தேசியத்தையும், தெய்வீகத்தையும் கொண்டுவர போராடும் மோடியின் வழியே இனி என் வழி.. ராம்குமார் சொல்கிறார்!
சென்னை: தேசியத்தையும், தெய்வீகத்தையும் கொண்டுவர போராடும் மோடியின் வழியே இனி என் வழி என்று பாஜகவில் இணைந்த ராம்குமார் கூறினார்.
தேசியத்தையும் தெய்வீகத்தையும் ஒன்று கலந்து நடித்தவர் சிவாஜி. மோடியும் அந்த வழியிலேயே பயணிக்கிறார் என்றும் அவர் தெரிவித்தார்.
நடிகர் சிவாஜிகணேசனின் மூத்த மகன் ராம்குமார் தனது மகன் துஷ்யந்த் உட்பட குடும்பத்தினருடன் சென்னையில் இன்று பாஜகவில் இணைந்தார்.

ராம்குமார் பாஜகவில் இணைந்தார்
நடிகர் சிவாஜிகணேசனின் மூத்த மகன் ராம்குமார் தனது மகன் துஷ்யந்த் உட்பட குடும்பத்தினருடன் சென்னையில் இன்று பாஜகவில் இணைந்தார். பாஜக மாநில தலைமையகமான கமலாலயத்தில் மாநிலத் தலைவர் எல். முருகன், கட்சியின் மேலிடப் பொறுப்பாளர் சி. டி. ரவி உள்ளிட்டோர் ராம்குமாருக்கு பாஜகவின் உறுப்பினர் அட்டையை வழங்கினார்.

சிவாஜி-மோடியும் ஒரே வழி
மேலும் குன்னூர் தொகுதி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் திமுகவை சேர்ந்த சவுந்தரபாண்டியன் கமலாலயத்தில் நடைபெற்ற விழாவில் இன்று பாஜகவில் தன்னை இணைத்து கொண்டார். பின்னர் எல்.முருகன், சி. டி. ரவி, ராம்குமார் ஆகியோர் நிருபர்களை சந்தித்தனர். அப்போது பாஜகவில் இணைந்த ராம்குமார் கூறியதாவது:- சத்ரபதி சிவாஜி ஜெய் ஜகதம்பே என்று கூறியுள்ளார். தேசியத்தையும் தெய்வீகத்தையும் ஒன்று கலந்து நடித்தவர் சிவாஜி. மோடியும் அந்த வழியிலேயே பயணிக்கிறார்.

தாமரை மலரும்
மோடியின் கரத்தை பலப்படுத்த வேண்டும். நாட்டிற்கு நாம் ஏதாவது செய்ய வேண்டும். இந்திய மக்களின் சுய மரியாதையை காக்க அவர் பல திட்டங்களை கொண்டுவந்துள்ளார். எனது தந்தையின் அரசியல் பாதை எப்படி இருந்தது என அனைவரும் அறிவர். மோடியின் வழியே இனி எனது வழி. வரும் காலத்தில் தமிழ்நாட்டில் தாமரை மலரும்

தேசியம், தெய்வீகம் வேண்டும்
காங்கிரசில் இணைந்து பயணித்த சிவாஜி பின்னர் அந்த கட்சியிலிருந்தி வெளியேறிவிட்டார் என்பதை நினைவுபடுத்த விரும்புகிறேன். பல்வேறு முதல்வருக்கும், பிரதமருக்கும் எனது தந்தை தேர்தல் பிரசாரம் செய்துள்ளார். எனவே அவர் அரசியலிலும் பெரிய தலைவர்தான். தேசியத்தையும் தெய்வீகத்தையும் மீண்டும் கொண்டுவர வேண்டி பா.ஜ.க.வில் இணைந்தோம் என்று ராம்குமார் கூறினார்.

எல்.முருகன் கூறுவது என்ன?
தமிழக பா.ஜ.க தலைவர் எல்.முருகன் கூறுகையில், ராம்குமார் தனது குடும்பத்துடன் இன்று தேசிய நீரோட்டத்தில் இணைந்துள்ளார் , குன்னூர் முன்னாள் சட்டமன்ற சவுந்தரபாண்டியனும் தன்னை பாஜகவில் இணைத்து கொண்டுள்ளார் என்றார்.
தமிழ்நாட்டில் தாமரை மலர்ந்தே தீரும் என்று பா.ஜ.க மேலிடப் பொறுப்பாளர் சி. டி. ரவி கூறினார்.












Click it and Unblock the Notifications