Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

மண்ணெண்ணெய் + கோதுமை அளவு ரேஷன் கடைகளில் குறைப்பு?.. புட்டு புட்டு வைத்த திமுக அமைச்சர்.. என்னவாம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ்நாட்டை மத்திய அரசு தொடர்ந்து வஞ்சிக்கிறது என்று உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி குற்றஞ்சாட்டி உள்ளார்.

நேற்றைய தினம், தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது, மண்ணெண்ணெய் மற்றும் கோதுமை ஒதுக்கீட்டு அளவினை மத்திய அரசு குறைத்துவிட்டதாக கூறியிருந்தார்.

 Ration card: shortage of kerosene and wheat in ration shops and what did Food minister sakkarapani say

அமைச்சர் பேட்டி: அமைச்சர் தந்த முழுபேட்டி இதுதான்: "தமிழ்நாட்டிற்கு ஒன்றிய அரசால், ஒதுக்கீடு செய்யப்பட்டு வரும் மண்ணெண்ணெய் அளவு, கடந்த 2006ம் ஆண்டு ஏப்ரலில் மாதம் ஒன்றிற்கு 59,852 கிலோ லிட்டராக இருந்தது. இந்த ஒதுக்கீடு படிப்படியாகக் குறைக்கப்பட்டு கடந்த 2021 ஏப்ரல் முதல் தேதியில் இருந்து, மாதம் ஒன்றிற்கு 7536 கிலோ லிட்டர் ஒதுக்கீடு செய்யப்பட்டது. மறுபடியும் 2022ம் ஆண்டு, ஏப்ரல் 1ம் தேதி முதல் அதுவும் குறைக்கப்பட்டு, மாதம் ஒன்றிற்கு 4520 கிலோ லிட்டர் ஒதுக்கீடு செய்யப்பட்டது.

பிறகு கடந்த வருடம் ஏப்ரல் 1ம் தேதி முதல் அதுவும் குறைக்கப்பட்டு, இப்போது மாதம் ஒன்றிற்கு 2712 கிலோ லிட்டர் மட்டுமே ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு ஒன்றிய அரசுக்கு கடிதம் எழுதியதற்கு தமிழ்நாட்டில் எரிவாயு இணைப்பு அதிகமாக இருப்பதால் ஒதுக்கீடு குறைக்கப்படுவதாக ஒன்றிய அரசின் பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு இணை அமைச்சர் இராமேஸ்வர் தேலி பதில் கடிதம் எழுதியிருந்தார்.

பதில் வரவில்லை: மறுபடியும், கடந்த மார்ச் 29ம் தேதி, ஒன்றிய அரசின் பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு மற்றும் வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற அமைச்சர் ஹர்தீப்சிங் பூரிக்கு கடிதம் எழுதியுள்ளேன். அதற்கான பதில் இன்னும் வரவில்லை.. 1996 - 2001 கழக ஆட்சியின் போது எரிவாயு இணைப்பு வழங்க கூட்டுறவு வங்கிகள் மூலமாக கடன்கள் வழங்கப்பட்டு மகளிர் பலர் பயன் அடைந்தனர். எரிவாயுக் கடன்களை திருப்பிச் செலுத்த முடியாதவர்களின் கடன்களை மறைந்த முதல்வர் கருணாநிதி, கடந்த 2007-ல் தள்ளுபடி செய்தார்,.. பிறகு, 2006 - 11 கழக ஆட்சியில் 29 லட்சம் குடும்பங்களுக்கு எரிவாயு இணைப்புகள் விலையில்லாமல் கருணாநிதி ஆட்சியில் அப்போது வழங்கப்பட்டது.

 Ration card: shortage of kerosene and wheat in ration shops and what did Food minister sakkarapani say

எரிவாயு இணைப்பு: தமிழ்நாடு அரசின் சொந்த நிதியிலிருந்து எரிவாயு இணைப்புகள் வழங்கியதால் அதிக எரிவாயு இணைப்புகள் தமிழ்நாட்டில் உள்ளன. இதைக் காண்பித்து, தமிழ்நாட்டை ஊக்கப்படுத்துவதற்குப் பதிலாக மண்ணெண்ணெய் ஒதுக்கீட்டை ஒன்றிய அரசு குறைத்துள்ளது வருத்தமளிக்கிறது. மண்ணெண்ணெய்க்கு குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்படும் மானியம் முழுவதையும் தமிழ்நாடு அரசே ஏற்றாலும் ஒதுக்கீடு செய்வது ஒன்றிய அரசாக இருப்பதால் ஒதுக்கீட்டை அதிகப்படுத்த ஒன்றிய அரசிடம்தான் கோரிக்கை வைக்க இயலும்.

தமிழக முதல்வர் ஸ்டாலினின் அனுமதியை பெற்று டெல்லி சென்று சென்று, ஒன்றிய அமைச்சரை நேரில் சந்தித்து தமிழ்நாட்டிற்கான மண்ணெண்ணெய் ஒதுக்கீட்டை அதிகப்படுத்த கோரிக்கை வைக்கப்படும். அதேபோன்று தமிழ்நாட்டிற்கான ஒன்றிய அரசின் கோதுமை ஒதுக்கீடும் குறைக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டிற்கு ஜுலை 2020 வரை மாதம்தோறும் 13,485 மெ.டன் கோதுமை ஒதுக்கீடு செய்யப்பட்டு வந்தது. இது உயர்த்தப்பட்டு ஆகஸ்ட் 2020 முதல் மே 2022 வரை மாதம் 30,647 டன் ஒதுக்கீடு செய்யப்பட்டது.

சிவில் சப்ளைஸ்: ஆனால் ஜுன் 2022 முதல் தமிழ்நாட்டிற்கான கோதுமையின் ஒதுக்கீடு வெகுவாகக் குறைக்கப்பட்டு இப்போது மாதம் ஒன்றிற்கு 8532 மெட்ரிக் டன் மட்டும் வழங்கப்பட்டு வருகிறது. இதை உயர்த்தி 23,532 மெட்ரிக் டன் வழங்கிட ஒன்றிய அரசிற்கு கடிதம் எழுதப்பட்டுள்ளது. சென்னையில் மண்ணெண்ணெய் ஒதுக்கீட்டுக் குறைவால் பாதிக்கப்பட்ட ஒரு வீட்டிற்கு நமது சிவில் சப்ளைஸ் ஆணையர் அவர்கள் காலையில் நேரடியாக சென்று கேட்டுள்ளார்.

அதற்கு அவர், "கேஸ் ஏஜென்சிக்குச் சென்று பணம் கட்டி சிலிண்டர் வாங்கக்கூடிய வசதிவாய்ப்பு எனக்கு இல்லை, மண்ணெண்ணெய் 2 லிட்டர் அல்லது 3 லிட்டர் கொடுத்தால் பரவாயில்லை" என்று சொல்லுகின்ற நிலைமைக்கு இன்றைக்கு வறுமை கோட்டிற்குக் கீழே வாழ்ந்து வருகிறார்கள். ஆனால் ஒன்றிய அரசு அதையெல்லாம் பார்க்காமல் இன்றைக்கு தமிழகத்தில் 30 லட்சம் பேருக்கு மேல் எரிவாயு இணைப்பு இல்லை என்ற நிலையிலும் இந்த ஒதுக்கீட்டைக் குறைத்திருப்பது மிகவும் வருத்தம் தரக்கூடிய செய்தியாகும்.

ஊட்டி மலைப்பகுதி:; மலைப்பகுதிகளில் அதிகம் பேர் மண்ணெண்ணெய் வைத்துதான் வாழ்க்கை நடத்துகிறார்கள். அதே மாதிரி கடந்த காலத்தில் எல்லாம் மாநகராட்சிக்கு இவ்வளவு ஒதுக்கீடு, நகராட்சிக்கு, பேரூராட்சிக்கு கொடைக்கானல், ஏற்காடு மலை, ஊட்டி போன்ற மலைப்பிரதேசத்துக்கெல்லாம் இவ்வளவு ஒதுக்கீடு என்று ஏற்கனவே ஒதுக்கீடு நிர்ணயம் செய்யப்பட்டிருந்தது. ஆனால் இன்றைக்கு அந்த ஒதுக்கீடெல்லாம் செய்ய முடியாத நிலைக்கு நாங்கள் தள்ளப்பட்டிருக்கிறோம். மண்ணெண்ணெய் ஒதுக்கீடு என்பது ஒன்றிய அரசினுடைய கட்டுப்பாட்டில் இருக்கிறது.

முதல்வர் முதல்வராக அன்றைக்கு இருந்த கலைஞர், 2007ம் ஆண்டு சிறப்புப் பொது விநியோகத் திட்டத்தைக் கொண்டுவந்து அரிசியோடு துவரம் பருப்பு, உளுந்தம் பருப்பு, பாமாயில், ஆட்டா மாவு, மைதா ரவை ஐந்து வகையான பொருள்களைப் பொதுச் சந்தையில் விலைக்கு வாங்கி குடும்ப அட்டைதாரர்களுக்கு மானிய விலையில் வழங்கிய பெருமை தலைவர் கலைஞருடைய ஆட்சிக்காலத்தைச் சாரும்.

 Ration card: shortage of kerosene and wheat in ration shops and what did Food minister sakkarapani say

முதல்வர் ஸ்டாலின்: ஆனால், 2011 ல் ஆட்சிக்கு வந்த கடந்த ஆட்சியாளர்கள், அந்த உளுந்தம் பருப்பையும், ஆட்டா மாவையும் குறைத்து விட்டார்கள். எனினும், இன்றைக்குப் பொருளாதார நெருக்கடி இருந்தாலும், நிதி சுமை இருந்தாலும், நம் தமிழக முதல்வர் ஏழை, எளிய மக்களுடைய நலன் கருதி பொது விநியோகத் திட்டத்தில் இன்றைக்கு துவரம்பருப்பு, பாமாயில், சர்க்கரை போன்ற பொருட்களையெல்லாம் வழங்கிக் கொண்டிருக்கிறார்கள்..

அதனால், மண்ணெண்ணெய் தமிழ்நாட்டின் கட்டுப்பாட்டில் இருந்திருந்தால் பருப்பு, ஆயில், இப்போது சர்க்கரை எல்லாம் நாங்கள் வாங்குவது போன்று, வாங்கி பொதுமக்களுக்கு எத்தனை லிட்டர் தேவையோ அத்தனை லிட்டர் கொடுப்பதற்கு நாங்கள் தயாராக இருக்கிறோம். ஆனால், ஒன்றிய அரசு அனுமதி வழங்கினால்தான் மண்ணெண்ணெயைக் கொடுக்க முடியும்.

பெட்ரோல் டீசல்: ஏனென்றால் பெட்ரோலாக இருந்தாலும் சரி, டீசலாக இருந்தாலும் சரி, மண்ணெண்ணெயாக இருந்தாலும் சரி, எரிவாயு இணைப்பாக இருந்தாலும் சரி ஒன்றிய அரசின் கட்டுப்பாட்டில் இருக்கின்ற காரணத்தால், இன்றைக்குப் பொதுமக்கள் பெரிதும் பாதிப்புக்கு உள்ளாகியிருக்கிறார்கள். தமிழ்நாட்டை பொறுத்தவரையிலே இன்றைக்கு விலை இல்லாமல் 30 லட்சம் பேருக்கு 2006-2011-ல் எரிவாயு இணைப்பை கொடுத்த காரணத்தால் தான், இன்றைக்கு மண்ணெண்ணெய் ஒதுக்கீட்டைக் குறைத்திருக்கிறார்கள்.

ஆனால் இதே சமயத்தில் மற்ற மாநிலங்களிலெல்லாம் அவர்கள் எரிவாயு இணைப்பைக் கொடுக்கவில்லை. கொடுக்காத மாநிலத்திற்கு மண்ணெண்ணெய் எல்லாம் கூடுதலாக தந்து வருகிறோம்.. ஆனால் நம் மாநிலத்தை பொறுத்தஅளவில் இன்றைக்கு வஞ்சிக்கப்பட்டிருக்கிறது, குறைக்கப்பட்டிருக்கிறது. பொதுமக்கள் இதனால் பெரிதும் பாதிப்புக்குள்ளாகி இருக்கிறார்கள் என்பதைத் தெரிவிக்க கடமைப்பட்டிருக்கிறேன்.
ஒரு நெல்மணிகூட: முதலமைச்சருடைய அரசு பொறுப்பேற்ற பின்பு இந்த துறையின் சார்பாக பல்வேறு நடவடிக்கைகளை நாங்கள் எடுத்துக் கொண்டிருக்கிறோம். குறிப்பாக, ஆட்சிப் பொறுப்பேற்ற பின்பு முதலமைச்சர் ஸ்டாலின் ஒரு நெல்மணி கூட மழையில் நனையக் கூடாது. நெல் வாங்கினால் உடனே அரைத்து அதை பொதுமக்களுக்குத் தரமான அரிசியாக கொடுக்க வேண்டும் என்று கூறியதால் 376 அரவை ஆலைகள் இருந்ததை, இப்பொழுது 745 அரவை ஆலைகளாக நாங்கள் உயர்த்தியிருக்கிறோம்.

கருப்பு பழுப்பு அரிசி: அனைத்து ஆலைகளிலும் கருப்பு பழுப்பு இல்லாத அரிசியாக கொடுக்க வேண்டும் என்று முடிவு செய்து அந்த அரிசியும், பாமாயில் ஆக இருந்தாலும் சரி, பருப்பாக இருந்தாலும், சர்க்கரையாக இருந்தாலும், சிவில் சப்ளை கிடங்கிற்கு வரும்போது அதை கண்காணிக்கும் அதிகாரியாக மாவட்ட வழங்கல் அலுவலர், தமிழ்நாடு நுகர்வோர் வாணிபக் கழகத்தின் RM. SRM, தரக்கட்டுப்பாட்டு அதிகாரி, கூட்டுறவுச் சங்கங்களின் இணைப்பதிவாளர் நான்கு பேர் கொண்ட ஒரு குழு நியமிக்கப்பட்டு, பொருட்கள் அரவை ஆலையில் இருந்து வந்தாலும் சரி, வேறு எங்கிருந்து வந்தாலும் சரி, வியாபாரிகளிடத்திலிருந்து வந்தாலும் தரமான பொருட்களைத் தான் வாங்க வேண்டும் மற்ற பொருட்களை வாங்கக் கூடாது.

அப்படியில்லை என்றால், அதை திருப்பியனுப்ப வேண்டும் என்று முடிவு செய்து பொதுமக்களுக்குத் தரமான பொருள்களை வழங்கிக் கொண்டிருக்கிறோம்.
திமுக ஆட்சிப் பொறுப்பேற்ற பின்பு 2020-2021-ல் 45 லட்சம் மெட்ரிக் டன் கொள்முதல் செய்யப்பட்டது. 2021-2022-ல் 43 லட்சம், இந்த ஆண்டு இதுவரை 35,50,000 மெட்ரிக் டன் கொள்முதல் செய்யப்பட்டிருக்கிறது. குறிப்பாக வருகின்ற செப்டம்பர் மாதம் முடிவதற்குள்ளாக 45 லட்சம் மெட்ரிக் டன், 50 ஆண்டுகாலத்தில் இதுவரை இவ்வளவு நெல் கொள்முதல் செய்ததாக சரித்திரமில்லை. அந்த சாதனையை இன்றைக்கு முதல்வரின் அரசு செய்திருக்கிறது என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

அதேபோல, வேலை பார்க்கின்ற தொழிலாளர் பெருமக்களுக்கு சம்பள உயர்வு வழங்கியிருக்கிறோம். தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் 1972 ஆம் ஆண்டு, மறைந்த முதல்வர் கருணாநிதி ஆட்சிக்காலத்திலே தொடங்கப்பட்டது. இது 2022 இன்றைய முதலமைச்சருடைய ஆட்சிக்காலத்தில் பொன்விழா கண்டிருக்கிறது.

தற்காலிகம் + நிரந்தரம்: அதில் வேலை பார்க்கின்ற 12,177 பேருக்கு ஊக்கத் தொகையாக தலா 1500 ரூபாய் வழங்கப்பட்டிருக்கிறது. அதே மாதிரி அதில் வேலை பார்த்து இறந்தவர்களின் வாரிசுகள் 109 பேர்களுக்கு கருணை அடிப்படையில் வேலைவாய்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது. அங்கு நீண்ட காலமாக தற்காலிகமாக வேலை பார்த்து வந்த 591 பேர்களை பணி நிரந்தரம் செய்திருக்கிறோம். இப்படி எண்ணற்ற சாதனைகளை இந்த துறை செய்திருக்கிறது என்பதையும் இந்த நேரத்தில் தெரிவித்துக் கொள்கிறேன்" என்றார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+