குடும்ப அட்டைதாரர்களுக்கு குஷி.. ரேஷனில் இந்த "பொருளும்" தர்றபோறாங்களாமே.. டெல்லிக்கு போன "டிமாண்டு"
சென்னை: விவசாயிகளிடம் கேழ்வரகு கொள்முதல் ஆண்டு முழுதும் அனுமதிக்கப்படுமா? மத்திய அமைச்சகம் என்ன முடிவெடுக்க போகிறது என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
தமிழகத்தின் ரேஷன் கடைகளில் கார்டுதாரர்களுக்கு அரிசி, கோதுமை, சர்க்கரை, பாமாயில், துவரம் பருப்பு போன்றவற்றை வழங்கப்பட்டு வருகின்றன. இதனால் கோடிக்கணக்கான குடும்பங்களின் வாழ்வாதாரம் காக்கப்படுகின்றன.

ஊட்டச்சத்துக்கள்: அதேசமயம், நாடு முழுதும் அதிக ஊட்டச்சத்துக்கள் நிரம்பிய கேழ்வரகு, கம்பு உள்ளிட்ட சிறுதானியங்களின் பயன்பாடு அதிகரித்துள்ளதால், தமிழக அரசும், ரேஷன் கடைகள் வாயிலாக கேழ்வரகு வினியோகிக்க முடிவு செய்துள்ளது. இதன் முதல் கட்டமாக, நீலகிரி, தர்மபுரி மாவட்டங்களில் உள்ள அரிசி ரேஷன் கார்டுதாரர்களுக்கு, 2 கிலோ கேழ்வரகு இலவசமாக வழங்கப்படுகிறது.
இப்படிப்பட்ட சூழலில்தான், கடந்த ஜூலையில், மத்திய உணவு மற்றும் பொது வினியோக திட்டத் துறை அமைச்சர் பியூஷ் கோயல் தலைமையில், டெல்லியில் அனைத்து மாநில உணவு துறை அமைச்சர்கள் மாநாடு நடந்துள்ளது..
ரேஷன் கடைகள்: இந்த மாநாட்டில், நம்முடைய அமைச்சர் சக்கரபாணி கலந்து கொண்டு, தமிழ்நாட்டில் கோதுமை நுகர்வு அதிகரித்துள்ளதால் கூடுதலாக மாதம் ஒன்றுக்கு 15,000 மெட்ரிக் டன் கோதுமை ஒதுக்க வேண்டும் என்று கேட்டிருந்தார்.
அதுமட்டுமல்ல, "தர்மபுரி மற்றும் நீலகிரி மாவட்டங்களில் ஒவ்வொரு குடும்ப அட்டைதாரர்களுக்கும் 2 கிலோ ராகி வழங்கும் திட்டம் தொடங்கப்பட்டிருக்கிறது. ஆனால், போதுமான அளவு ராகி மற்றும் சிறு தானியங்கள் வழங்கினால் அனைத்து மாவட்டங்களிலும் இத்திட்டம் விரிவுபடுத்தப்படும். கேழ்வரகு வழங்க உதவி செய்வதுடன், விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்யும், நெல்மணியை, அரிசியாக மாற்ற வழங்கப்படும் மானியத்தை விரைந்து விடுவிக்க வேண்டும்" என்று அம்மாநாட்டில் பேசியிருந்தார் அமைச்சர்.
இந்நிலையில், இதுகுறித்த முக்கிய தகவல் ஒன்று வெளியாகி உள்ளது.. அதாவது, விவசாயிகளிடம் இருந்து வருடம் முழுவதும், கேழ்வரகு கொள்முதல் செய்வதற்கு, இந்திய உணவு கழகத்திடம் தமிழக உணவு துறை அனுமதி கேட்டிருக்கிறதாம்.
2 மாவட்டங்கள்: இப்போது, தமிழக நுகர்பொருள் வாணிப கழகம், தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் உள்ள விவசாயிகளிடம் கேழ்வரகு கொள்முதல் செய்கிறது. நடப்பு சீசனில் கேழ்வரகு வழங்கும் விவசாயிகளுக்கு மத்திய அரசின் சார்பில் 100 கிலோ எடை உடைய குவிண்டாலுக்கு, 3,846 ரூபாய் வழங்கப்படுகிறது.
அந்தவகையில், ஈரோடு, சேலம் ஆகிய 2 மாவட்டங்களில் கொள்முதல் செய்யவும், ஆண்டு முழுதும் விவசாயிகளிடம் இருந்து, 17,000 டன் வாங்கவும் அனுமதிக்குமாறு தமிழக அரசு கேட்டிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.. இதுதொடர்பாக, மத்திய உணவு அமைச்சகத்தின் கவனத்துக்கும் கொண்டு போகப்பட்டுள்ளதாம். அதில், கூடுதலாக 2 மாவட்டங்களில் கொள்முதல் செய்ய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
பிப்ரவரி: டிசம்பரில் துவங்கி பிப்ரவரிக்குள், கேழ்வரகு கொள்முதல் செய்ய வேண்டும் என்பதால், இதற்கான ஆர்வம் அதிகரித்து வருகிறது.. அதேசமயம், வருடம் முழுதும் கேழ்வரகு கொள்முதல் செய்ய அமைச்சகத்தின் அனுமதி கிடைக்குமா? என்ற எதிர்பார்ப்பும் எகிறி வருகிறது.












Click it and Unblock the Notifications