ரேஷனில் துவரம் பருப்பு, பாமாயில் வாங்கவில்லையா? கவலைப்படாதீங்க.. 5ம் தேதி வரை பெறலாம்.. தமிழக அரசு
சென்னை: அனைத்து நியாய விலைக் கடைகளிலும் ஆகஸ்ட் 2024 ஆம் மாதத்திற்கான துவரம் பருப்பு மற்றும் பாமாயில் ஒதுக்கீட்டினை பெறாத குடும்ப அட்டைதாரர்கள் முழுமையாகப் பெற்றுப் பயன்பெறும் வகையில், வரும் செப்டம்பர் 5 ஆம் தேதி வரையில் இந்த பொருட்களை ரேஷன் கடைகளில் பெற்றுக்கொள்ளலாம் என்று உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் ரேஷன் கடைகளில் மானிய விலைகளிலும், இலவசமாகவும் அரிசி, சீனி, பருப்பு, பாமாயில் உள்ளிட்ட பொருட்கள் வழங்கப்படுகின்றனர். இதில், துவரம் பருப்பு மற்றும் பாமாயில் இந்த மாதத்தில் முழுவதுமாக அனைவருக்கும் வழங்கப்படவில்லை என்ற புகார் எழுந்தது.

இதையடுத்து உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை நடப்பு ஆகஸ்டு மாதத்திற்கான பொருட்களை வாங்காதவர்கள் இன்று வாங்கிக் கொள்ளலாம் என்றும், வரும் 4 ஆம் தேதி வரையும் ஆகஸ்டு மாதத்திற்கான பொருட்கள் வழங்கப்படும் என்று கூறியிருக்கிறது. இது தொடர்பாக உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-
பொது விநியோகத் திட்ட குடும்ப அட்டைதாரர்கள் ஆகஸ்ட் 2024 மாதத்திற்கான துவரம் பருப்பு மற்றும் பாமாயில் செப்டம்பர் மாதம், 5 ஆம் தேதிவரை பெற்றுக் கொள்ளலாம். உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறையின் கட்டுப்பாட்டில் இயங்கும் அனைத்து நியாய விலைக் கடைகளிலும் ஆகஸ்ட் 2024 ஆம் மாதத்திற்கான துவரம் பருப்பு மற்றும் பாமாயில் ஒதுக்கீட்டினை பெறாத குடும்ப அட்டைதாரர்கள் முழுமையாகப் பெற்றுப் பயன்பெறும் வகையில், பொதுமக்களின் நன்மையினைக் கருத்தில் கொண்டு துவரம் பருப்பு மற்றும் பாமாயில் பாக்கெட்டினை வரும் செப்டம்பர் 2024, மாதம் 5 ஆம் தேதி வரையில் பெற்றுக் கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
தமிழகத்தில் 2.21 கோடி ரேஷன் அட்டைகள் உள்ளன. இவற்றில் 1.90 கோடி அட்டைகள் மூலம் அத்தியாவசிய பொருட்களை நியாய விலை கடைகளில் வழங்கி வருகிறார்கள். அரிசி, சர்க்கரை, பாமாயில், கோதுமை, மண்ணெண்ணெய் உள்ளிட்டவை இலவசமாகவும் மானிய விலையிலும் வழங்கப்பட்டு வருகின்றன.
தமிழகத்தில் ரேஷன் கடைகளில் பாமாயில், துவரம் பருப்பு ஆகியவை தலா ரூ 30- க்கு வழங்கப்பட்டு வருகிறது. கடந்த சில மாதங்களாக இந்த இரு முக்கிய பொருட்களும் கிடைக்கவில்லை என புகார் எழுந்தது. மே மாதம் முதலே இந்த பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டதாக பயனாளிகள் மத்தியில் குற்றச்சாட்டு எழுந்தது.
பிரதமரின் இலவச வீடு கட்டும் திட்டம்.. பயனாளிகளுக்கு குட் நியூஸ்.. மீண்டும் தொடங்குகிறது சர்வே
லோக்சபா தேர்தலால் நடத்தை விதிகள் அமலில் இருந்ததால் பொருட்களை கொள்முதல் செய்யவில்லை என தமிழக அரசு தெரிவித்திருந்தது. இதன்பிறகு மே மாதத்திற்கான பொருளை ஜூன் மாதம் வாங்கலாம் என தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டு இருந்தது. ஆனாலும் பல கடைகளில் போதிய இருப்பு இல்லாததால், பொருட்களை வாங்குவதில் மக்களுக்கு சிரமம் இருந்ததாக புகார்கள் எழுந்தன.
இந்த நிலையில், தான் ஆகஸ்ட் மாதத்துக்கான துவரம் பருப்பு, பாமாயிலை செப்.5 வரை குடும்ப அட்டைதாரர்கள் பெற்றுக் கொள்ளலாம் என்ற அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கிடையே, இன்று அனைத்து ரேஷன் கடைகளும் திறக்கவேண்டும் என்ற உணவு பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை அறிவித்துள்ளது. ஆகஸ்ட் மாதத்திற்கான பொருட்களை வாங்காத பயனாளிகள், பயன் அடையும் விதமாக இன்று ரேஷன் கடைகளை திறக்க உத்தரவிட்டப்பட்டு இருக்கிறது.












Click it and Unblock the Notifications