ராஜ்யசபா வேட்பாளராக அறிவிக்கப்பட்ட ராகுலின் நம்பிக்கை நட்சத்திரம்.. யார் இந்த கிறிஸ்டோபர் திலக்?
சென்னை: காங்கிரஸ் சார்பில் மாநிலங்களவை வேட்பாளராக கிறிஸ்டோபர் திலக் அறிவிக்கப்பட்டுள்ளார். ராஜ்யசபா தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்றுடன் நிறைவு பெறும் நிலையில் காங்கிரஸ் கட்சி வேட்பாளரை அறிவித்துள்ளது. யார் இந்த கிறிஸ்டோபர் திலக் எனப் பார்க்கலாம்..
தமிழகத்தில் காலியாக உள்ள 6 மாநிலங்களவை இடங்களுக்கான தேர்தலில், திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு ஒரு இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் செயலாளரான கிறிஸ்டோபர் திலக், காங்கிரஸ் சார்பில் ராஜ்யசபா வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

யார் இந்த கிறிஸ்டோபர் திலக்?
திருச்சியைச் சேர்ந்த கிறிஸ்டோபர் திலக், காங்கிரஸ் கட்சியின் இளைய தலைமுறை தலைவர்களில் முக்கியமானவராகக் கருதப்படுகிறார். கட்சியின் அடிமட்டத் தொண்டராக அரசியல் வாழ்க்கையைத் தொடங்கி, இன்று தேசிய அளவில் கவனிக்கத்தக்க நிலைக்கு உயர்ந்துள்ளார்.
தற்போது கிறிஸ்டோபர் திலக், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் செயலாளராகப் பணியாற்றி வருகிறார். குறிப்பாக, வடகிழக்கு மாநிலங்களான மணிப்பூர், நாகாலாந்து, திரிபுரா மற்றும் சிக்கிம் ஆகிய மாநிலங்களின் கட்சிப் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுச் செயல்பட்டு வருகிறார்.
வடகிழக்கு மாநில பொறுப்பாளர்
மணிப்பூர் போன்ற பதற்றமான சூழல் நிலவும் மாநிலங்களில் கட்சியின் நலனைப் பாதுகாப்பதிலும், களப்பணிகளை ஒருங்கிணைப்பதிலும் இவரது பங்களிப்பு ராகுல் காந்தி உள்ளிட்ட மேலிடத் தலைவர்களால் பாராட்டப்பட்டுள்ளது. ராகுல் காந்தியின் நம்பிக்கைக்குரிய இளம் தலைவர்கள் பட்டியலில் கிறிஸ்டோபர் திலக் இடம்பெற்றுள்ளார்.
ஏற்கனவே தமிழகத்திலிருந்து ப. சிதம்பரம் போன்ற மூத்த தலைவர்கள் மாநிலங்களவையில் பிரதிநிதித்துவப்படுத்தப்பட்டுள்ள நிலையில், இந்த முறை ஒரு புதுமுகத்திற்கு வாய்ப்பளிக்க காங்கிரஸ் மேலிடம் விரும்பியது. அதில் சிறந்த சாய்ஸாக கிறிஸ்டோபர் திலக்கை முடிவு செய்துள்ளது.

காங்கிரஸ் பிளான்
காங்கிரஸ் கட்சியில் இருந்து மூத்த தலைவர்கள் திருநாவுக்கரசர், சுதர்சன நாச்சியப்பன், தங்கபாலு ஆகியோர் போட்டி போட்டு வருவதாக கூறப்பட்ட நிலையில் கிறிஸ்டோபர் திலக் பெயரை காங்கிரஸ் தலைமை அறிவித்துள்ளது.
தேசிய அளவில் காங்கிரஸ் கொள்கைகளை எடுத்துரைக்கும் திறன் கொண்டவர் என்பதால், டெல்லியில் தமிழகத்தின் குரலாக ஒலிக்க இவர் பொருத்தமானவர் என காங்கிரஸ் தலைமை கருதுகிறது. இளைஞருக்கு ராஜ்யசபா சீட் வழங்குவதன் மூலம் தமிழ்நாட்டில் கட்சியின் வளர்ச்சிக்கும் அது உதவும் என்றும், காங்கிரஸ் தலைமை எதிர்பார்க்கிறது.
அந்தவகையில், ராஜ்யசபா தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளராக, கட்சியில் பல்வேறு பொறுப்புகளை வகித்த கிறிஸ்டோபார் திலக் அறிவிக்கப்பட்டுள்ளார். அவர் இன்று வேட்பு மனுவை தாக்கல் செய்கிறார்.












Click it and Unblock the Notifications