ராமதாஸ் சர்ப்ரைஸ்.. அப்ப மகனுக்கு எதிராகவே களமிறங்குகிறாரா? தைலாபுரத்தில் பாமக இன்று கூட்டணி முடிவு
சென்னை: தமிழ்நாடு அரசியல் களத்தில் பாட்டாளி மக்கள் கட்சியின் தற்போதைய உட்கட்சி பூசல்களும் கூட்டணி குறித்த குழப்பங்களும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.. அக்கட்சியின் எதிர்காலத்தை தீர்மானிக்கும் மிக முக்கியமான ஆலோசனைக் கூட்டம் இன்று தைலாபுரம் தோட்டத்தில் நடந்து வருகிறது.. யாருடன் கூட்டணி என்பதை தீர்மானிக்க கூடிய கூட்டமாகவும் இது இருக்க போவதால் மிகுந்த எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது..
பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனரான டாக்டர் ராமதாஸுக்கும் அவரது மகனும் அக்கட்சியின் தலைவருமான டாக்டர் அன்புமணி ராமதாஸுக்கும் இடையே நிலவி வரும் அதிகாரப் போட்டி தற்போது உச்சகட்டத்தை எட்டியுள்ளது..

கட்சி யாருக்கு சொந்தம் என்ற விவாதங்களுக்கு மத்தியில் இருவரும் தனித்தனி அணிகளாகச் செயல்படத் தொடங்கியுள்ளது தொண்டர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.. குறிப்பாக அன்புமணி ராமதாஸ் ஏற்கனவே அதிமுக மற்றும் பாஜக. அங்கம் வகிக்கும் கூட்டணியில் இணைந்துவிட்ட நிலையில் ராமதாஸ் தரப்பு தங்களது அரசியல் நிலைப்பாட்டை எடுக்க முடியாமல் திணறி வருகிறது..
விசிக, பாமக
திமுக தலைமையிலான கூட்டணியில் இணைய ராமதாஸ் தரப்பு ஆர்வம் காட்டினாலும் அங்கு ஏற்கனவே உள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சி கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.. பாமக . உள்ளே வந்தால் நாங்கள் கூட்டணியை விட்டு வெளியேறுவோம் என விசிக திட்டவட்டமாகக் கூறிவிட்டதால் அந்த கதவும் ராமதாஸ் தரப்பிற்கு அடைக்கப்பட்டுள்ளதாகவே கருதப்படுகிறது..
அதேவேளையில் அன்புமணி ராமதாஸ் அதிமுக கூட்டணியில் இருப்பதால் தார்மீக அடிப்படையில் அங்கு செல்வதிலும் ராமதாஸ் தரப்பிற்குப் பல சிக்கல்கள் நீடிக்கின்றன..
தைலாபுரம் தோட்டம்
இத்தகைய இக்கட்டான அரசியல் சூழலில் தனது பலத்தை நிரூபிக்கவும் அடுத்தகட்ட நகர்வை முடிவு செய்யவும் டாக்டர் ராமதாஸ் இன்றைய கூட்டத்தைக் கூட்டியுள்ளார்..
திண்டிவனம் அருகே உள்ள தைலாபுரம் தோட்டத்தில் இன்று காலை 10 மணி அளவில் தொடங்கிய இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பா.ம.க. மற்றும் வன்னியர் சங்கத்தின் மாநில மற்றும் மாவட்ட நிர்வாகிகள் பெருமளவில் கலந்து கொண்டுள்ளனர்.. இக்கூட்டத்தில் தேர்தல் வியூகங்கள் குறித்தும் யாரிடம் கூட்டணி வைப்பது அல்லது தனித்துப் போட்டியிடுவதா என்பது குறித்தும் விரிவாக விவாதிக்கப்பட உள்ளது..
முக்கிய தீர்மானங்கள்
அன்புமணியின் தன்னிச்சையான முடிவுகளுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் இந்த கூட்டத்தில் சில முக்கியத் தீர்மானங்களும் நிறைவேறியிருப்பதாக தெரிகிறது
தனது ஆதரவாளர்களின் கருத்துகளைக் கேட்டறிந்த பிறகு ராமதாஸ் தனது அரசியல் முடிவை அதிகாரப்பூர்வமாக அறிவிப்பார்.. கட்சியின் மூத்த நிர்வாகிகள் மற்றும் மாவட்டச் செயலாளர்களின் ஆதரவு யாருக்கு இருக்கிறது என்பதைப் பொறுத்தே பா.ம.க.வின் எதிர்காலப் பயணம் அமையும்.. ஒட்டுமொத்த தமிழக அரசியலும் இன்று தைலாபுரம் தோட்டத்திலிருந்து வரப்போகும் அந்த முக்கிய அறிவிப்பிற்காகக் காத்திருக்கிறது..












Click it and Unblock the Notifications