடம் ரஜினி கதை கேட்டிருப்பார் என்றுதான் சொல்லப்படுகிறது.

கூலி படத்தை தொடர்ந்து ரஜினியின் அடுத்தப்படமான ஜெயிலர் 2 படத்தை நெல்சன் இயக்கி வருகிறார். இந்த படம் இந்த ஆண்டு ஜூன் மாதம் வெளியாகும் என கூறப்படுகிறது. இந்த நிலையில் ரஜினியும் கமலும் இணைந்து ஒரு படம் நடிப்பதாக சொல்லப்பட்டு பின்னர் அதை ரஜினி மறுத்திருந்தார்.
கமல்ஹாசன் பிறந்தநாள்
இந்த நிலையில் எதிர்பாராதவிதமாக ரஜினியின் 173 ஆவது படத்தை கமல்ஹாசன் தனது ராஜ்கமல் இன்டர்நேஷனல் நிறுவனம் மூலம் தயாரிக்கவுள்ளதாக கடந்த ஆண்டு கமல்ஹாசனின் பிறந்தநாளான நவம்பர் 6ஆம் தேதி அறிவிப்பு வெளியானது.
அப்போது இந்த படத்தை சுந்தர் சி இயக்குவார் என தெரிவிக்கப்பட்டது. அவரும் கமலின் அலுவலகத்திற்கு வந்து ரஜினி, கமலிடம் இருந்து வாழ்த்துகளை பெற்றார். ஏற்கெனவே ரஜினி நடித்த அருணாச்சலம், கமல் நடித்த அன்பே சிவம் உள்ளிட்ட படங்களை சுந்தர் சி இயக்கியிருந்ததால் இந்த படத்தின் மீது எதிர்பார்ப்பு எகிறியது.
தனிப்பட்ட காரணங்களால் விலகிய சுந்தர் சி
ஆனால் சில வாரங்களிலேயே தனிப்பட்ட காரணங்களுக்காக விலகுவதாக அறிவித்திருந்தார். இதற்கு அரசியல் காரணங்கள் எல்லாம் வதந்தியாக சொல்லப்பட்டது. அதாவது கமல்ஹாசன் திமுக கூட்டணியில் இருக்கிறார். குஷ்பு தமிழக பாஜக செயற்குழு தலைவராக உள்ளார். கடந்த காலங்களில் நடந்த தேர்தலில் மனைவியுடன் சேர்ந்து சுந்தர் சி.யும் பாஜகவுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்தார்.
ஏன் விலகினார்
அதனால் கமலின் படத்தில் இருந்து அவர் விலகினார் என்றார்கள். அது போல் ரஜினியிடம் சுந்தர் சி கதை சொன்னார். ஏதோ பேய் படம் போல் கதை சொன்னது ரஜினிக்கு பிடிக்கவில்லை என தெரிவித்ததால் சுந்தர் சி நாசுக்காக விலகிவிட்டார் என்கிறார்கள்.
கமல் அளித்த பதில்
ஆனால் உண்மையான பிரச்சினை என்னவென தெரியவில்லை. அப்போது இது குறித்து கமலிடம் செய்தியாளர்கள் கேட்ட போது ரஜினியை திருப்திப்படுத்தும் வகையில் யார் வேண்டுமானாலும் கதை சொல்லலாம் என தெரிவித்திருந்தார்.
ரஜினி சில இளம் இயக்குநர்களிடம் கதை கேட்டதாக சொல்லப்படும் நிலையில் ரஜினியின் 173 ஆவது படத்தின் இயக்குநர் யார் என்பது நாளை வெளியாகிறது என ராஜ்கமல் நிறுவனம் தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளது.
கமல்ஹாசன்
ALAPPARA KELAPPAROM 🔥#Arambikalama #Thalaivar173 #SuperStarPongal2027 @rajinikanth @ikamalhaasan #Mahendran @RKFI @turmericmediaTM @magizhmandram pic.twitter.com/sGSG9LkEZG
— Raaj Kamal Films International (@RKFI) January 2, 2026
அந்த பதிவில் "அலப்பறை கெளப்புறோம்" என தெரிவிக்கப்பட்டு, ரஜினியின் டைட்டில் கார்டு வெளியாகியுள்ளது. இதனால் ரஜினி ரசிகர்கள் இயக்குநர் யார் என்ற ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருகிறார்கள். சரியான கதையம்சம் இல்லாத ரஜினியின் அண்மைக்கால படங்களை குறிப்பிட்டு அந்த இயக்குநராக இருக்கக் கூடாது, இந்த டைரக்டராக இருக்கக் கூடாது என விவாதித்து வருகிறார்கள். எனினும் ரஜினியின் படம் குறித்த அறிவிப்பு வெளியாகவுள்ளதால் மிகவும் எதிர்பார்க்கிறார்கள்.












Click it and Unblock the Notifications