‛ரேஷனில் இனி பொருட்கள் எடை குறையாது’.. கூட்டுறவு சங்க பதிவாளர் போட்ட உத்தரவு.. பொதுமக்கள் ஹேப்பி
சென்னை: தமிழ்நாட்டில் ரேஷன் கடைகள் மூலம் விநியோகம் செய்யப்படும் பொருட்கள் எடை குறைவின்றி கிடைக்கும் வகையில் கூட்டுறவு சங்க பதிவாளர் முக்கிய உத்தரவை பிறப்பித்துள்ளார். இதனால் பொதுமக்கள் ஹேப்பியாகி உள்ளனர்.
தமிழ்நாட்டில் பொது விநியோக திட்டத்தின் கீழ் நியாய விலைக்கடைகளில் ரேஷன் பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன. அதன்படி அரிசி, சர்க்கரை, பாமாயில், துவரம் பருப்பு, மண்ணெண்ணை உள்ளிட்ட பொருட்கள் பொதுமக்களுக்கு வழங்கப்படுகிறது.

கடைகளில் உள்ள விலையை விட ரேஷனில் இந்த பொருட்கள் குறைந்த விலையில் விநியோகம் செய்யப்படுகிறது. அதன்படி ரேஷனில் அரிசி இலவசமாக வழங்கப்படுகிறது. பாமாயில் ஒரு பாக்கெட் ரூ.25க்கும், துவரம் பருப்பு ரூ.30க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதனால் பொதுமக்கள் பெரிதும் பயனடைந்து வருகின்றனர்.
இருப்பினும் கூட நீண்ட காலமாக ரேஷன் பொருட்கள் பொதுமக்களுக்கு எடை குறைவாக வழங்கப்படுகிறது என்ற குற்றச்சாட்டு இருந்து வருகிறது. இந்நிலையில் தான் சரியான எடையில் பொதுமக்களுக்கு ரேஷன் பொருட்கள் வழங்குவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக தமிழ்நாடு கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் சுப்பையன், சென்னை மண்டல கூடுதல் பதிவாளர் மற்றம் அனைத்து மண்டல இணைப்பதிவாளர்களுக்கு சுற்றிக்கை ஒன்றை அனுப்பி உள்ளார். அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
பொது விநியோக திட்ட பொருட்களை நகர்வு செய்யும்போது பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் பற்றி விரிவாக அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன. இதில் குறிப்பாக தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கிடங்கிலிருந்து தரம் மற்றும் எடை ஆகியவற்றை சரிபார்த்த பின்னரே அத்தியாவசிய பொருட்கள் லாரியில் ஏற்றப்பட வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மண்டலங்களில் பொது விநியோக திட்ட பொருட்களை நகர்வு செய்யும் ஒவ்வொரு வாகனத்துடனும் 60 கிலோ எடை சரிபார்க்க கூடிய மின்னணு தராசு எடுத்து செல்ல வேண்டும் எனவும், நியாய விலைக்கடைகளில் பொருட்களை இறக்கும்போது பொருட்கள் மறு எடையிட்டு நியாய விலை கடை பணியாளர்களிடம் ஒப்புதல் பெறப்படுகிறது என்பதையும் உறுதி செய்யுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேற்படி தராசுகளை சம்பந்தப்பட்ட முதன்மை சங்கங்களே வழங்க வேண்டும் எனவும், மேலும் முன்நகர்வு பணிகளை
விரைந்து துவங்க வேண்டும் என்பதற்காகவே அல்லது நகர்வு பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்பதற்காகவே சுற்றிக்கைகள் மற்றும் கடிதத்தில் வழங்கப்பட்டுள்ள அறிவுரைகளை பின்பற்றாது இருத்தல் கூடாது எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
எனவே தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக கிடங்கிலிருந்து தரம் மற்றும் எடை ஆகியவற்றை சரிபார்த்த பின்னரே அத்தியாவசிய பொருட்கள் லாரியில் ஏற்றப்படுவதையும், மேற்படி பொது விநியோக திட்ட பொருட்களை நகர்வு செய்யும் ஒவ்வொரு வாகனத்துடனும் 60 கிலோ எடையை சரிபார்க்க கூடிய மின்னணு தராசு இருப்பதையும் உறுதி செய்ய வேண்டும்.
அதோடு நியாய விலைக்கடைகளில் பொருட்களை இறக்கும்போது அவை மறு எடையிடப்பட்டு ரேஷன் கடை பணியாளர்களிடம் ஒப்படைக்கப்பட்டு ஒப்புதல் பெறப்படுகிறது என்பதையும் உறுதி செய்திட சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு உரிய அறிவுரைகள் வழங்கி பொது விநியோக திட்ட நகர்வு பணியை எவ்வித புகாருக்கிடமின்றி மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறது'' என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த உத்தரவால் பொதுமக்கள் ஹேப்பியாகி உள்ளனர். ஏனென்றால் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக கிடங்கில் ரேஷன் பொருட்கள் வாகனங்களில் ஏற்றப்படும்போதும், குறிப்பிட்ட ரேஷன் கடைகளில் அந்த பொருட்கள் இறக்கி வைக்கும்போதும் எடை போடுவதை கண்டிப்பாக கடைப்பிடிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்படி செய்யும்போது ரேஷன் கடைகளுக்கு தேவையான பொருட்கள் சரியான எடையுடன் வந்து இறங்கும். இதன்மூலம் அந்த பொருட்கள் மக்களை சென்று சேரும் என்பதால் இந்த உத்தரவை பலரும் வரவேற்றுள்ளனர்.












Click it and Unblock the Notifications