இன்னுமா புரியலை.. ரஜினி என்ன சொல்ல வர்றார்னா.. மக்களை அரசியலில் குதிக்க சொல்றார்.. புரியுதா!
மக்களை நேரடியாக அரசியலில் குதிக்க சொல்கிறார் ரஜினி
சென்னை: ரொம்ப ரத்தின சுருக்கமாக சொல்லி விட்டார் ரஜினிகாந்த்.. அதாவது மக்களை அரசியலுக்கு வரச் சொல்லியிருக்கிறார். அவரை அரசியலுக்கு கூப்பிட்டுக் கொண்டு காத்திருக்கிறது ஒரு கூட்டம். ஆனால் அவரோ மக்களை அரசியலுக்கு வரச் சொல்கிறார்.. இதுதாங்க இன்று ரஜினி பேசியதன் சாராம்சம்.
Recommended Video
நிச்சயம் ரஜினியிடம் வித்தியாசமான பார்வை இருக்கிறது.. ஒரு நோக்கம் இருக்கிறது. ஆனால் எல்லாமே இங்கு எடுபடாது என்பதுதான் துரதிர்ஷ்டவசமாக உண்மை.
காரணம், எந்த அடிப்படையுமே இல்லாமல் ஒரு பெரிய மாற்றத்தை அவர் எதிர்பார்க்கிறார். அதை விட முக்கியமாக எந்த லாஜிக்குமே இல்லாமல் ஒரு மாற்றத்தை எதிர்பார்க்கிறார்.
ரஜினிகாந்த்
ரஜினி சொல்லும் எல்லாமே புதுமையாக, புரட்சிகரமாக இருக்கிறது என்று எடுத்துக் கொண்டாலும் கூட அதற்கான சாத்தியம் என்பது மிக மிக குறைவே. தமிழகம் என்றில்லை ஒட்டுமொத்த தேசத்திலும் பெரும் புரட்சி வெடித்தால்தான் அரசியல் மாற்றங்களை நிஜமாக ஏற்படுத்த முடியும். அது மிகப் பெரிய விஷயம்.. ஆனால் அந்த எழுச்சி வரட்டும்.. நான் வர்றேன் என்று ரஜினி கூறுவது வியப்பாக உள்ளது.
மாற்றம்
இன்னொரு விஷயத்தை ரஜினி சுத்தமாக மறந்து விட்டார். இளைஞர்கள் அரசியலுக்கு வர வேண்டும், மாணவர்கள் வர வேண்டும், மாற்றம் வர வேண்டும் என்று பல காலமாகவே பலரும் பேசி வருகிறார்கள். திமுக அதிமுகவுக்கு மாற்று என்ன என்று மக்கள் ரொம்ப காலமாகவே யோசிக்க ஆரம்பித்து விட்டார்கள். அப்படி அவர்கள் யோசித்துக் கொண்டிருந்தபோதுதான் விஜயகாந்த் வந்தார். ஆனால் அவரது கட்சியும் காலப் போக்கில் மக்களை ஏமாற்றவே செய்தது.
மாற்றம்
இது ஏன்.. அதற்கு முன்பாகவே கூட மூப்பனார் ரூபத்தில் ஒரு மாற்றத்தை மக்கள் எதிர்பார்த்தனர். அவரும் ஏமாற்றினார். இன்னும் நிறையப் பேரை மக்கள் எதிர்பார்த்தனர் ஏமாந்தனர். காரணம், மக்களை மாற்றத்துக்கு உட்படுத்த வேண்டியது தலைவர்கள்தான். காரணம் மக்களுக்காகத்தான் தலைவர்களே தவிர.. தலைவர்களுக்காக ஒரு போதும் மக்கள் இருக்க முடியாது. இதுதான் அடிப்படை.. இது ரஜினிக்கு புரிந்ததா என்று தெரியவில்லை.
பாராட்டு
ரஜினியின் பேச்சில் தெறித்த ஒரு உண்மை என்னவென்றால் ஊழல் எதிர்ப்பு மட்டும்தான். அதை பாராட்டியாக வேண்டும். அதில் மாற்றுக் கருத்தே இல்லை. ஆனால் இவர் அந்த மாற்றத்தைக் கொடுக்க முடியும் என்றால் இவர்தானே முதல் படியை எடுத்து வைக்க வேண்டும். அப்போதுதானே இவரைப் பின்பற்றி எல்லோரும் இறங்குவார்கள். ஆனால் இவரோ தலைகீழாக பேசுகிறார். நீங்க இறங்குங்க.. நான் பின்னாடியே வர்றேன் என்கிறார். பின்னால் வருபவருக்குப் பெயர் தொண்டர்தானே... தலைவர் இல்லையே!
நல்ல மாற்றம்
ரஜினியிடம் நிறைய முரண்பாடுகள் இன்னமும் உள்ளன. அவர் நல்லவராக இருக்கலாம்.. நல்லெண்ணம் கொண்டவராக இருக்கலாம்.. நல்ல மாற்றத்தைக் கொடுக்க வேண்டும் என்ற உணர்வுப்பூர்வமான எண்ணமும் இருக்கலாம்.. ஆனால் எல்லாவற்றையும் பார்ட் பார்ட்டாக அவர் வெளிப்படுத்துகிறார்.. பயந்து பயந்து வெளிப்படுத்துகிறார்.. சேப்டி பார்க்கிறார்.. அவரை யாரை இயக்குவதை அவரே பலமுறை தெரிந்தோ தெரியாமலோ வெளிப்படுத்தியபடியே இருக்கிறார். இதை நிச்சயம் மறுக்க முடியாது.
துணிச்சல்
ரஜினிக்காக ரசிகர்கள் இன்னும் கூட காத்திருக்கிறார்கள். அவர்களைப் போல ஒரு பொறுமை சாலியை எங்குமே பார்க்க முடியாது. அத்தனை தூரம் அவர்கள் காத்து விட்டார்கள். இன்னும் கூட காத்திருக்க அவர்கள் தயார்தான்.. ஆனால் காலம் காத்திருக்காதே.. ரஜினியிடம் இப்போது தேவை.. சினிமாவில் காட்டும் ஆக்ஷன் அதிரடி கிடையாது.. ஆக்கப்பூர்வமான அரசியல்.. அதை அவர் துணிந்து செய்யத் தவறி காலம் தாழ்த்திக் கொண்டே போனால்.. அந்த ஆண்டவனால் கூட ரஜினியின் சரிவை தடுக்க முடியாது!!