மாமா மாப்பிள்ளை உறவு! மதிமுக நடத்திய நோன்பு இஃப்தார் விழா! தலையில் தொப்பியுடன் வந்த வைகோ!
சென்னை: இஸ்லாமியர்களிடம் எப்போதும் மாமா -மாப்பிள்ளை உறவுமுறை பேணக்கூடிய வைகோ, ஆண்டு தவறாமல் ரமலான் மாதத்தில் இஃப்தார் விழாவில் பங்கேற்று வருகிறார்.
இஸ்லாமியர்களின் புனித மாதமான ரமலான் மாதம் தற்போது நடைபெற்று வருகிறது. பகல் முழுவதும் உண்ணாமல், பருகாமல் நோன்பு கடைபிடிக்கும் இஸ்லாமியர்கள் மாலை சூரியன் அஸ்தமனத்துக்கு பின்னர் நோன்பு திறப்பார்கள்.
இந்த நோன்பு காலத்தில் அரசியல் கட்சிகள் சார்பில் இஃப்தார் விழாக்கள் நடத்தப்படுவது பல ஆண்டுகளாக வழக்கத்தில் இருந்து வருகிறது. அந்த வகையில் மதிமுக சார்பில் அக்கட்சியின் சிறுபான்மையினர் நல அணி ஏற்பாட்டில் இஃப்தார் எனப்படும் நோன்பு திறப்பு நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

இந்த விழாவிற்கு வந்திருந்த மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, துரை வைகோ, உள்ளிட்டோர் தலையில் தொப்பி அணிந்து துஆவில் பங்கேற்றதோடு நோன்பின் மாண்புகள் குறித்தும் எடுத்துரைத்தனர்.
இஸ்லாமிய சொற்பொழிவாளர்களே தோற்த்து போகும் அளவுக்கு நோன்பின் சிறப்புகள் குறித்து வைகோ மிக விளக்கமாக பேசி இஃப்தார் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட இஸ்லாமியர்களை வியக்க வைத்தார்.

இஸ்லாமியர்களுக்கும் தனக்கும் உள்ள பந்தம் பற்றி வைகோ பேசினார். மதிமுக நடத்திய இஃப்தார் விழாவில் சிறப்பு அழைப்பாளராக மதுரையை சேர்ந்த பிரபல வழக்கறிஞர் அஜ்மல் கான் கலந்துகொண்டார்.

வழக்கறிஞர் அஜ்மல் கானை பொறுத்தவரை மதிமுக சார்பில் பல்வேறு முக்கிய வழக்குகளில் ஆஜராகி திருப்புமுனை தீர்ப்புகளை பெற்றுக் கொடுத்தவர். நியூட்ரினோ, ஸ்டெர்லைட் விவகாரத்தில் மதிமுக சார்பில் ஆஜரானவர்.
மதிமுக சிறுபான்மையினர் நல அணி செயலாளராக இருந்த முராது புகாரி சில மாதங்களுக்கு முன்னர் காலமான நிலையில், இந்தாண்டு மதிமுக சார்பில் இஃப்தார் விழா நடக்குமா நடக்காதா என்ற பெரிய குழப்பம் நிலவி வந்தது.
ஆனால் குழப்பத்திற்கே வேலையில்லை என்பதை போல், வழக்கம் போல் எழும்பூர் சிராஜ் மஹாலில் மதிமுகவின் இஃப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சியை நடத்தி முடித்துள்ளார் வைகோ.












Click it and Unblock the Notifications