"என்னுள் இருந்த நடிப்பை கண்டுபிடிச்சது அவன்தான்".. தாதா சாகேப் விருது மேடையில் ரஜினி நெகிழ்ச்சி!
சென்னை: எத்தனை உச்சபட்ச நட்சத்திரமாக சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் திகழ்ந்தாலும் தான் கடந்து வந்த பாதையையும் தன்னை தூக்கிவிட்ட ஏணியையும் மறக்காமல் இன்றைய தினமும் பெருமை பொங்க டெல்லியிலும் அந்த நண்பர் ராஜ் பகதூரின் பெயரை உலகறிய செய்தார்.
Recommended Video
நன்றி மறப்பது நன்றன்று நன்றல்லது
அன்றே மறப்பது நன்று
என்பது திருவள்ளுவரின் குறளாகும்.
ஒருவன் செய்த நன்மையை ஒருபோதும் மறத்தலாகாது; அவன் செய்த தீமையை உடனே மறப்பது நல்லது என்பதுதான் மேற்கண்ட குறளின் அர்த்தமாகும்.
ஏற்றிவிட்ட ஏணியை எட்டி உதைக்கக் கூடாது. தூக்கிவிட்ட கைகளையும் தட்டி விடக் கூடாது என்பது பெரியவர்களின் வாக்கு. அது போல் தான் எத்தனை உச்சத்திற்கு போனாலும் கடந்து வந்த பாதையையும் அந்த உயரத்தை அடைய நமக்கு உதவியவர்களையும் மறக்கக் கூடாது. இதற்கு மிகச் சிறந்த உதாரணமாக திகழ்பவர் ரஜினிகாந்த்.

டிரைவர்
பெங்களூரில் 1970 ஆம் ஆண்டு மாநகர போக்குவரத்துக் கழகத்தில் டிரைவராக ராஜ் பகதூரும், கன்டக்டராக ரஜினிகாந்தும் ஒரே நாளில் வேலைக்கு சேர்ந்தார்கள். டிக்கெட் கொடுக்கும் போது பயணிகளுக்கு பாக்கி சில்லறையை கொடுக்கும் போதும் ரஜினியின் ஸ்டைலை பார்த்து ராஜ் பகதூர் அசந்துவிட்டார். அது போல் அவரது வேகமான நடை, தலையை கோதி விடும் ஸ்டைல் ஆகியவற்றையும் கண்டறிந்தார்.

போக்குவரத்து ஊழியர்கள்
ரஜினிக்கு அப்போதே நடிப்பில் ஆர்வம் இருந்ததால் போக்குவரத்து ஊழியர்கள் போடும் நாடகங்களில் முக்கிய கதாபாத்திரம் ஏற்று நடிப்பாராம். அப்போதுதான் ரஜினிக்குள் இருந்த நடிப்புத் திறமை ராஜ் பகதூருக்கு தெரிந்தது. இதுகுறித்து ரஜினியிடம் சொன்ன போது அவர் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. மேலும் மெட்ராஸ் பிலிம் இன்ஸ்ட்டியூட்டுக்கு போய் நடிப்பில் பயிற்சி பெறுமாறு ரஜினியை கட்டாயப்படுத்தி ராஜ் பகதூர் அனுப்பினார்.

தனித்துவம்
ரஜினியின் ஸ்டைலை அப்போதிருந்த எந்த நடிகரும் பயன்படுத்தாதபடி தனித்துவமாக இருந்ததை இயக்குநர் கே பாலசந்தர் கண்டறிந்து ரஜினிக்கு வாய்ப்பு கொடுத்தார். அன்று தொடங்கிய அவரது பயணம் இந்த 70 வயதிலும் நிற்காமல் தொடர்ந்து ஓடுகிறது. இத்தனை உச்ச நட்சத்திரமாக இருந்தாலும் பெங்களூர் சென்றால் ராஜ் பகதூரை சந்திக்காமல் ரஜினி வரமாட்டார். அது போல் ஆண்டுதோறும் இமயமலைக்கு செல்லும் போது ராஜ் பகதூருடன் செல்லும் ரஜினி பெரிய நட்சத்திரம் என்ற பந்தா ஏதும் இல்லாமல் தரையில் அமர்ந்து கூட சாப்பிட தயங்கமாட்டார் என ராஜ் பகதூர் பல பேட்டிகளில் தெரிவித்துள்ளார்.

சாதனையாளர்
அது போல் ராஜ் பகதூர் குறித்து அவ்வப்போது பேசி சிலாகித்து கொள்வார் ரஜினி. தேசிய விருதுகள், பத்ம பூஷன், பத்ம விபூஷன் உள்ளிட்ட விருதுகளை பெற்ற ரஜினிகாந்திற்கு இன்றைய தினம் டெல்லியில் வாழ்நாள் சாதனையாளருக்கான தாதா சாகேப் பால்கே விருது வழங்கப்பட்டது. இந்த விருதை பெற்றுக் கொண்ட ரஜினிகாந்த் விழா மேடையில் பேசுகையில் இந்த விருதை வாங்குவதில் நான் பெருமை கொள்கிறேன்.

தாதா சாகேப் பால்கே விருது
தாதா சாகேப் பால்கே விருது கொடுத்தமைக்கு மத்திய அரசுக்கு மனமார்ந்த நன்றி. இந்த நேரத்தில் இந்த விருதை எனது குரு கே பாலசந்தருக்கு அர்ப்பணிக்கிறேன். அவரை இந்த தருணத்தில் நன்றியுடன் நினைத்து பார்க்கிறேன். அடுத்தது தந்தை போல் நல்ல விஷயங்களை கற்றுக் கொடுத்து ஆன்மீகத்தை என்னுள் புகுத்திய எனது சகோதரர் சத்யநாராணயா கெய்கவாட்டுக்கு நன்றி. எனது நண்பரும் என்னுடன் பணியாற்றிய சக ஊழியருமான டிரைவர் ராஜ் பகதூருக்கு நன்றி.

ராஜ் பகதூர்
நான் பஸ் கன்டக்டராக இருந்த போது அவர்தான் என்னுள் இருந்த நடிப்பு திறமையை கண்டறிந்து என்னை சினிமாவில் இணைந்து நடிக்க ஊக்குவித்தார் என்றார். எத்தனை உச்சத்திற்கு போனாலும் தன்னை தூக்கிவிட்ட கைகளை எப்போதும் மறக்கக் கூடாது என்பது மீண்டும் ஒரு முறை ரஜினி நினைவுப்படுத்தி விட்டார். அத்துடன் குடியரசுத் துணைத் தலைவர் வெங்கய்யா நாயுடு உள்ளிட்டோர் முன்னிலையில் ராஜ் பகதூருக்கு பெருமையும் சேர்த்துவிட்டார். இந்த பெயரை வடமாநிலத்தவர்களும் அறியும் வகையில் செய்துவிட்டார் ரஜினி. அத்துடன் இதன் மூலம் நன்றி மறக்கக் கூடாது என்ற மெசேஜையும் ரஜினி சொல்லிவிட்டார். எளிமை, பண்பு, பணிவு- இதுதாங்க ரஜினி! ஹேட்ஸ் ஆஃப் தலைவா!












Click it and Unblock the Notifications