மக்களிடம் எழுச்சியை எதிர்பார்த்து நான் காத்திருக்கிறேன்.. ரஜினிகாந்த்
சென்னை: மக்களின் எழுச்சியை எதிர்பார்த்து நான் காத்திருக்கிறேன் என நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.
கடந்த வாரம் வியாழக்கிழமையும் இந்த வாரமும் மாவட்டச் செயலாளர்களை ரஜினிகாந்த் சந்தித்து கட்சி தொடங்குவது குறித்து ஆலோசனை நடத்தினார். இந்த நிலையில் வியாழக்கிழமை அன்று மாவட்டச் செயலாளர்களை சந்தித்த கையோடு செய்தியாளர்களையும் சந்தித்தார்.
அப்போது அவர் கட்சி குறித்த முக்கிய அறிவிப்பை வெளியிடுவார் என கருதப்பட்டது. ஆனால் அவர் ரசிகர்கள் எதிர்பார்த்த முடிவை அறிவிக்கவில்லை. சென்னையில் ஒரு ஹோட்டலில் செய்தியாளர்களை சந்தித்த அவர் அரசியல் மாற்றத்திற்கு 3 திட்டங்களை வைத்துள்ளதாக தெரிவித்தார்.
அந்த அரசியல் மாற்றம் குறித்த திட்டத்தை மக்களிடம் கொண்டு போய் சேர்க்குமாறு ஊடகங்களை அவர் கேட்டுக் கொண்டார். அரசியல் மாற்றம் இருந்தால் மட்டும் ஆட்சி மாற்றம் என்றும் அது இப்போது இல்லையென்றால் எப்போதும் இல்லை என ரஜினிகாந்த் கூறியிருந்தார்.
மேலும் மக்களிடம் எழுச்சி ஏற்பட்டால் மட்டுமே அரசியலுக்கு வர முடியும் என்று தெரிவித்திருந்தார். இந்த நிலையில் இந்த கருத்தை மக்களிடம் கொண்டு போய் சேர்த்த அனைவருக்கும் நன்றி என தெரிவித்துள்ளார்.
அண்ணாத்த படப்பிடிப்புக்காக வீட்டிலிருந்து புறப்பட்ட ரஜினிகாந்திடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அவர் கூறுகையில் மக்களிடம் எழுச்சியை எதிர்பார்த்து நான் காத்திருக்கிறேன் என தெரிவித்தார்.