வேலூர் பஸ் ஸ்டாண்டில்.. அலறவிட்ட "தக்காளி கூடை".. பேர்ணாம்பட்டு ரோட்டில் அதிர்ந்த ரேஷன்தாரர்கள்
சென்னை: வேலூர் மாவட்டத்தின் முக்கிய சாலைகளில் போலீசார் ரகசிய கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போதுதான் இந்த சம்பவம் நடந்துள்ளது.
தமிழகத்தில் ரேஷன் அரிசி கடத்தலை தடுத்து நிறுத்த, அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.. ரேஷன் பொருட்களை பதுக்குதல் குறித்து, இலவச தொலைபேசி எண்ணிற்கு தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம் என்று காவல்துறை பொதுமக்களிடம் கேட்டுக் கொண்டபடியே உள்ளது..

அதிகாரிகள்: இதைத்தவிர, உணவு பொருள் கடத்தல் பிரிவுக்கு என ஒவ்வொரு மாவட்டத்திற்கும் நுண்ணறிவு பிரிவு அலுவலர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்கள், அரிசி கடத்தலில் ஈடுபடுவோர் மீதான நடவடிக்கைகளை தொடர்ந்து எடுத்து வருகிறார்கள்.
எனினும், இதுபோன்ற அரசின் நடவடிக்கைகளால், ரேஷன் அரிசி கடத்தல்கள் குறைந்துள்ளதே தவிர முழுமையாக கட்டுப்படுத்த முடியவில்லை. ரேஷன் அரிசி அண்டை மாநிலங்களுக்கு அடிக்கடி கடத்துவதும், சம்பந்தப்பட்டவர்களை அதிகாரிகள் கைது செய்து, அரிசியை பறிமுதல் செய்வதும் வாடிக்கையாகி உள்ளது.
காட்பாடி பகுதி: சமீபத்தில்கூட, வேலூர் மாவட்டம் காட்பாடி பகுதியில், ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக, போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.. இதனால், போலீசார் சம்பந்தப்பட்ட இடத்துக்கு விரைந்து சென்றனர். காட்பாடி கிறிஸ்டியான்பேட்டை வழியாக வந்த ஒரு லாரியை மடக்கி சோதனையிட்டதில், வெறும் தக்காளி குவிக்கப்பட்டிருந்தன.
பிறகு, இன்னொரு பக்கத்தில், தக்காளிகள் நிறைந்த கூடைகள் அடுக்கிவைக்கப்பட்டிருந்தன.. அதனால், கூடைகளிலிருந்த தக்காளிகளை கீழே கொட்டி பார்த்துள்ளனர்.. அப்போதும் எதுவுமே சிக்கவில்லை. அதனால், தக்காளி அடுக்கிவைக்கப்பட்டிருந்த இடத்தை பார்த்தனர்.. அந்த தக்காளி டிரேக்களின் அடியில், சின்ன சின்ன மூட்டைகளில் ரேஷன் அரிசி இருப்பது தெரிய வந்தது.
பக்கா பிளான்: தக்காளி டிரேக்களின் அடியில் ரேஷன் அரிசியை வைத்து ஆந்திராவுக்கு கடத்தி கொண்டு போக பிளான் போட்டுள்ளனர்.. மொத்தம் 3.05 டன் அரிசியை கைபற்றிய போலீசார் 2 பேரையும் கைது செய்தனர். இதோ இப்போது மறுபடியும் இதே வேலூர் மாவட்டத்தில், இதே போன்ற தக்காளி கூடையில், ரேஷன் அரிசி கடத்தப்பட்டுள்ளது.
பேரணாம்பட்டு புத்துக்கோயில் பஸ் ஸ்டாண்டு பக்கத்தில் நேற்றிரவு, தாசில்தார் சுரேஷ்குமார், குடிமை பொருள் தனி வருவாய் ஆய்வாளர் விஜயகாந்த், மற்றும் வருவாய்த்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
குடியாத்தம்: அந்த நேரம்பார்த்து, குடியாத்தத்தில் இருந்து வி.கோட்டாவிற்கு தக்காளி லோடு ஏற்றிச்சென்ற மினிவேன் ஒன்று வந்தது.. அதனால், சந்தேகத்தின்பேரில் அந்த வேனை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர்.
அப்போது, தக்காளி லோடு இடையே 5 மூட்டைகளில், ரேஷன் அரிசியும், துவரம் பருப்பும் கடத்தி செல்வது கண்டுபிடிக்கப்பட்டது.. மொத்தம் 210 கிலோ ரேஷன் அரிசி, 60 கிலோ து.பருப்புக்கள் இருந்தன, இவற்றையும், கடத்தலுக்கு பயன்படுத்திய மினிவேனையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.
கைது நடவடிக்கை: இதையடுத்து, வேன் டிரைவர் இர்பான் கைது செய்யப்பட்டுள்ளனர். பறிமுதல் செய்யப்பட்ட வேனை டிஆர்ஓவிடமும், ரேஷன் பொருட்கள் வாணிப கிடங்கிலும் ஒப்படைக்கப்பட்டது. எவ்வளவுதான் தீவீரமான தடுப்பு நடவடிக்கைகளில் போலீசார் தொடர்ந்து ஈடுபட்டு வந்தாலும், ரேஷன் பொருட்களின் கடத்தலை முழுமையாக ஒழிக்க முடியவில்லை.











Click it and Unblock the Notifications