Tasmac:அரசின் 2000 ரூபாயை பறிக்க எத்தனை மனைவிகளின் மண்டைகள் கணவன்களால் உடைய போகிறதோ?.. ராமதாஸ் வேதனை
சென்னை: நெஞ்சு பொறுக்குதில்லையே, மதுக்கடைகளின் முன் குவியும் மதி கெட்ட மனிதரை நினைத்துவிட்டால் என பாமக நிறுவனர் ராமதாஸ் வேதனை தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட பேஸ்புக் பதிவில், தமிழ்நாடு கொரோனா கொடுமையிலிருந்து மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்பிவிட்டது. இதை யார் சொன்னார் என்று கேட்காதீர்கள்! இன்று (நேற்று) காலை 10.00 மணிக்கு தமிழ்நாட்டின் 27 மாவட்டங்களில் மதுக்கடைகள் திறக்கப்பட்டு விட்டன. பல இடங்களில் கடை வாசலில் தேங்காய் உடைக்கப்பட்டு, பூசணிக்காய் நசுக்கப்பட்டு, பத்தி கொளுத்தி, சாம்பிராணி போட்டு வணிகம் தொடங்கப்பட்டிருக்கிறது.

குடியே தெய்வம்
குடிக்க வைக்கும் தொழிலே தெய்வம் என்று அரசு நினைப்பது தான் இதற்கு காரணமாகும். மதுக்கடை முன் பல மணி நேரம் காத்திருந்த குடிமகன்கள் கடை திறந்த உடனே மதுவை வாங்கி, மடியில் கட்டிக் கொண்டு வந்திருந்த மிக்சர், ஊறுகாய் உள்ளிட்ட பொருட்களின் துணையுடன் ஊத்திக் குடித்து விட்டு மகிழ்ச்சியில் தாண்டவமாடும் காட்சியைப் பார்க்க முடிகிறது.

இரண்டு கிலோ மீட்டர்
இந்தியாவில் எதற்காகவும் பார்க்க முடியாத அளவுக்கு மது வாங்குவதற்காக இரண்டு கிலோ மீட்டர் தொலைவுக்கு வரிசையில் காத்திருக்கிறார்கள் குடிமகன்கள் கோயிலில் நிற்கும் கூட்டத்தினரிடையே கூட சில நேரங்களில் கூச்சல் எழும். ஆனால் இங்கு கூச்சல் எதுவும் இல்லை. சத்தம் போட்டால் சரக்கு இல்லை என்று சொல்லிவிடுவார்களோ என்ற அச்சம்.

பெரிய சிக்ஸர்
இதை விட பெரிய சிக்சரை தமிழக அரசால் அடிக்க முடியாது. சும்மாவா.... தமிழ்நாட்டின் மானத்தை எல்லைகளைக் கடந்து ஏலம் விட்டுக் கொண்டிருக்கிறதே? மதுக்கடைகளில் கூடி நிற்பவர்களில் 99 விழுக்காட்டினர் நேற்று வரை வீட்டுக்கு அரிசி வாங்கவும், குழம்புக்கு காய்கறி வாங்கவும் காசு இல்லை என்று புலம்பிக் கொண்டிருந்தவர்கள்தான்.

பணம் இல்லை
இப்போது அவர்களுக்கு எப்படி காசு வந்தது? யாருக்கும் பெரிதாக எந்த வேலையும் இல்லை. இத்தகைய சூழலில் குடிமகன்கள் குடித்து மகிழவும், தமிழக அரசு வருவாய் ஈட்டிப் பார்க்கவும், அரசுக்கு ஆதரவான மது ஆலை அதிபர்கள் கல்லா கட்டவும் எத்தனைக் குடும்பங்களின் மனைவிகளின் தாலி அடகுக் கடைகளுக்கு போனதோ....? அரிசி வாங்க வைத்திருந்த பணம் டாஸ்மாக்குக்கு சென்று விட்டதால் எத்தனைக் குடும்பங்களில் பிள்ளைகள் பசியால் வாடுகின்றனரோ?

எத்தனை பேரின் மண்டை
நாளை (இன்று) முதல் அரசு வழங்கவுள்ள ரூ.2000-ஐக் கைப்பற்ற எத்தனை மனைவியரின் மண்டைகள் கணவர்களால் உடைக்கப்பட விருக்கின்றனவோ? அதைப்பற்றியெல்லாம் ஆட்சியாளர்களுக்கு என்னக் கவலை... அவர்களைப் பொறுத்தவரை மது ஆலை அதிபர்களும், தொழிலதிபர்களும் மகிழ்ச்சியாக இருந்தால் போதுமானது. ஏனென்றால் .... இது அவர்களுக்கான அரசு தானே? மீண்டும் சொல்கிறேன்.... நெஞ்சு பொறுக்குதில்லையே.... மதுக்கடைகளின் முன் குவியும் மதிகெட்ட மனிதர்களையும், மது விற்றுப் பிழைக்கும் மாநில அரசையும் நினைந்து விட்டால்! என்றுள்ளார்.












Click it and Unblock the Notifications