ரக்ஷா பந்தன் இந்த ஆண்டு 2 நாட்கள்.. எந்த நேரத்தில் ‘ராக்கி’ கட்ட வேண்டும்? இதை தெரிஞ்சுக்கோங்க!
சென்னை: சகோதரத்துவத்தைக் கொண்டாடும் 'ரக்ஷா பந்தன்' நிகழ்வு இந்த ஆண்டு ஆகஸ்ட் 30, 31 ஆகிய இரு நாட்களில் கொண்டாடப்படுகிறது. சகோதரர்களுக்கு ராக்கி கயிறு கட்டுவதற்காக சுப முகூர்த்த நேரம் பற்றிய விவரங்கள் தெரியுமா?
இந்திய கலாச்சாரத்தில், எல்லா மனித உறவுகளையும் போற்றவும் கொண்டாடவும் பண்டிகைகள் உள்ளன. அந்த வகையில் சகோதரப் பிணைப்பை உறுதி செய்யும் வகையில் ரக்ஷாபந்தன் கொண்டாடப்படுகிறது. இந்த விழா ஆண்டுதோறும் ஆவணி மாதம், பௌர்ணமி தினத்தில் வருகிறது.

இந்த ஆண்டு கூடுதல் சிறப்பாக ரக்ஷாபந்தன், ஆகஸ்ட் 30 மற்றும் 31 ஆகிய இரண்டு நாட்களும் கொண்டாடப்பட உள்ளது. ரக்ஷாபந்தன் நாளில், சகோதர சகோதரிகள் ஒருவருக்கொருவர் தங்களது அன்பைப் பரிமாறி, நேசத்தை உறுதி செய்து சகோதரத்துவத்தைக் கொண்டாடுகிறார்கள்.
ராக்கி அணிவித்தல்: அதன் அடையாளமாக சகோதரிகள் தங்கள் சகோதரர்களின் கைகளில் ராக்கி கட்டி, அவர்களின் நெற்றியில் திலகம் பூசிவிடுவார்கள். சகோதரர்கள் தங்கள் சகோதரிகளைப் பாதுகாப்பதாகவும், அவர்களை நேசிப்பதாகவும் பரிசுப்பொருட்களைக் கொடுத்து உறுதியளிக்கிறார்கள்.
மகாபாரதத்தில் ஒருமுறை கிருஷ்ணரின் கையில் இருந்து வழிந்த ரத்தத்தை தடுப்பதற்காக திரெளபதி தனது புடவையை கிழித்து கட்டுப் போட்டாள். இது கிருஷ்ணரின் மனதை நெகிழச் செய்தது. அன்று முதல் திரெளபதியை தனது சகோதரியாக ஏற்று, எப்போதும் அவளுக்கு பாதுகாப்பாக இருப்பேன் என கிருஷ்ணர் வாக்குறுதி அளித்தார். அதன்படியே கௌரவர்கள் திரௌபதியை துகிலுரிக்க முயன்றபோது அவள் கிருஷ்ணா என குரல் எழுப்ப, அவளது மானத்தைக் காப்பாற்றினார் கிருஷ்ணர். அதன் நினைவாகவே ரக்ஷா பந்தன் கொண்டாடப்படுகிறது.
ராக்கி அணிவதற்கான நல்ல நேரம்: இந்த ஆண்டு, ரக்ஷா பந்தன் இரண்டு நாட்கள் கொண்டாடப்படுகிறது, இதனால் ராக்கி கட்டுவதற்கான சிறந்த நேரம் குறித்து சில குழப்பங்கள் உள்ளன. பந்தரகல் எனப்படும் முகூர்த்த நேரத்திலேயே சகோதரிகள், தங்களின் சகோதரர்கள் கைகளில் ராக்கி கட்ட வேண்டும். மற்ற நேரங்களில் ராக்கி கட்டுவது அபசகுனமாகக் கருதப்படுகிறது.
அதேபோல, பத்ரகாலம் என்ற நேரத்தில் ராக்கி கட்டக்கூடாது. அது அபசகுணமாக கருதப்படுகிறது. பத்ர காலத்தில் ராவணனுக்கு சூர்ப்பணகை ராக்கி கட்டினார். ராவணணின் அழிவுக்கு பத்ர காலத்தில் சூர்ப்பணகை ராக்கி கட்டியதே காரணம் என்று நம்பப்படுகிறது.
முகூர்த்த நேரம்: பத்ரகாலம் ஆகஸ்ட் 30ஆம் தேதி காலை 10.58 முதல் இரவு 9.51 வரை இருக்கிறது. பந்தரகல் எனும் சுபமுகூர்த்த நேரம் இந்த ஆண்டு ஆகஸ்ட் 30ஆம் தேதி இரவு 9.02 மணிக்குத் துவங்குகிறது. அதனால் இந்த சமயத்தில் ராக்கி அணிவிக்க வேண்டும். ஆகஸ்ட் 30ஆம் தேதி சகோதரர்களுக்கு ராக்கி அணிவிக்க நினைப்பவர்கள் இரவு 09.05 முதல் 10.48 வரையிலான நேரத்தை பயன்படுத்திக் கொள்ளலாம்.
ஒருவேளை இந்த முகூர்த்த நேரத்தில் தங்களின் சகோதரருக்கு ராக்கி அணிவிக்க முடியாதவர்கள் அடுத்த நாளான ஆகஸ்ட் 31ஆம் தேதி ராக்கி அணிவிக்கலாம். அக்டோபர் 31ஆம் தேதி காலை 06.20 முதல் 07.50 வரையிலான நேரமும், அதற்கு பிறகு காலை 11.10 முதல் மாலை 3.50 வரையிலான நேரமும், மாலை 05.30 முதல் 07.05 வரையிலான நேரமும் ராக்கி அணிவிப்பதற்கான நல்ல நேரமாக கணிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications