அன்புமணியுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தக் கூடாது.. அரசியல் கட்சிகளுக்கு ராமதாஸ் தரப்பு எச்சரிக்கை
சென்னை: பாமக உடனான கூட்டணிப் பேச்சுவார்த்தையை அன்புமணியுடன் நடத்தக் கூடாது என்று அக்கட்சியின் சமூகநீதிப் பேரவை தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. பாமக தலைவர் என்று கூறவோ, கட்சியின் பெயர், கொடியை பயன்படுத்தவோ அன்புமணிக்கு உரிமை இல்லை என்றும், மீறி அன்புமணியுடன் பேச்சுவார்த்தை நடத்தினால் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்படும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
பாமக நிறுவனர் ராமதாஸ் மற்றும் அன்புமணி இடையிலான மோதல் உச்சத்தில் இருக்கிறது. பாமகவின் தலைவர் பதவியில் இருந்து அன்புமணியை நீக்கிய ராமதாஸ், அந்த பதவியை தாமே எடுத்துக் கொள்வதாக அரிவித்தார். தொடர்ந்து அன்புமணி மற்றும் செளமியா அன்புமணி மீது ராமதாஸ் பல்வேறு குற்றச்சாட்டுகளை முன் வைத்து வருகிறார். இவர்களின் விவகாரம் நீதிமன்றம் வரை சென்றுவிட்டது.

பாமகவின் மாம்பழ சின்னத்திற்காக ராமதாஸ் மற்றும் அன்புமணி தரப்பில் மோதி வருகிறது. இதனால் சட்டசபைத் தேர்தலுக்குள் இவர்களுக்கு இடையில் இணைப்பு ஏற்படுவதற்கான சாத்தியம் இல்லை என்று பார்க்கப்படுகிறது. இதனிடையே அன்புமணி தரப்பு அதிமுக - பாஜக கூட்டணியில் இணைய பேச்சுவார்த்தையை நடத்தி வருகிறது. பாஜக நிர்வாகி பைஜெயந்த் பாண்டாவுடன் அன்புமணி பேசி இருக்கிறார்.
இதையடுத்து விரைவில் அதிமுக நிர்வாகிகளுடன் பேசுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் ராமதாஸ் தரப்பு டிசம்பர் 29ஆம் தேதி சேலத்தில் பாமக செயற்குழு மற்றும் பொதுக்குழுவை கூட்டி இருக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை ஜிகே மணி மற்றும் பாமக எம்எல்ஏ அருள் ஆகியோர் மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த பொதுக்குழுவில் ராமதாஸ், பாமக கூட்டணி தொடர்பான முக்கிய அறிவிப்பை வெளியிடுவார் என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் பாமகவின் சமூகநீதிப் பேரவை தரப்பில் முக்கிய விளம்பர அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. அதன்படி, அன்புமணிக்கு பாமக தலைவர் என்ற உரிமையோ, கட்சியின் பெயர், கொடி, சின்னம் பயன்படுத்தும் உரிமையோ எதுவும் இல்லை என்பது சட்டப்பூர்வமாக உறுதி செய்யப்பட்டுள்ளது.
எந்த அரசியல் கட்சியும், தனிநபரும், அமைப்பும், அன்புமணி மற்றும் வேறு எவருடனும் பாட்டாளி மக்கள் கட்சி என்ற பெயரில் அரசியல், தேர்தல் அல்லது நிர்வாக நடவடிக்கைகள் மேற்கொண்டால், அது சட்டப்படி குற்றமாகும். உயர்நீதிமன்றத் தீர்ப்பை மீறி தொடர்ந்து செயல்படுவோர் மீது, நீதிமன்ற அவமதிப்பு வழக்கு உட்பட சட்டப்படி கடுமையான நடவடிக்கை தவறாமல் மேற்கொள்ளப்படும்.
இதன் மூலம் கடைசியாக எச்சரிக்கப்படுகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் அன்புமணி தரப்பின் அடுத்தக்கட்ட நடவடிக்கை என்னவாக இருக்கும் என்ற கேள்வி எழுந்துள்ளது. மேலும் ராமதாஸ் தரப்பு திமுக நிர்வாகிகளுடன் பேச்சுவார்த்தையை நடத்தி வருவதாகவும் சொல்லப்படுகிறது. இதனால் பாமகவின் இரு பிரிவும் இரு கூட்டணியில் இடம்பெறலாம் என்ற விவாதம் தொடங்கியுள்ளது.












Click it and Unblock the Notifications