ரசிகர்களின் விஜய் மீது 'முட்டை வீச்சு சதி' ஆடியோ-ஆடிப் போன ரஜினிகாந்த்.. ஷேராகும் 'அட்வைஸ்' அறிக்கை!
சென்னை: தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரான நடிகர் விஜய் தமிழகம் முழுவதும் சுற்றுப் பயணம் மேற்கொள்ளும் போது அழுகிய முட்டைகளை வீசுவோம்; அதற்கான ஏற்பாடுகளை செய்வோம் என ரஜினிகாந்த் ரசிகர்கள் பேசிய ஆடியோ பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் ரஜினி ரசிகர்கள் இத்தகைய நடவடிக்கைகளை மேற்கொள்ளக் கூடாது என ரஜினிகாந்த் தரப்பில் வெளியிடப்பட்டதாக கூறப்படும் ஒரு அறிக்கை சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது.
ரஜினிகாந்த் தரப்பில் வெளியிடப்பட்டதாக கூறப்படும் அறிக்கை: சூப்பர் ஸ்டார்’ ரஜினிகாந்தின் ரசிகராக தன்னை அறிமுகப்படுத்திக் கொண்ட ஒருவர் நடிகர் விஜய்க்கு எதிராக வெளியிட்ட கருத்துக்கள் கண்டிக்கத்தக்கது. இத்தகைய கருத்துகள் ஏற்க முடியாதவை, மேலும் உண்மையான ரஜினி ரசிகர்கள் யாரும் இப்படிபட்டசெயலில் ஈடுபட மாட்டார்கள்.

ஊடகங்களும், சமூகவலைதளங்களும் இத்தகைய எதிர்மறையான நிகழ்வுகளை மீண்டும் மீண்டும் ஒளிபரப்புவதை அல்லது பகிர்வதை தவிர்க்க வேண்டும். இத்தகைய சம்பவங்கள் தொடர்ந்து அதிகரிப்பது தேவையற்ற பகைமையையும் பிளவுகளையுமே உருவாக்குகிறது.
அதே நேரத்தில், அனைத்து ரசிகர்களும் கண்ணியத்தையும் பரஸ்பர மரியாதையையும் காத்துக்கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம். திரைப்படம் என்பது மக்களை ஒன்றிணைப்பதற்காக இருக்க வேண்டுமே தவிர, அது பிளவை ஏற்படுத்துவதற்காக அல்ல. ரசிகர் என்ற உணர்வின் பெயரில் எந்த நடிகருக்கும் அல்லது சகமனிதருக்கும் எதிராக வெறுப்பை பரப்பக் கூடாது.
நம் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களின் வழியில் செயல்படும் நாம் இது போன்ற செயல்களில் ஈடுபடுவது கிடையாது, கூடாது. நாம் விரும்பும் நட்சத்திரங்களை நேசத்துடனும் நேர்மறை உணர்வுடனும் கொண்டாடுவோம். ரசிகர் பண்பாட்டை மரியாதை மற்றும் பெருமிதம் மட்டுமே நிர்ணயிக்கட்டும்—துவேஷம் அல்ல. இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அது என்ன முட்டை வீச்சு சதித் திட்டம்?
நடிகர் ரஜினிகாந்த் ரசிகர்கள் ட்விட்டர் ஸ்பேஸில் கலந்துரையாடினர். அப்போது பேசிய ரஜினி ரசிகர் ஒருவர், மளிகை கடையில் ஒரு முட்டை ரூ.6.50க்கு விற்பனையாகிறது; நாம் அனைவரும் கூட்டாக சேர்ந்து ஒரு அக்கவுண்ட் தொடங்குவோம்; நாமக்கல்லில் மொத்த கொள்முதல் விலைக்கே முட்டைகளை வாங்குவோம்; அதுவும் அழுகிய முட்டை எனில் ரூ.1.50தான் வரும். விஜய் சுற்று பயணம் வரும் போது சரமாரியாக வீசுவோம்..என கூறுவதாக இடம் பெற்றிருந்தது. இந்த உரையாடல் மிகப் பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த உரையாடலை வைத்து ரஜினி ரசிகர்களை அடையாளம் கண்டு தமிழக போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டது.












Click it and Unblock the Notifications