ஐ.ஜே.கே. தனித்துப் போட்டி! எங்கள் பக்கம் தான் மக்கள் அலை! சொல்கிறார் ரவி பச்சமுத்து!
சென்னை: தமிழக நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் இந்திய ஜனநாயக கட்சி தனித்து போட்டியிடும் என அறிவித்திருக்கிறார் அக்கட்சியின் செயல் தலைவர் ரவி பச்சமுத்து.
மேலும், மக்கள் மத்தியில் இந்திய ஜனநாயகக் கட்சிக்கு அமைதியான ஆதரவு அலை இருப்பதாக நம்பிக்கை தெரிவித்திருக்கிறார்.
தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளதால் கட்சி அலுவலகத்துக்கு வருகை புரிந்து செய்தியாளர்களை சந்தித்த அவர் இதனைக் கூறியிருக்கிறார்.

தோல்வியை கண்டு
இந்திய ஜனநாயக கட்சி நாகரீகமான முறையிலும், நேர்மையாகவும் அரசியல் செய்து வருவதாகவும் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்க கூடிய வகையில் அரசியல் முன்னெடுப்புகளை மேற்கொண்டு வருவதாகவும் ரவி பச்சமுத்து தெரிவித்திருக்கிறார். நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் வாக்காளர்களுக்கு பணம் வழங்க மாட்டோம் எனக் கூறிய அவர் தோல்விகளை கண்டு துவளமாட்டோம் என நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

குறை சொல்லமாட்டோம்
மக்கள் தங்களை ஏற்கும் வரை தொடர்ந்து அனைத்து தேர்தல்களிலும் போட்டியிடுவோம் எனக் கூறிய அவர், யாரையும் குறைசொல்லியோ மற்றவர்களை விமர்சித்தோ வாக்குகள் கேட்க மாட்டோம் என ரவி பச்சமுத்து கூறியிருக்கிறார். பிரச்சாரத்தின் போது யாருடைய மனதும் புண்படாதவாறு ஐ.ஜே.கே. வேட்பாளர்கள் ஓட்டுக்கேட்பார்கள் எனக் கூறியிருக்கிறார்.

50% இடங்கள்
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் 50% இடங்களை பெண்களுக்கு தர இருப்பதாகவும் மக்கள் மத்தியில் இந்திய ஜனநாயகக் கட்சிக்கு ஒரு அமைதியான ஆதரவு அலை இருப்பதாகவும் நம்பிக்கை தெரிவித்தார் ரவி பச்சமுத்து. கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் திமுக கூட்டணியில் போட்டியிட்டு ஐஜேகே தலைவர் பச்சமுத்து நாடாளுமன்ற உறுப்பினராக வெற்றிபெற்றது குறிப்பிடத்தக்கது.

தேர்தல் நேரம்
தேர்தல் நேரத்தின் போது மட்டும் இவ்வாறு பேட்டிகள் கொடுப்பதும் மற்ற நாட்களில் பல்கலைக்கழக நிர்வாகம், மருத்துவமனை நிர்வாகம் என தொழில்களில் கவனம் செலுத்துவதும் ஐ.ஜே.கே. தலைமையின் வழக்கம் என்பது கவனிக்கத்தக்கது.












Click it and Unblock the Notifications