2 ஆசிரியர்களின் விஷமம்.. மீட்டிங்கில் 13 மாணவிகள் கண்ணீருடன் பரபர புகார்.. உடனே எடுக்கப்பட்ட ஆக்சன்!
சென்னை: ராமநாதபுரத்தில் பள்ளி ஆசிரியர் இருவர் மீது 13 பள்ளி மாணவிகள் பாலியல் புகார் கொடுத்த சம்பவம் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Recommended Video
தமிழ்நாட்டில் சமீப காலமாக மாணவிகளுக்கு பள்ளிகளில் பாலியல் தொல்லை கொடுக்கும் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. கோவை மாணவி, கரூர் மாணவி, சென்னை மாங்காடு மாணவி என்று வரிசையாக மாணவிகள் பலர் பாலியல் தொல்லையால் தற்கொலை செய்து கொள்ளும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன,
பள்ளி கல்வித்துறை இடையே இது மிகப்பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மாணவிகளின் தற்கொலைகளை தடுக்க பல்வேறு ஆலோசனைகளும் முடுக்கிவிடப்பட்டுள்ளன.

கூட்டம்
இந்த நிலையில் மாணவிகளின் குறைகள், புகார்களை கேட்கும் வகையில் அரசு பள்ளிகளில் கூட்டங்கள் நடத்தப்பட்டு அவர்களின் புகார்கள் பெறப்பட்டு வருகிறது. அதன்படி மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு குழுவினர் சார்பாக ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள பரமக்குடி பெருமாள் கோவில் மலை அரசு உயர்நிலைப்பள்ளியில் கூட்டம் நடத்தப்பட்டது. இதில் மாணவிகள் வெளிப்படையாக பேசலாம் என்று அதிகாரிகள் குறிப்பிட்டு இருந்தனர்.

எழுந்து நின்று கண்ணீர்
பாலியல் வன்கொடுமை குறித்து இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் திடீரென ஒவ்வொரு மாணவியாக எழுந்து புகார் அளித்தனர். 13 மாணவிகள் எழுந்து நின்று பள்ளியில் தங்களுக்கு நேரும் பாலியல் தொல்லை குறித்து பேசினர். சில மாணவிகள் அதில் கண்ணீர்விட்டபடி புகார் வைத்தனர்.

பல புகார்
பள்ளியில் வேலை பார்க்கும் கம்ப்யூட்டர் ஆசிரியர் ஆல்பர்ட் வளவன் பாபு, சமூக அறிவியல் ஆசிரியர் ராமராஜா ஆகிய இருவர் மீதும் மாணவிகள் அடுக்கடுக்காக புகார் வைத்தனர். அவர்கள் இருவரும் வகுப்பில் தவறுதலாக தொடுவதாகவும். தவறுதலாக பேசுவதாகவும், அடிப்பது போல பாலியல் ரீதியாக தாக்குதல் நடத்துவதாகவும் , போனில் தொல்லை கொடுப்பதாகவும் புகார் அளித்தனர். சில மாணவிகள் கடுமையான புகார்களை வைத்தனர். இதை கேட்ட அதிகாரிகள் நடுங்கி போனார்கள்.

விசாரணை
இதையடுத்து உடனே விசாரணையை நடத்தப்பட்டு புகார்கள் உறுதி செய்யப்பட்டது. பின்னர் போலீசில் வழக்கு பதிவு செய்து பரமக்குடி போலீசார் சமூக அறிவியல் ஆசிரியர் ராமராஜாவை கைது செய்தனர். ஆனால் அதற்குள் கம்ப்யூட்டர் ஆசிரியர் ஆல்பர்ட் வளவன் பாபு தலைமறைவானார்.

நடவடிக்கை
இரண்டு பேரும் மாணவிகளிடம் பல நாட்களாக தவறாக பேசி வந்தது விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த நிலையில் தலைமறைவாக இருக்கும் கம்ப்யூட்டர் ஆசிரியர் ஆல்பர்ட் வளவன் பாபுவை போலீசார் தேடி வருகிறார்கள். இவரை விரைவில் கைது செய்வோம் என்று பரமக்குடி போலீசார் தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications