ரேஷன் கடை ஊழியர்கள் சம்பளம்.. சென்னை மண்டல கூட்டுறவு துணை பதிவாளர் சூப்பர் உத்தரவு
சென்னை: தமிழகத்தில் 36 ஆயிரத்து 954 ரேஷன் கடைகள் இயங்கி வருகின்றன. இவற்றில் பெரும்பாலான கடைகள் கூட்டுறவுத்துறையின் கீழ் செயல்பட்டு வருகின்றன. குறிப்பாக சென்னையை பொறுத்தவரை அடையாறு, பட்டினப்பாக்கம், அபிராமபுரம், மந்தைவெளி, மயிலாப்பூரில் மகளிர் பண்டக சாலைகளின் கீழ் இயங்கும் 59 ரேஷன் கடை ஊழியர்களுக்கு 2 மாதங்களாக சம்பளம் வழங்கப்படவில்லை என விற்பனையாளர்கள் கவலையில் உள்ளனர்
தமிழகத்தில் சுமார் 2.25 கோடிக்கும் மேற்பட்ட ரேஷன் கார்டுகள் உள்ளன. இவற்றுக்கு கூட்டுறவு மற்றும் உணவுத் துறையின் கீழ் செயல்படும் 36 ஆயிரத்து 954 ரேஷன் கடைகள் மூலம் அத்தியாவசியப் பொருட்கள் வழங்கப்படுகின்றன. நுகர்பொருள் வாணிப கழக கிடங்குகளில் இருந்து அனைத்து மாவட்டத்தில் உள்ள ரேஷன் கடைகளுக்கு அரிசி, பருப்பு, சர்க்கரை, கோதுமை, ஆயில் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் அனுப்பி வைக்கப்படுகிறது. தமிழகத்தில் இயங்கி வரும் ரேஷன் கடைகளில் பெரும்பாலான கடைகள் கூட்டுறவுத்துறையின் கீழ் செயல்பட்டு வருகின்றன.

ரேஷன் கடைகள் எப்படி செயல்படுகின்றன என்றால், ஆயிரம் குடும்ப அட்டைகளுக்கு குறைவாக உள்ள முழு நேரக் கடைகள் 18,782 ஆகவும், பகுதி நேரக் கடைகள் 9,388 ஆகவும், ஆயிரம் முதல் ஆயிரத்து 500 குடும்ப அட்டைகள் கொண்ட முழு நேரக் கடைகள் 4,352 ஆகவும் செயல்பட்டு வருகின்றன. இவற்றில் கூட்டுறவுத்துறையின் கீழ் செயல்படும் ரேஷன் கடைகளும் முதன்மை சங்கங்கள், சுய எடுப்பு சங்கங்கள், இணைப்புச் சங்கங்கள் என பல்வேறு பிரிவுகளின் கீழ் செயல்பட்டு வருகின்றன.
அந்த வகையில் சென்னையில் அடையாறு, பட்டினப்பாக்கம், அபிராமபுரம், மந்தைவெளி, மயிலாப்பூர் உள்ளிட்ட பகுதிகளில் 7 மகளிர் பண்டக சாலைகளின் கீழ் 59 ரேஷன் கடைகள் செயல்பட்டு வருகின்றன. இந்த கடைகளில் சுமார் 160 பேர் ஊழியர்களாக வேலை செய்கிறார்கள். இந்த 59 ரேஷன் கடைகளில் குறிப்பிட்ட சில கடைகளில் பணியாற்றும் விற்பனையாளர்கள் மற்றும் உதவியாளர்களுக்கு 2 மாதங்களாக சம்பளம் வழங்கப்படவில்லை என்று விற்பனையாளர்கள் கவலை தெரிவித்துள்னர்.
இந்த ரேஷன் கடைகளுக்கு அரசு ஒதுக்கீடு செய்யும் மானியத்தொகை வராததால் ஊழியர்களுக்கு சம்பளம் வழங்கப்படவில்லை என்று தகவல்கள் வெளியாகி உள்ளது. இதுகுறித்து சென்னை மண்டல கூட்டுறவு துணை பதிவாளர் கூறும் போது, " அடையாறு, பட்டினப்பாக்கம், அபிராமபுரம், மந்தைவெளி, மயிலாப்பூர் உள்ளிட்ட பகுதிகளில் 7 மகளிர் பண்டக சாலைகளின் கீழ் பணியாற்றும் ரேஷன் கடை ஊழியர்களுக்கான சம்பளம் எதுவும் நிலுவையில் இல்லை. ரேஷன் கடைகளுக்கான மானியம் கிடைப்பதில் தாமதம் ஏற்பட்டது. எனவே பொதுவினியோக திட்டத்தின் கீழ் வராத ஊட்டி டீ, மளிகை பொருட்கள், அரசு உப்பு போன்ற பொருட்களை விற்பனை செய்து அவற்றில் இருந்து கிடைக்கும் வருவாயை கொண்டு ரேஷன் கடை ஊழியர்களுக்கான சம்பளத்தை வழங்குமாறு உத்தரவிட்டோம்" என்றார்.












Click it and Unblock the Notifications