சார் பதிவாளர்கள் அதிரடி.. ரியல் எஸ்டேட் தடுமாறுது.. பத்திரப்பதிவு குறையுது.. பதிவுத்துறையின் முடிவு?
சென்னை: நில வழிகாட்டி மதிப்புகளை ஒரேயடியாக உயர்த்தப்பட்டுள்ளதற்கு கடும் எதிர்ப்புகள் கிளம்பி வருகின்றன.. இதையடுத்து, பதிவுத்துறைக்கு முக்கிய வேண்டுகோள் ஒன்று விடுக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு அரசின் பத்திரப்பதிவு துறை நிலம், வீடு விற்பனை தவிர பல்வேறு இனங்களுக்கான ஆவணங்களையும் பதிவு செய்ய முத்திரைத்தாள் கட்டணங்களும், பதிவு கட்டணங்களும், மக்களிடமிருந்தே வசூலிக்கப்படுகின்றன.

பத்திரப்பதிவு: கடந்த வருடம் பத்திரப்பதிவு துறையில் பெரிய அளவிலான ஒப்பந்தங்கள், பத்திரப்பதிவு தொடர்பான விஷயங்களுக்கு முத்திரைத்தாள் கட்டணங்கள் உயர்த்தப்பட்டிருந்தது.. ஆனால், இப்போது, லீஸ், ரத்து ஆவணம், பவர் பத்திரம் போன்ற சிறிய அளவிலான பண மதிப்புடைய முத்திரைத்தாள் ஆவணங்களுக்கு கட்டணம் உயர்த்தப்பட்டிருக்கிறது.
அந்தவகையில், ஆவணங்களுக்கு ரூ.100 கட்டணம் ரூ.1000 ஆகவும், ஒப்பந்த ஆவணங்களுக்கு ரூ.20 கட்டணம் ரூ.200 ஆகவும், ரத்து பத்திரங்களுக்கு ரூ. 50 கட்டணம் ரூ.1000 ஆகவும் அதிகரித்துள்ளது. டூப்ளிகேட் பிரதிகளுக்கு ரூ.20 கட்டணம் ரூ.100 ஆகவும், குடும்ப உறுப்பினர் பவர் பத்திரம் போடுவதற்கு ரூ.100 கட்டணம் ரூ.1000 ஆகவும் உயர்ந்துள்ளது.
கட்டணங்கள்: இந்த அளவுக்கு பத்திரங்களின் முத்திரைத்தாள் கட்டணங்களை அதிகப்படுத்திய நிலையில், இந்த கட்டண உயர்வை கேட்டு பொதுமக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.. வீடு, நிலம் வாங்குவோரும் பெருங்கவலை அடைந்துள்ளனர். இந்த கட்டண உயர்வை திரும்ப பெற வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் வலியுறுத்தியும் வருகிறார்கள்.
அதுமட்டுமல்ல, சென்னை ஹைகோர்ட் அளித்த தீர்ப்பின்படி, வழிகாட்டு மதிப்பையும் முன்பிருந்த நிலைக்குத் தொடர வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்து வருகிறார்கள்.. ஆனாலும், தமிழகத்தில் நிலத்தின் வழிகாட்டி மதிப்புகளை சீரமைக்க, ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ்., அதிகாரி வாசுகி தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்தக்குழு மண்டல வாரியாக வழிகாட்டி மதிப்புகளை ஆய்வு செய்து, புதிய பரிந்துரைகளை தயாரித்தும் வருகிறது.
கடிதம்: இப்படிப்பட்ட சூழலில், தமிழக சார் பதிவாளர்கள் சங்கத்தின் சார்பில் முக்கிய கோரிக்கை ஒன்று விடுக்கப்பட்டுள்ளது.. அச்சங்கத்தின் தலைவர் மு.மகேஷ், பொதுச்செயலர் தா. மணிராஜ் ஆகியோர், பதிவுத்துறை தலைவர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவருக்கு கடிதம் ஒன்றை அனுப்பியிருக்கிறார்கள். அந்த கடிதத்தில் உள்ளதாவது:
நில வழிகாட்டி மதிப்புகளில் காணப்படும் குளறுபடிகளை நீக்க, இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. லட்சக்கணக்கான சர்வே எண்கள், பல்லாயிரக்கணக்கான தெருக்கள் உள்ள நிலையில், அவசர கதியில் வழிகாட்டி மதிப்பு மாற்றம் செய்யும் பணிகள் துவங்கி உள்ளன. பதிவுத்துறையில் காலி பணியிடங்கள் அதிகரித்துள்ள நிலையில், சார் - பதிவாளர்களுக்கு பணி சுமையும் அதிகரித்துள்ளது.
பத்திரங்கள் எண்ணிக்கை: இதில், சந்தை நிலவரத்தை கணக்கில் கொள்ளாமல், அதிகபட்ச மதிப்புகளை நிர்ணயித்தால், மக்கள் பாதிக்கப்படுவர். பதிவுக்கு வரும் பத்திரங்கள் எண்ணிக்கை குறையும்; ரியல் எஸ்டேட் துறையும் பாதிக்கப்படும்; துறைக்கு கிடைக்க வேண்டிய வருவாயும் பாதிக்கப்படும்.
எனவே, மாவட்ட, மையக்குழு கூட்டங்கள் நடத்தி, உரிய பணியாளர்களை ஒதுக்கி, போதிய அவகாசம் அளித்து, பிற துறைகள் ஒத்துழைப்புடன், வழிகாட்டி மதிப்புகளை நிர்ணயம் செய்ய வேண்டும்" என்று கடிதத்தில் தெரிவித்திருக்கிறார்கள்.












Click it and Unblock the Notifications