இனி ரேஷனில் ஒரே பில் இலலையா? கம்ப்யூட்டருடன் எடைதராசு இணைப்பு? ரூல்ஸை மாற்ற சொல்லும் ரேஷன் ஊழியர்கள்
சென்னை: ரேஷன் உணவுப் பொருட்கள் அனைத்தும், சரியான எடையில் பாக்கெட்டில் வழங்கப்பட வேண்டும். ரேஷன் கடைகளில் விற்பனை முனைய கருவியின் இணையதள சேவையை மேம்படுத்த வேண்டும். பொது விநியோக திட்டத்திற்கு தனித்துறையை உருவாக்க வேண்டும் என்று ரேஷன் ஊழியர்கள் முக்கிய கோரிக்கைகளை விடுத்துள்ளனர். இதுகுறித்து, தமிழக அரசு நியாய விலைக்கடை பணியாளர் சங்கத்தின் தலைவர் ஜெயச்சந்திர ராஜா செய்தியாளர்களிடம் வெளியிட்ட முக்கிய முடிவு என்ன?
தமிழ்நாட்டில் செயல்பட்டு வரும் ரேஷன் கடைகள் மூலம் ஏழை, எளிய, நடுத்தர மக்களுக்கு மானிய விலையில் உணவுப் பொருட்கள் விநியோகிக்கப்பட்டு வருகின்றன. அதன்படி, அரிசி, சர்க்கரை, கோதுமை, பாமாயில் உள்ளிட்ட பொருட்கள் மலிவாக வழங்கப்படுகிறது. இதனால், கோடிக்கணக்கான குடும்பங்கள் பயனடைந்து வருகின்றன.

ரேஷன் ஊழியர்களின் பிரச்சனைகள்
அதேபோல மாதந்தோறும் முகாம்கள் நடத்தி ரேஷன் அட்டைதாரர்களின் பிரச்சனைகள், புகார்கள் சரிசெய்யப்பட்டு வருகின்றன. ஆனால், ரேஷன் ஊழியர்களின் கோரிக்கைகள் அவ்வளவாக தீர்க்கப்படுவதில்லை என்ற முணுமுணுப்புகள் அவ்வப்போது எழுகின்றன.
குறிப்பாக, ரேஷன் கடைகளுக்கு கம்ப்யூட்டருடன் எடை தராசை இணைப்பதற்கு முன்பாக, நுகர்பொருள் வாணிப கழக (டிஎன்சிஎஸ்சி) குடோன்களில் கம்ப்யூட்டருடன் எடை தராசை இணைக்கும் முறையை அரசு கொண்டு வரவேண்டும் என்பது உட்பட 30 அம்ச கோரிக்கைகளை ரேஷன் பணியாளர்கள் தொடர்ந்து வலியுறுத்தியவாறே உள்ளனர். ஆனால், தங்களது கோரிக்கைகள் எதுவும் நிறைவேற்றப்படவில்லை.
தமிழ்நாடு அரசு ரேஷன் கடை பணியாளர்கள் சங்கம்
இதுகுறித்து, தமிழ்நாடு அரசு ரேஷன் கடை பணியாளர்கள் சங்கத்தினர் போராட்டத்தை அறிவிக்க போவதாக கூறியிருந்தனர்.. நேற்றைய தினம், மதுரையில் மாநிலத்தலைவர் ஜெயச்சந்திர ராஜா, துணைத்தலைவர் செல்லதுரை செய்தியாளர்களிடம் பேசும்போது சொன்னதாவது:
"கூட்டுறவுத்துறையின் கீழ் உள்ள 32 ஆயிரம் பகுதிநேர, முழுநேர ரேஷன் கடைகளுக்கு டிஎன்சிஎஸ்சி குடோன்களில் இருந்து அரிசி, கோதுமை, பருப்பு, சீனி என அத்தியாவசியப் பொருட்களை சாக்குடன் சேர்த்து 50.600 கிலோ மூடையாக அனுப்ப வேண்டும். ஆனால் 47.6 அல்லது 48.600 கிலோ அளவு தான் கடைகளுக்கு வருகிறது.
லாரி மூட்டைகளுடன் பணியாளர்கள்
லாரியில் மூடைகளுடன் ரேஷன் கடை பணியாளர்கள் வருவதால் எடை குறைவுக்கு பணியாளர்கள்தான் காரணம் என திசை திருப்புகின்றனர். எனவே குடோனில் இருந்து சரக்கை ஏற்றும் போது கம்ப்யூட்டருடன் எடை தராசை இணைத்து அளவிட்டு அனுப்ப வேண்டும்.
ரேஷன் கடைகளில் உள்ள POS மிஷினை கம்ப்யூட்டர், எடை தராசுடன் இணைத்தால்தான் ரேஷன் கார்டுதாரர்களுக்கு சரியான எடையில் அரிசி, பருப்பு, சீனி விநியோகிப்பதை கண்காணிக்க முடியும் என்று டிஎன்சிஎஸ்சி அதிகாரிகள் சொல்கிறார்கள்.. அதற்கு முன்பாக டிஎன்சிஎஸ்சி மண்டல மையங்களில் இருந்து ரேஷன் கடைகளுக்கு அனுப்பும் மூட்டைகளை எடையிடுவதற்கு ஏற்ப கம்ப்யூட்டருடன் இணைந்த எடைத் தராசை சேர்க்க வேண்டும். ஏனென்றால், மையங்களில் இருந்தே ஒவ்வொரு மூடையிலும் 2 கிலோ வீதம் குறைவாக வருகிறது.
விற்பனை முனையம் + தராசு
ஒரு கார்டுதாரர் பிஓஎஸ் (விற்பனை முனையம்) மெஷினில் ரேகை வைத்து பதிவு செய்யும்போது உடனடியாக அவரது விவரங்கள் கிடைப்பதில்லை.. நெட்வொர்க் குறைவாக இருப்பதால், இணைப்பு சுற்றிக் கொண்டே இருக்கிறது.
ஏற்கனவே இருந்ததுபோல, விற்பனை முனையத்தையும் தராசையும் இணைக்கும்போது ஒரே பில்லாக அனைத்து பொருட்களுக்கும் போட முடியாது. அனைத்து ரேஷன் கடைகளிலும் விற்பனையாளர்களோடு எடையாளர்களை நியமிக்க வேண்டும். இப்படி பல்வேறு முக்கிய கோரிக்கைகளை வலியுறுத்தியும் எங்கள் கோரிக்கைகள் நிறைவேற்றப்படவில்லை.. எனவே, இதே கோரிக்கைகளை வலியுறுத்தி அந்தந்த மாவட்டங்களில் இன்று போராட்டத்தில் ஈடுபட உள்ளோம்" என்று கூறியிருந்தார்.
இன்று கருப்பு சட்டை போராட்டம்
அதன்படியே, இன்று (ஏப்.8) மாநில அளவில் ஒருநாள வேலைநிறுத்தப் போராட்டத்தில் ரேஷன் ஊழியர்கள் குதித்துள்ளனர்.. மாவட்ட தலைநகரங்களில் ரேஷன் கடை ஊழியர்கள் கருப்பு சட்டை அணிந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.. இந்த வேலைநிறுத்த போராட்டம் காரணமாக பொதுமக்களுக்கு ரேஷன் பொருட்கள் வழங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications