குடும்பத்தை இழுக்காதீங்க..ராமதாஸிடம் நேரடியாக சொன்ன சரஸ்வதி! ’அன்பு’ மகனை பார்க்க ஓடோடி வந்த பின்னணி
சென்னை: பாமகவின் தந்தை மகன் இடையே மோதல் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் நேற்று எதிர்பாராத விதமாக மகன் அன்புமணியை தைலாபுரத்திலிருந்து புறப்பட்டு சென்று நேரில் சந்தித்து இருக்கிறார் ராமதாஸின் மனைவி. சரஸ்வதியை அன்புமணி பாட்டினால் தாக்கினார் என ராமதாஸ் கூறிய நிலையில் கட்சி விவகாரங்களில் குடும்பத்தை பற்றி பேச வேண்டும் என ராமதாஸிடம் சொல்லிவிட்டு அன்புமணியை பார்க்க வந்தார் சரஸ்வதி என்கின்றனர் பாமகவினர்.
தமிழகத்தின் மிக முக்கிய அரசியல் கட்சிகளில் ஒன்றான பாமகவில் தற்போது தலைமை தொடர்பாக மோதல் வெடித்திருக்கிறது. பாமக அதிமுக கூட்டணியில் இணைய போவது கிட்டத்தட்ட உறுதி என சொல்லப்பட்டாலும், அதனை யார் அறிவிப்பது என்ற பிரச்சனை தான் அனைத்திற்கும் காரணம்.
வயது முதிர்வால் ராமதாஸ் ஒதுங்கி இருக்க கட்சி வேலைகளை தீவிரமாக செய்து வந்தார் அன்புமணி. அதற்கு ஏற்றார் போல் பல ஆண்டுகளுக்கு பிறகு வன்னியர் சங்க மாநாடு நடத்தி முடிக்கும் பொறுப்பு கிடைத்தது.

இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வந்த நிலையில் திடீரென அன்புமணியை தலைவர் பதவியில் இருந்து நீக்குவதாக அறிவித்தார் ராமதாஸ். தொடர்ந்து வன்னியர் சங்க மேடையில் அன்புமணி குறித்து ராமதாஸ் பேசிய கருத்துக்கள் கட்சிக்குள் பலத்த அதிர்வலைகளை ஏற்படுத்தியது. ஆனால் எதுவும் பேசாமல் அன்புமணி அமைதியாக அமர்ந்திருந்தார். அதற்குப் பிறகு வியாழக்கிழமை தோறும் செய்தியாளர்களை சந்தித்து வரும் ராமதாஸ் அன்புமணி மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன் வைத்தார்.
செளமியா அன்புமணி அரசியலுக்கு வர வேண்டாம் என்றேன் கேட்கவில்லை, பாஜக கூட்டணி வேண்டாம் என்று கேட்கவில்லை என்ன சொன்னதோடு அதிர வைக்கும் விதமாக தனது தாய் சரஸ்வதியை அன்புமணி பாட்டிலால் தாக்கினார் எனக் கூறி அதிர்ச்சி கொடுத்தார். இந்த தகவல் பாமகவினரிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. ஆனால் எனக்கு எல்லாமே என் அம்மா தான் அவர் மீது ஒரு துரும்பு விழுந்தால் கூட என்னால் தாங்க முடியாது என தந்தையின் பேச்சுக்கு மறுப்பு தெரிவித்து இருந்தார் அன்புமணி.
அடுத்தடுத்து ஒவ்வொரு நாளும் மோதல் உச்சத்தை நோக்கி தான் சென்று கொண்டிருக்கிறது. அன்புமணி ஆதரவு நிர்வாகிகள் ராமதாஸால் நீக்கப்படுவதும் அவர்கள் மீண்டும் கட்சியில் பதவியில் தொடர்கிறார்கள் என அன்புமணி அறிக்கை விடுவதுமாக சென்று கொண்டிருக்கிறது. தற்போதைக்கு தேர்தல் ஆணையம் வரை விவகாரம் சென்றிருக்கிறது. இது ஒரு புறம் இருக்க கடந்த சில தினங்களுக்கு முன்பு தைலாபுரம் தோட்டத்திற்கு சென்று அன்புமணி தனது தாயை சந்தித்து வந்தார்.
இந்த நிலையில் நேற்று திடீரென தைலாபுரத்தில் இருந்து புறப்பட்ட ராமதாஸின் மனைவியும் அன்புமணியின் தாயுமான சரஸ்வதி நேரடியாக அன்புமணியின் வீட்டுக்குச் சென்றார். காரில் இருந்து கண்ணீர் மல்க இறங்கிய அவரை கட்டியணைத்து அன்புமணி வரவேற்றார். தொடர்ந்து அன்புமணி, அவரது மனைவி சௌமியா அன்புமணி, மகள்கள், மருமகன்கள், பேரன்கள் சரஸ்வதியிடம் ஆசி பெற்றனர். தொடர்ந்து இருவரும் தனியே சந்தித்து பேசி நிலையில் இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியானது.
இந்நிலையில் சரஸ்வதி - அன்புமணி சந்திப்பின் பின்னணி குறித்து விசாரித்த போது பாமகவினர் சில தகவல்களை பகிர்ந்து கொண்டனர். குடும்பத்தில் இருக்கும் மூன்று குழந்தைகளின் அன்புமணி மீது எப்போதுமே சரஸ்வதிக்கு பிரியம் அதிகம். எப்போதும் அவரை அன்பு என்றுதான் அழைப்பார். குடும்பத்தில் சில விவகாரங்கள் நடப்பது சகஜம் தான். ஆனால் பாட்டிலால் தாக்கினார் என்றெல்லாம் ராமதாஸ் பேசியது சரஸ்வதியின் கவனத்திற்கு சென்ற நிலையும் கட்சி விவகாரத்திற்காக குடும்ப பிரச்சினையை ஏன் இழுக்க வேண்டும் என கேட்டாராம்.
மேலும் மகள்களிடமும் கட்சி விவகாரத்தில் தலையிடக்கூடாது எனக் கூறிய சரஸ்வதி, நேரடியாக அன்புமணி வீட்டுக்கு சென்று அதே கருத்தை வலியுறுத்தியதாக சொல்லப்படுகிறது. இதுவரை குடும்பத்தை பற்றி அன்புமணி எதுவும் பேசாத நிலையில் ராமதாஸின் செயல்பாடுகள் தான் நேர்மாறாக இருக்கிறது" என்கின்றனர்.
அது மட்டும் அல்லாமல் சௌமியா அரசியலுக்கு வரக்கூடாது என சொன்ன ராமதாஸ் ஏன் மகள் காந்தியை மேடையேற்ற வேண்டும் என கேள்வி எழுப்புகின்றனர். குடும்ப விவகாரம் கட்சி விவகாரமாக மாறிய நிலையில், தற்போது கட்சியில் ஏற்பட்ட பிரச்சனையை முடித்து வைக்க குடும்ப உறுப்பினர்களே களமிறங்கி இருக்கின்றனர். குறிப்பாக இதுவரை அரசியலில் தலை காட்டாத சரஸ்வதி முதன்முறையாக கட்சி விவகாரம் தொடர்பாக தந்தை மகன் இடையே பேசி இருப்பதாக சொல்லப்படுகிறது.












Click it and Unblock the Notifications