“நான்தான் தலைவர்.. முறைப்படி பொறுப்பேற்றுக்கொண்டேன்” தேர்தல் ஆணையத்திற்கு ராமதாஸ் கடிதம்!
சென்னை: ராமதாஸுக்கும், அன்புமணிக்கும் இடையேயான மோதல் உச்சக்கட்டத்தை எட்டியிருக்கிறது. சமீபத்தில் நடந்த பாமக நிர்வாகக் குழுக் கூட்டத்தில், அன்புமணியை நிர்வாகக் குழு உறுப்பினர் பதவியில் இருந்து ராமதாஸ் நீக்கியிருந்தார். இந்நிலையில், கட்சியின் தலைவர் ராமதாஸ்தான் என்று குறிப்பிட்டு தேர்தல் ஆணையத்திற்கு ராமதாஸ் தரப்பில் கடிதம் அனுப்பப்பட்டிருக்கிறது.
அதில், "பாமக தலைவராக அன்புமணியின் பதவிக்காலம் மே 28 உடன் நிறைவடைந்துவிட்டது. பாமக சட்ட விதிகளின்படி, அடுத்த நாள், அதாவது மே 29-ல், ராமதாஸ் தலைவராக பொறுப்பேற்றுக் கொண்டார்" என்று இந்திய தலைமை தேர்தல் ஆணையத்திற்கு அனுப்பப்பட்ட கடிதத்தில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

கட்சியின் தலைமை பதவியை யார் கைப்பற்றுவது என்று பாமக நிறுவனரான ராமதாஸுக்கும், அன்புமணிக்கும் இடையே மோதல் போக்கு வெடித்திருந்தது. கூட்டங்களில் அன்புமணியின் பேச்சுக்கு ராமதாஸ் மறுப்பு தெரிவிப்பதும், அதற்கு எதிராக அன்புமணி குரல் எழுப்பியிருந்ததும் சலசலப்பை ஏற்படுத்தியிருந்தது. அதேபோல, ராமதாஸின் ஆதரவாளர்களை அன்புமணி நீக்குவதும், அடுத்த நாளே நீக்கப்பட்டவர்களை ராமதாஸ் மீண்டும் அதே பொறுப்பில் இணைப்பதும் தொடர்ந்து.
ஒரு கட்டத்தில் இந்த மோதல்கள் உச்சத்தை எட்டின. அன்புமணி கூட்டணி குறித்து தன்னை கட்டாயப்படுத்தியதாக ராமதாஸ் பொதுவெளியில் போட்டு உடைத்தார். இனி வரும் காலங்களில் கட்சி தன்னுடைய கட்டுப்பாட்டில்தான் இருக்கும் என்றும், விருப்பமுள்ளவர்கள் இருக்கலாம், விருப்பம் இல்லாதவர்கள் கிளம்பலாம் என்றும் ராமதாஸ் அதிரடியாக கூறியிருந்தார். மட்டுமல்லாது இனி அன்புமணி தலைவராக தொடரமாட்டார் என்றும் கூறியிருந்தார்.
இப்படி இருக்கையில்தான் கடந்த 5-ம் தேதி நடந்த பாமக நிர்வாக குழுக் கூட்டத்தில், அன்புமணியை நிர்வாக குழு உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கியிருந்தார் ராமதாஸ். இதனை தொடர்ந்து தற்போது தேர்தல் ஆணையத்திற்கு கடிதம் அனுப்பப்பட்டிருக்கிறது. அதில் ராமதாஸ்தான் இனி தலைவராக தொடர்வார் என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது.
நிர்வாக குழு கூட்டத்தில் 25 தீர்மானங்கள் போடப்பட்டிருந்தன. பாமகவில் கூட்டணி உட்பட அனைத்து நிலையிலும் முடிவெடுக்கும் அதிகாரம் நிறுவனர் மற்றும் தலைவரான ராமதாஸ், கட்சிக்கு களங்கம் ஏற்படுத்தும் அன்புமணி மீது நடவடிக்கை எடுக்க ராமதாஸூக்கு முழு அதிகாரம் வழங்குவது ஆகியவை இந்த தீர்மானங்களில் ஒன்றாக குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த தீர்மானத்தின் நகல் தலைமை நிர்வாக குழு கூட்டம் மற்றும் மாநில செயற்குழுக் கூட்டத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
அதேபோல இந்த கடிதத்தை ஏற்க கூடாது என்றும், ராமதாஸ் தலைமையில் நடைபெற்ற செயற்குழு கூட்டத்தை அங்கீகரிக்க கூடாது என்றும் தேர்தல் ஆணையத்திற்கு அன்புமணி மின்னஞ்சல் மூலம் வலியுறுத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.












Click it and Unblock the Notifications