தாதா சாகேப் பால்கே விருது பெறுவது மகிழ்ச்சி.. ஆனால் கே பாலசந்தர் இல்லாதது வருத்தம்.. ரஜினிகாந்த்
சென்னை: தாதா சாகேப் பால்கே விருது பெறும் இந்த தருணத்தில் இயக்குநர் கே பாலசந்தர் இல்லாதது வருத்தமளிப்பதாக நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.
இந்திய சினிமாவில் 40 ஆண்டுகளுக்கு மேலாக முத்திரை பதித்து வருகிறார் ரஜினிகாந்த். கடந்த 1975 ஆம் ஆண்டு அபூர்வ ராகங்கள் என்ற திரைப்படத்தின் மூலம் ரஜினிகாந்தை இயக்குநர் கே பாலசந்தர் அறிமுகப்படுத்தினார்.
இவர் தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் ஏராளமான படங்களில் நடித்துள்ளார். ஆங்கில படத்திலும் இவர் நடித்துள்ளார்.
Exclusive: ஸ்டாலினுக்கு பிரதமராகும் தகுதி.. இப்படி ஒரு புத்தகம் வெளியிட்டது அவருக்கே தெரியாது -கதிர்
70 வயதிலும்
சின்ன குழந்தை முதல் பெரியவர்கள் வரை ரஜினிகாந்தை பிடிக்காதவர்களே இருக்க மாட்டார்கள் என்ற அளவுக்கு 70 வயதிலும் மின்னல் வேக நடை, பேச்சு, செயல்பாடுகளில் உச்சத்தில் இருக்கிறார். ஆசியாவிலேயே ஹாலிவுட் நடிகர் ஜாக்கி சானுக்கு அடுத்தபடியாக அதிக அளவில் சம்பளம் வாங்கும் நடிகர் ஆனார். இவர் இதுவரை 6 முறை தமிழக அரசின் திரைப்பட விருதுகளை பெற்றுள்ளார்.
இரு முறை
அதில் 4 முறை சிறந்த நடிகருக்கான விருதையும், இரண்டு முறை சிறந்த நடிகருக்கான சிறப்பு விருதையும் பெற்றுள்ளார். சிறந்த நடிகருக்கான பிலிம்பேர் விருதுகளையும் இவர் பெற்றுள்ளார். இவருக்கு 2004 ஆம் ஆண்டு இந்திய அரசு இவருக்கு பத்ம பூஷண் விருதையும், 2016ஆம் ஆண்டு பத்ம விபூஷண் விருதையும் வழங்கியது.
சிறந்த ஆளுமை
இந்திய திரைப்படத் துறையில் சிறந்த ஆளுமைக்கான விருது 45 ஆவது இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் வழங்கப்பட்டது. 2019ஆம் ஆண்டிற்கான தலை சிறந்த நடிகருக்கான தாதா சாகேப் பால்கே விருது ரஜினிகாந்திற்கு வழங்கப்படுவதாக கடந்த ஏப்ரல் 1 ஆம் தேதி மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகர் அறிவித்தார்.
தொற்று நோய்
ஏப்ரல் மாதமே இந்த விருது குறித்து அறிவிக்கப்பட்டாலும் கொரோனா தொற்று நோய் பரவுவதால் விருது வழங்கும் விழா ஒத்தி வைக்கப்பட்டது. கொரோனா தொற்று குறைந்துள்ள நிலையில் இந்த விழா நாளை டெல்லியில் நடைபெறுகிறது. இந்த விழாவில் ரஜினிகாந்த் கலந்து கொண்டு விருதை பெறுவார் என தெரிகிறது.
தாதாசாகேப் பால்கே விருது
இந்த நிலையில் இதுகுறித்து அவர் போயஸ் கார்டனில் செய்தியாளர்களை சந்திக்கும் போது கூறுகையில் தாதாசாகேப் பால்கே விருது பெறுவது மகிழ்ச்சியளிக்கிறது. விருது கிடைக்கும்னு எதிர்பார்க்கவில்லை. இந்த தருணத்தில் கே.பி. சார் இல்லாதது வருத்தம் அளிப்பதாக கூறிய ரஜினிகாந்த், விருதைப் பெற்ற பிறகு செய்தியாளர்களை சந்திப்பதாக கூறினார்.