மின் உற்பத்தியில் தமிழகம் தன்னிறைவு பெற இதுதான் வழி... அரசுக்கு யோசனை கூறும் ராமதாஸ்..!
சென்னை: மரபுராசாரா மின்னுற்பத்தி திட்டத்தின் மூலம் மட்டுமே மின் உற்பத்தியில் தமிழகம் தன்னிறைவு பெறமுடியும் என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
மேலும், ஐ.நா. காலநிலை மாற்ற மாநாட்டில் அனல் மின்னுற்பத்தி நிலையங்களைப் படிப்படியாக மூடப் போவதாக 40 நாடுகள் அறிவித்திருப்பது வரவேற்க வேண்டிய ஒன்று என பாராட்டியுள்ளார்.
இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;

ராமதாஸ் வரவேற்பு
ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ நகரில் நடைபெற்று வரும் ஐ.நா. காலநிலை மாற்ற மாநாட்டில் வரலாற்று சிறப்புமிக்க முடிவு எடுக்கப்பட்டிருக்கிறது. சுற்றுச்சூழல் மாசுபடுவதைக் கட்டுப்படுத்தும் நோக்கத்துடன் நிலக்கரியை எரிபொருளாகக் கொண்ட அனல் மின்னுற்பத்தி நிலையங்களைப் படிப்படியாக மூடப் போவதாக 40 நாடுகள் அறிவித்திருக்கின்றன. அந்த நாடுகளின் பட்டியலில் இந்தியா இல்லை என்றாலும் கூட இந்த முடிவு மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது. உலகைக் காக்கும் இந்த முடிவு வரவேற்கத்தக்கது.

20 நாடுகள்
இந்தியா உள்ளிட்ட நாடுகளும் இந்த முடிவை எடுத்திருக்க வேண்டும். இந்தியாவும் சீனாவும் தான் உலகின் ஒட்டுமொத்த நிலக்கரியில் மூன்றில் இரு பங்கை பயன்படுத்துகின்றன. உலகில் மிக அதிகளவில் மின்சாரம் உற்பத்தி செய்யும் 20 நாடுகள் குழுவில் இடம் பெற்றுள்ள இந்தோனேஷியா, தென்கொரியா, வியட்நாம், போலந்து, உக்ரைன் ஆகிய 5 நாடுகள் நிலக்கரி மின்னுற்பத்தியை கைவிடுவதாக அறிவித்துள்ள நிலையில், மற்ற நாடுகளும் அந்த முடிவை எடுப்பதற்கு எந்தத் தடையும் இல்லை.

பசுமை மின்சாரம்
உள்ளூர் அளவிலும் சூரிய ஒளி மின்னுற்பத்தி, காற்றாலை மின்னுற்பத்தி ஆகியவற்றை மேற்கொள்வதன் மூலம் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு இல்லாத பசுமை மின்சாரத்தை அதிக அளவில் உற்பத்தி செய்ய முடியும் என்பது மட்டுமின்றி, பொருளாதார அடிப்படையிலும் இலாபம் பெற முடியும். இதை மனதில் கொண்டு தான் ஊருக்கு ஒரு மரபுராசாரா மின்னுற்பத்தி நிலையம் என்ற வாக்குறுதியை கடந்த 2021 சட்டப்பேரவைத் தேர்தலில் பாட்டாளி மக்கள் கட்சி முன்வைத்திருந்தது.

மரபுசாரா மின் உற்பத்தி
ஒவ்வொரு ஊராட்சியிலும் சராசரியாக ரூ.2 முதல் 3 கோடியில் இத்திட்டத்தை செயல்படுத்த முடியும். இதன் மூலம் மின்னுற்பத்தியில் தமிழ்நாடு தன்னிறைவு அடைய முடியும். அதுமட்டுமின்றி, அடுத்த 10 ஆண்டுகளில் நிலக்கரியையை எரிபொருளாகக் கொண்ட மின்னுற்பத்தியை கைவிட முடியும். அதன் மூலம் புவிவெப்பமயமாதலுக்கு இந்தியா, குறிப்பாக தமிழ்நாடு ஈடு இணையற்ற பங்களிப்பைச் செய்ய முடியும்.












Click it and Unblock the Notifications