அரிசி குடும்ப அட்டைதாரர்களை அதிர வைத்த "தக்காளி கூடை".. வேலூர் காட்பாடி ரோட்டில் என்னாச்சு தெரியுமா?
சென்னை: வேலூர் மாவட்டம் காட்பாடியின் முக்கிய சாலைகளில் போலீசார் ரகசிய கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போதுதான் இந்த சம்பவம் நடந்தது.
தமிழகத்தில் ரேஷன் அரிசி கடத்தலை தடுத்து நிறுத்த, அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.. ரேஷன் பொருட்களை பதுக்குதல் குறித்து, இலவச தொலைபேசி எண்ணிற்கு தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம் என்று காவல்துறை பொதுமக்களிடம் கேட்டுக் கொண்டபடியே உள்ளது..

அதிகாரிகள்: இதைத்தவிர, உணவு பொருள் கடத்தல் பிரிவுக்கு என ஒவ்வொரு மாவட்டத்திற்கும் நுண்ணறிவு பிரிவு அலுவலர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்கள், அரிசி கடத்தலில் ஈடுபடுவோர் மீதான நடவடிக்கைகளை தொடர்ந்து எடுத்து வருகிறார்கள்.
எனினும், இதுபோன்ற அரசின் நடவடிக்கைகளால், ரேஷன் அரிசி கடத்தல்கள் குறைந்துள்ளதே தவிர முழுமையாக கட்டுப்படுத்த முடியவில்லை. 2 நாட்களுக்கு முன்புகூட, பொள்ளாச்சியில் இருந்து கேரளாவிற்கு கடத்த முயன்ற 800 கிலோ ரேஷன் அரிசியை அதிகாரிகள் பறிமுதல் செய்திருக்கிறார்கள்.. இது தொடர்பாக 2 பேரையும் கைது செய்துள்ளனர்..
அதேபோல, திருச்சி ரோட்டில் 450 கிலோ ரேஷன் அரிசி கொட்டிக் கிடந்துள்ளது.. இதோ இப்போது இன்னொரு பகீர் சம்பவம் நடந்துள்ளது.
காட்பாடி ரோடு: வேலூர் மாவட்டம் காட்பாடி பகுதியில், ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக, போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.. எனவே, உணவு கடத்தல் தடுப்புப்பிரிவு டிஎஸ்பி நந்தகுமார் உத்தரவின்பேரில் போலீசார் விரைந்து சென்றனர். காட்பாடி கிறிஸ்டியான்பேட்டையில், வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சந்தேகப்படும்படி ஒரு லாரி வந்துள்ளது.. அந்த லாரியை மடக்கி சோதனையிட்டதில், வெறும் தக்காளிகள் குவிக்கப்பட்டிருந்தன.
பிறகு, இன்னொரு பக்கத்தில், தக்காளிகள் நிறைந்த கூடைகள் அடுக்கிவைக்கப்பட்டிருந்தன.. எனவே, கூடைகளிலிருந்த தக்காளிகளை கீழே கொட்டி பார்த்துள்ளனர்.. அதில், எதுவுமே சிக்கவில்லை. எனவே, தக்காளி அடுக்கிவைக்கப்பட்டிருந்த இடத்தை பார்த்தனர்.. தக்காளி அடுக்கி வைக்கப்பட்ட தக்காளி டிரேக்களின் அடியில், சின்ன சின்ன மூட்டைகளில் ரேஷன் அரிசி இருப்பது தெரிய வந்தது.
பக்கா பிளான்: இந்த ரேஷன் அரிசியை ஆந்திராவுக்கு கடத்தி கொண்டு போக பிளான் போட்டுள்ளனர்.. யாருக்கும் சந்தேகம் வந்துவிடக்கூடாது என்பதற்காக, வேலூருக்கு தக்காளி ஏற்றி வரும் லாரியையே பிடித்து, அந்த தக்காளி டிரேக்களின் அடியில் ரேஷன் அரிசியை வைத்து கடத்த முயன்றுள்ளதும் தெரிய வந்தது. இதையடுத்து லாரியுடன், அரிசியையும் போலீசார் கைப்பற்றினர்.
மொத்தம் 3.05 டன் ரேஷன் அரிசி இருந்திருக்கிறது.
இந்த கடத்தலில் ஈடுபட்ட மனோகர் 43, ஜெகதீஷ் 33 ஆகிய 2 பேரையும் கைது, வேலூர் ஜெயிலில் அடைத்தனர். ஆனால், 3 பேர் தப்பியோடிவிட்டனர்.. அவர்களை தேடிவரும் போலீசார், கைப்பற்றப்பட்ட அரிசி மூட்டைகள் வேலூர் சிவில் சப்ளை குடோனில் ஒப்படைத்தனர்.











Click it and Unblock the Notifications