நிபந்தனைகளை நீக்கினால் பொதுச்செயலாளர் பதவிக்கு போட்டியிட தயார்..ஹைகோர்ட்டில் ஓபிஎஸ் பகிரங்க சவால்
நிபந்தனைகளை நீக்கினால் அதிமுகவின் பொதுச்செயலாளர் பதவிக்கு போட்டியிடத்தயார் என ஓ.பன்னீர் செல்வம் கூறியுள்ளார்.
சென்னை: அதிமுகவில் உள்ள விதிகளை திருத்தி நிபந்தனைகளை நீக்கினால் பொதுச்செயலாளர் பதவிக்கு போட்டியிடத்தயார் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் ஓ.பன்னீர் செல்வம் தரப்பு வாதங்களை முன் வைத்துள்ளது. வழக்கை வாபஸ் பெறத் தயாராக இருப்பதாக ஓ.பன்னீர்செல்வம் தரப்பு உறுதியளித்துள்ளது.
பொதுச்செயலாளர் தேர்தலில் போட்டியிட தற்போது 10 மாவட்ட செயலாளர்கள் முன்மொழியவும் 10 மாவட்ட செயலாளர்கள் வழிமொழியவும் வேண்டும். அந்த நிபந்தனைகளை நீக்க வேண்டும் எனவும் ஓ.பன்னீர் செல்வம் தரப்பு வாதங்களை முன்வைத்துள்ளது.
அதிமுக பொதுச் செயலாளர் தேர்தலை நடத்த எடப்பாடி பழனிசாமி தீவிரம் காட்டினார். தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு மனுதாக்கல் செய்யப்பட்டது. எடப்பாடி பழனிச்சாமி மட்டுமே மனு தாக்கல் செய்தார். எடப்பாடி பழனிச்சாமி பெயரில் பலரும் மனு தாக்கல் செய்தனர். இதனையடுத்து எடப்பாடி பழனிச்சாமி ஒருமனதாக தேர்வு செய்யப்படும் நிலை எற்பட்டது.

ஹைகோர்ட்டில் வழக்கு
இந்த நிலையில், சென்னை உயர் நீதிமன்றத்தில் ஓ.பன்னீர்செல்வம் தரப்பினர் வழக்கு தொடர்ந்து முட்டுக்கட்டை போட்டனர். மனோஜ் பாண்டியன், வைத்திலிங்கம், ஜே.சி.டி.பிரபாகர் ஆகியோர் தனித்தனியாக மனு தாக்கல் செய்தனர். இதையடுத்து அதிமுக உறுப்பினர் ரேவதி தனியாக மனு தாக்கல் செய்ய நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

ஹைகோர்ட்டில் விசாரணை
கடந்த ஞாயிறு அன்று ஓபிஎஸ் தரப்பின் வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், பொதுச் செயலாளர் தேர்தலுக்கான நடைமுறைகளை தொடரலாம். ஆனால் தேர்தல் முடிவுகளை அறிவிக்கக் கூடாது என தடை விதித்தது. இதற்கிடையில் மார்ச் 22ஆம் தேதி பொதுக்குழு தீர்மானங்கள் தொடர்பான வழக்கையும் சேர்த்து விசாரித்து தீர்ப்பு வழங்குவதாக உத்தரவிட்டது. இதனையடுத்து இன்று காலையில் உயர்நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்கு வந்தது.

விளக்கம் கேட்கவில்லை
சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி குமரேஷ் பாபு முன்னிலையில் வழக்கு விசாரணை சற்றுமுன் தொடங்கியது. ஓபிஎஸ் தரப்பில் மூத்த வழக்கறிஞர் குரு கிருஷ்ணகுமார் வாதிட்டார். அப்போது அவர், ஒருங்கிணைப்பாளர் பதவி 2026ஆம் ஆண்டு வரை நீடிக்கிறது. எந்த வாய்ப்பும் அளிக்காமல் விளக்கம் கேட்காமல் காரணம் கூறாமல் கட்சியில் இருந்து நீக்கியுள்ளனர். இது தன்னிச்சையமானது. நியாமற்றது.

அதிமுகவில் பதவிகள் வகித்த ஓபிஎஸ்
அதிமுக பொதுச் செயலாளர் தேர்தலில் போட்டியிட பல நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன. ஓ.பன்னீர்செல்வம் முதல்வராக, நிதியமைச்சராக பதவி வகித்துள்ளார். 1977 முதல் கட்சியில் இருக்கிறார். பொருளாளர், ஒருங்கிணைப்பாளர் உள்ளிட்ட பதவிகளை வகித்துள்ளார். பெரும்பான்மை இருப்பதால் எந்த முடிவையும் எடுப்போம் என்ற தொனியில் எடப்பாடி தரப்பு செயல்பட்டுள்ளது.

எம்ஜிஆரின் நோக்கத்திற்கு எதிரானது
எடப்பாடி பழனிசாமியின் செயல்பாடுகள் அதிமுகவை உருவாக்கிய எம்.ஜி.ஆரின் நோக்கத்திற்கு எதிரானவை. யாரும் போட்டியிட முடியாத வகையில் பொதுச் செயலாளர் பதவிக்கு நிபந்தனை கொண்டு வரப்பட்டுள்ளது. கட்சியின் அடிப்படை உறுப்பினர்கள் தான் பொதுச் செயலாளரை தேர்வு செய்ய முடியும் என்ற விதியை பொதுக்குழு உறுப்பினர்களால் திருத்த முடியாது.

பொதுச்செயலாளர் பதவிக்கு போட்டியிடுவேன்
எடப்பாடி பழனிசாமி தரப்பு அத்துமீறி நடந்திருக்கிறது. திமுக உடன் நெருக்கமாக இருப்பதாக கூறி என்னை கட்சியை விட்டு நீக்கி விட்டனர். அதிமுகவின் நிபந்தனைகளை நீக்கினார் பொதுச்செயலாளர் பதவிக்கு போட்டியிட தயார் என வாதிடப்பட்டது. அடிப்படை உறுப்பினர்கள் போட்டியிட முடியாத வகையில் கட்சியில் விதிகளை திருத்தியுள்ளனர் எனவும் ஓபிஎஸ் தரப்பில் வாதிடப்பட்டது. அதற்கான அனுமதியை நீதிமன்றம் வழங்க வேண்டும் எனவும் கோரிக்கை வைக்கப்பட்டது.

பகிரங்க சவால்
இதுநாள் வரைக்கு அதிமுகவின் நிரந்தர பொதுச்செயலாளர் ஜெயலலிதா என்று கூறி வந்த ஓ.பன்னீர் செல்வம் தற்போது பொதுச்செயலாளர் பதவிக்கு போட்டியிட தயார் என்று கூறி எடப்பாடி பழனிச்சாமிக்கு பகிரங்க சவால் விடுத்துள்ளார். அடுத்ததாக மனோஜ் பாண்டியன் தரப்பு வாதங்களை முன்வைக்க உள்ளது. எடப்பாடி பழனிச்சாமி தரப்பு வாதங்களை கேட்டு அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பை நீதிமன்றம் வழங்க உள்ளது. இந்த தீர்ப்பு அதிமுகவில் அடுத்தகட்ட அரசியல் நகர்வுகளை தீர்மானிக்கும் என்பதால் தொண்டர்கள் எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர்.












Click it and Unblock the Notifications