மோடியை பகிரங்கமாக தலையில் தூக்கி வைத்து கொண்டாடும் ரஜினிகாந்த்.. எதிர்க்கட்சிகள் பற்றி கிண்டல்
Recommended Video

சென்னை: என்ன ஒரு கோபம், என்ன ஒரு அலட்சியம்.. முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள 7 பேர் குறித்த கேள்விக்கு, நடிகர் ரஜினிகாந்த் அளித்த பதிலையும், அந்த தோரணையையும், பார்த்தவர்கள் இப்படித்தான் நினைப்பார்கள்.
சென்னை விமான நிலையத்தில் நேற்று பிற்பகல் ரஜினிகாந்த் கொடுத்த அந்த பேட்டி, பெரும் கொந்தளிப்பையே ஏற்படுத்திவிட்டது.
7 பேர் விடுதலை தொடர்பாக தமிழக அரசின் பரிந்துரை, குடியரசு தலைவர் பார்வைக்கே கொண்டு செல்லப்படாமல் தள்ளுபடி செய்யப்பட்டதாமே என்ற நிருபர் கேள்விக்கு, எந்த ஏழுபேர் என பதில் கேள்வி எழுப்பினார், ரஜினிகாந்த்.

தோரணை
ரஜினிகாந்த் போன்ற ஒரு நடிகருக்கு, இந்த பிரச்சினை குறித்தோ, 7 பேர் என்றால் யார் என்றோ சட்டென நினைவுக்கு வந்திருக்காது என்று நினைத்து கூட தமிழர்களால் தங்கள் மனதை ஆற்றிக்கொள்ள முடியவில்லை. ஏனெனில், ரஜினிகாந்த் பதில் அளித்த தோரணை அந்த மாதிரி. அவரது பேட்டி ஸ்டைலை வைத்து பார்த்தால், 7 பேர் பற்றி தெரிந்திருந்தும், அவர்களெல்லாம் பெரிய ஆட்களா என்ற தொனியில் கேட்பதை போலத்தான் இருந்தது.

பேசியுள்ளார்
உண்மையும் அதுதான். பேரறிவாளன் பரோலில் வெளியே வந்தபோது, அவரிடம் ரஜினிகாந்த் தொலைபேசியில் பேசியதாக பேரறிவாளன் வழக்கறிஞர் சிவா போட்டு உடைத்துவிட்டார். இந்த நிலையில்தான், இன்று நிருபர்களுக்கு பேட்டியளித்த ரஜினிகாந்த், தான் பேரறிவாளனிடம் பேசியது உண்மைதான். 7 பேர் யார் என்று தெரியாத முட்டாள் இல்லை என்று கூறினார்.

மெத்தனமா
அப்படியானால், 7 பேர் யார் என்ற கேள்விக்கு, ரஜினிகாந்த் அளித்த பதில் கண்டிப்பாக மெத்தனமான ஒன்று என்பது உறுதியாகியுள்ளது. மற்றொரு விஷயம், பாஜகவிற்கு எதிரான மெகா கூட்டணியை இன்றும் கேலி செய்துள்ளார் ரஜினிகாந்த். மெகா கூட்டணி பற்றிய கேள்விக்கு, 10 பேர் சேர்ந்து ஒருவரை எதிர்த்து சென்றால் யார் பலசாலி? 10 பேரா அந்த ஒருவரா என கேள்வி எழுப்பினார் ரஜினிகாந்த்.

தெளிவா சொல்ல முடியாது
மோடிதான் பலசாலி என நீங்கள் சொல்வதாக செய்தி போடலாமா என்று பத்திரிகையாளர்கள் கேள்வி எழுப்பியதற்கு, இதை விட தெளிவாக சொல்ல முடியுமா என்று பதில் கேள்வி கேட்டார் ரஜினிகாந்த். நேற்று விமான நிலையத்தில் அளித்த பேட்டியிலும், எதிர்க்கட்சிகள், பாஜகவை ஆபத்தான கட்சி என்று நினைத்தால் அது ஆபத்தான கட்சிதானே என்று நக்கலாக கூறியிருந்தார் ரஜினிகாந்த். இப்போதும் எதிர்க்கட்சிகள் கூட்டணியை விமர்சனம் செய்துள்ளார்.

அதெல்லாம் சொல்ல மாட்டேன்
அதே நேரம் பாஜக ஆபத்தான கட்சியா, உங்கள் கருத்து என்ன, என்று நிருபர்கள் கேட்டதற்கு, நான் முழு நேர அரசியலில் ஈடுபடவில்லை. எனவே அதுபற்றி நான் இப்போது கருத்து கூற மாட்டேன் என ஜகா வாங்கிவிட்டார். பலசாலி என பாராட்டு பத்திரம் வாசிக்க தெரிந்த ரஜினியால், அக்கட்சி குறித்த எதிர்மறை கேள்விக்கு மட்டும் முழு நேர அரசியல்வாதியான பிறகுதான் பதில் சொல்ல முடியும் என்று கூற முடிகிறது. ரஜினிகாந்த்தின் தொடர்ச்சியான பாஜக ஆதரவு நிலைப்பாடு மீண்டும் இன்று வெளிப்பட்டுவிட்டது.

மீண்டும் பிரஸ் மீட்
பாஜக தலைவர் தமிழிசை நேற்று அளித்த பேட்டியில், ரஜினிகாந்த், பாஜகவிற்கு எதிராக கூறியிருக்க மாட்டார். மீண்டும் ஒருமுறை கேள்வி கேளுங்கள், சரியாக பதில் சொல்லுவார் என்றார். இப்போது மீண்டும் ஒரு முறை ரஜினியே வந்து பாஜகவிற்கு ஆதரவாக பேசிச் சென்றுள்ளார். அப்போ ஒன்னும் ஒன்னும் ரெண்டுதானுங்களே பாஸ்.












Click it and Unblock the Notifications