வலுவான எதிர்க்கட்சி.. அடுத்த 5 ஆண்டுகள் சூப்பரா இருக்கும்.. டெல்லி சென்ற ரஜினிகாந்த் பேட்டி!
சென்னை: வலுவான எதிர்க்கட்சியை மக்கள் தேர்ந்தெடுத்துள்ளார்கள். இது ஜனநாயகத்திற்கு ஆரோக்கியமான அறிகுறி என ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.
டெல்லியில் இன்று மாலை நடைபெறவுள்ள பிரதமர் நரேந்திர மோடி மற்றும் அமைச்சரவை பதவியேற்பு விழாவுக்கு புறப்பட்டுச் சென்ற போது சென்னை விமான நிலையத்தில் நடிகர் ரஜினிகாந்த் பேட்டி அளித்தார்.

நரேந்திர மோடி மூன்றாவது முறையாக இன்று நாட்டின் பிரதமராக பதவி ஏற்கிறார். இன்று மாலை டெல்லியில் பதவியேற்பு நிகழ்ச்சி நடைபெறும் நிலையில், அந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக சென்னை விமான நிலையம் வந்த நடிகர் ரஜினிகாந்த் செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது பேசிய அவர், "ஜவஹர்லால் நேருவுக்கு பிறகு மூன்றாவது முறையாக மோடி அவர்கள் பிரதமராக பதவி ஏற்பது அவரது சாதனை. அவருக்கு என்னுடைய மனமார்ந்த பாராட்டுக்கள். மக்கள் இந்த பாராளுமன்றத் தேர்தலில் ஒரு வலுவான எதிர்க்கட்சியை தேர்வு செய்து உள்ளனர். இது ஜனநாயகத்திற்கு இது ஆரோக்கியமான அறிகுறி, அடுத்த ஐந்து ஆண்டுகள் நன்றாக இருக்கும் என எதிர்பார்க்கிறேன்." எனத் தெரிவித்தார்.
தொடர்ந்து, திமுக கூட்டணி 40 சீட்களில் வெற்றி பெற்றது விடுதலை சிறுத்தை கட்சி மற்றும் நாம் தமிழர் கட்சி ஆகியவை மாநில கட்சிகளாக அங்கீகாரம் பெற்றது ஆகியவை குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்ப, அவர்கள் அனைவருக்கும் வாழ்த்துகள் எனத் தெரிவித்தார் நடிகர் ரஜினிகாந்த்.
நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி 292 இடங்களில் வெற்றி பெற்ற நிலையில் அடுத்து, நரேந்திர மோடி தொடர்ந்து மூன்றாவது முறையாக பிரதமராக பதவியேற்கிறார். இந்த நிகழ்வு தேசிய தலைநகரான டெல்லியில் உள்ள ராஷ்டிரபதி பவனின் ஃபோர்கோர்ட்டில் இன்று இரவு 7:15 மணிக்கு தொடங்க உள்ளது.
பிரதமர் மோடியின் அமைச்சரவையில் 27 முதல் 30 அமைச்சர்கள் இன்று பதவி ஏற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அவர்களில் மூன்றில் ஒரு பகுதியினர் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சியை சேர்ந்தவர்களாக இருப்பார்கள். ஐந்து எம்.பி.க்களுக்கு ஒரு கேபினட் அமைச்சர் மற்றும் இரண்டு எம்.பிக்களுக்கு ஒரு இணை அமைச்சர் என்ற அடிப்படையில் கூட்டணி கட்சிகளுக்கு பதவிகள் ஒதுக்கீடு செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பதவியேற்பு விழாவில் பல்வேறு முக்கிய பிரமுகர்கள், பிரபலங்கள், தொழிலதிபர்கள் உட்பட 8,000 க்கும் மேற்பட்ட விருந்தினர்கள் கலந்து கொள்கிறார்கள். பதவியேற்பு விழாவைத் தொடர்ந்து, குடியரசுத் தலைவர் மாளிகையில் பிரமுகர்களுக்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு விருந்து அளிக்கிறார்.
மோடியின் பதவியேற்பு விழாவில் பல நாடுகளின் தலைவர்கள் கலந்து கொள்ள உள்ளனர். இலங்கை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, மாலத்தீவு ஜனாதிபதி முகமது முயிஸு, சீஷெல்ஸ் நாட்டின் துணை ஜனாதிபதி அஹமது அபிப், வங்கதேசம் நாட்டின் பிரதமர் ஷேக் ஹசீனா, மொரீஷியஸ் பிரதமர் பிரவிந்த் குமார் ஜக்நாத், நேபாள பிரதமர் புஷ்ப கமல் தஹால் பிரசண்டா மற்றும் பூட்டான் பிரதமர் ஷெரிங் டோப்கே ஆகியோர் பிரதமர் மோடியின் பதவியேற்பு நிகழ்வில் பங்கேற்க உள்ளதாகத் தெரிகிறது.












Click it and Unblock the Notifications