எஞ்சிய வாழ்க்கை மக்களுக்காக.. 60 ஆண்டு சினிமா பயணம்.. கமல் அதிரடி முடிவு.. ரசிகர்களுக்கு செம ஷாக்
சென்னை: அரசியலுக்கு இடைஞ்சலாக இருக்கும்பட்சத்தில் சினிமாவை முற்றிலுமாக விலக தயாராக உள்ளதாக மக்கள் நீதி மய்யத்தின் தலைவர்கள் கமல் தெரிவித்துள்ளார்.
Recommended Video
தமிழ் நாட்டில் வரும் செவ்வாய்க்கிழமை ஒரே கட்டமாகச் சட்டசபை தேர்தல் நடைபெறுகிறது. இன்று மாலையுடன் பிரசாரம் முடிகிறது.
இதனால் அனைத்து வேட்பாளர்களும் இறுதிக்கட்ட பிரசாரத்தைத் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர். முதல்வர் வேட்பாளர்கள் அனைவரும் தங்கள் சொந்த தொகுதியில் இறுதிக்கட்ட தேர்தல் பிரசாரத்தைச் செய்து வருகின்றனர்.
கமல் மீது விமர்சனம்
அதன்படி மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல் தான் போட்டியிடும் கோவை தொகுதியிலேயே கடந்த சில தினங்களாகப் பிரசாரம் செய்தார். அவர் வெளியூரை சேர்ந்தவர் என்றும் தேர்தலுக்குப் பின் சென்னைக்குச் சென்றுவிடுவார் என்றும் பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசன் தொடர்ந்து விமர்சித்து வருகிறார். மேலும், கமலை பார்ட் டைம் அரசியல்வாதி என்றும் தேர்தல்களுக்குப் பின் அவர் சினிமாவில் நடிக்க சென்று விடுவார் என்றும் கடுமையாகச் சாடினார்.
எஞ்சிய வாழ்க்கை மக்களுக்காக
இந்நிலையில், மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார் அப்போது பல்வேறு விஷயங்கள் குறித்து அவர் விரிவாகப் பேசினார். தனது அரசியல் நுழைவுக்குப் பொதுமக்கள் அளிக்கும் ஆதரவு வரலாற்றுச் சிறப்புமிக்க வகையில் இருப்பதாகக் குறிப்பிட்ட அவர், தனது எஞ்சிய வாழ்க்கையை மக்களுக்காக அர்ப்பணிக்க முடிவு செய்துவிட்டதாகத் தெரிவித்தார்.
விலக தயார்
யாருடைய தயவும் இன்றி வாழத் தொடர்ந்து சினிமாவில் நடிப்பேன் என்று கூறிய அவர், தற்போது சில படங்களில் நடிக்க ஒப்பந்தம் போட்டுள்ளதாகவும் அதை முதலில் முடித்துத் தர வேண்டும் என்றும் அவர் கூறினார். எம்ஜிஆர் பல திரைப்படங்களில் எம்எல்ஏ என்ற பதவியுடனேயே படங்களில் நடித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். மேலும் வரும் காலங்களில் அரசியலுக்கு இடைஞ்சலாக இருக்கும்பட்சத்தில் சினிமாவை முற்றிலுமாக விட்டு விலக தயாராக உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
மக்கள் முடிவு செய்யட்டும்
இந்தத் தேர்தலுக்குப் பின் காணாமல் போகிவிடுவார் என்று சிலர் விமர்சிப்பது குறித்து செய்தியாளர்கள் கேட்டதற்கு, அதற்குக் காலம் பதில் சொல்லும், யார் காணாமல் போகிறார்கள் என்று பார்ப்போம். அதை முடிவு செய்ய வேண்டியது மக்கள் தான் என்று அவர் தெரிவித்தார். மேலும் தான் அரசியல் கடைசியைத் தொடங்கியபோது, பல்வேறு தரப்பில் இருந்தும் தனக்கு மிரட்டல்கள் வந்ததாகவும் இருப்பினும், நேர்மையான முறையில் தான் கட்சி நடத்தி வருவதாகவும் அவர் தெரிவித்தார்.