தேசிய நினைவு சின்னமாக ராமர் பாலம் அறிவிக்கப்பட வேண்டும்.. மத்திய அமைச்சர் பிரகலாத் பட்டேல் கருத்து!
சென்னை: ராமர் பாலம் தேசிய நினைவுச் சின்னமாக அறிவிக்கப்பட வேண்டும் , உலக பாரம்பரிய சின்னம் என்ற பட்டியலில் ராமர் பாலம் இடம் பெற நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று மத்திய கலாச்சார மற்றும் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் பிரகலாத் பட்டேல் தெரிவித்துள்ளார்.
டைம்ஸ் ஆப் இந்தியா ஆங்கில நாளிதழுக்கு அவர் அளித்துள்ள சிறப்பு பேட்டியில் இந்த தகவலை தெரிவித்துள்ளார் .
ராமர் பாலத்தை தேசிய நினைவுச் சின்னமாக அறிவிக்க வேண்டும் என்ற ஒரு கோரிக்கை நீண்ட காலமாக இருந்து வருகிறது. தனிப்பட்ட முறையில் எனக்கும் அதில் விருப்பம் இருக்கிறது. அது மட்டும் கிடையாது உலக பாரம்பரிய நினைவுச் சின்னங்கள் பட்டியலில் ராமர் பாலம் சேர்க்கப்பட வேண்டும்.

ஏற்கனவே ராமர் பாலம் தொடர்பாக ஆய்வுகள் நடைபெற்று வருகின்றன. அது தொடர்பாக விரிவான ஆய்வுகள் நடத்தப்பட வேண்டும். இவ்வாறு மத்திய அமைச்சர் தெரிவித்துள்ளார்.
ராமர் பாலம் என்பது தமிழகத்தின் ராமேஸ்வரம் மற்றும் இலங்கை ஆகிய பகுதிகளுக்கு இடையே கடல் பகுதிக்குள் இருக்கக்கூடிய ஒரு திட்டு போன்ற பகுதியாகும். ராமாயணத்தில் ராமர் வானரப் படைகளின் உதவியோடு இலங்கை சென்றதாக தகவல் இடம் பெற்றுள்ளது. அப்போது ராமருக்கு வானரங்கள் கல் எடுத்து கொடுத்து உதவி செய்து கடலுக்குள் பாலம் அமைக்கப்பட்டதாக ராமாயணம் தெரிவிக்கிறது.
இந்த நிலையில்தான் தற்போதைய செயற்கைக்கோள் ஆய்வு முடிவுகளும் அந்த பகுதியில் திட்டு போன்ற அமைப்பு இருப்பதாக தெரிவித்துள்ளன. ஆனால் சேது சமுத்திர திட்டத்தை செயல்படுத்தி அந்த வழியாக கப்பல் போக்குவரத்து துவங்க வேண்டும் என்று ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சி காலத்தில் முயற்சிகள் செய்யப்பட்டன.
அப்படி செய்தால் ராமர் பாலம் சேதம் அடைந்து விடும் என்று கூறி பாஜக மற்றும் இந்து அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து வந்தன . இந்த நிலையில்தான் மத்திய அமைச்சர் பிரகலாத், ராமர் பாலத்தை தேசிய நினைவுச் சின்னமாக அறிவிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார். அப்படி அறிவிக்கும் பட்சத்தில், ராமர் பாலத்திற்கு சட்டப்படியான பாதுகாப்பு கிடைக்கும். இதனால், சேது சமுத்திரத் திட்டம் செயல்படுத்த முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications