ரியல் எஸ்டேட் மனைப்பிரிவு அனுமதிக்கு தடை? நில வகைப்பாடு மாற்றத்தில் சிக்கலா? அரசுக்கு பெயிரா கோரிக்கை
சென்னை: கட்சி நிதி பெறாத நிர்வாகம் என்ற உயரிய கொள்கை, கோப்புகளை விரைந்து முடிக்கும் செயல்திறனுடன் இணைய வேண்டும் என்று முதலமைச்சரிடம் பெயிரா கோரிக்கை விடுத்துள்ளது.. தொழில் வளர்ச்சியில் புதிய மாற்றத்தை ஏற்படுத்த, நிலுவையில் உள்ள திட்ட அனுமதி கோப்புகளை அரசு போர்க்கால அடிப்படையில் பரிசீலிக்க வேண்டும் என்றும், இந்த அதிரடி நடவடிக்கைகள் தொழில்துறையினரின் நம்பிக்கையை மேலும் உறுதிப்படுத்தும் என்றும் தன்னுடைய கடிதத்தில் பெயிரா கேட்டுக் கொண்டுள்ளது.
அகில இந்திய ரியல் எஸ்டேட் கூட்டமைப்பின் (FAIRA) நிறுவனரும் தேசிய தலைவருமான டாக்டர் ஆ. ஹென்றி, முதலமைச்சருக்கு ஒரு விரிவான கடிதம் அனுடப்பி உள்ளார்.. அதில், நிர்வாக நடைமுறைகளில் ஏற்படும் தேவையற்ற தாமதங்கள் வெறும் காகிதப்பரிமாற்றமாக மட்டும் பார்க்கப்படக் கூடாது என்று டாக்டர் ஆ. ஹென்றி வலியுறுத்துகிறார்.

திட்ட அனுமதி - வங்கி கடன்
ஒரு திட்ட அனுமதி கோப்பு நீண்டகாலமாக நிலுவையில் இருக்கும்போது, அதன் விளைவாக வேலைவாய்ப்பு இழப்பு, வங்கிக் கடன் மீதான வட்டிச் சுமை உயர்வு, கட்டுமானப் பொருட்களின் விலை ஏற்றத்தால் திட்டச் செலவு அதிகரிப்பு என பல்வேறு சிக்கல்கள் உருவாகின்றன என்றும் இவை முதலீட்டாளர்களின் நம்பிக்கையை சிதைத்து, பொருளாதாரச் சூழலையே மந்தமடையச் செய்தாகவும் ஹென்றி அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
இதற்கொரு தீர்வாக, தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் உள்ளூர் திட்டக்குழும வரம்பிற்குட்பட்ட அசூர் மற்றும் பெருமாண்டி கிராமங்களில் மேற்கொள்ளப்பட வேண்டிய ஒரு குறிப்பிட்ட திட்டத்தை முன்மாதிரியாகக் கொண்டு ஒரு கோரிக்கையையும் விடுத்துள்ளார்..
நிலங்களின் வகைப்பாடு
அந்த கடிதத்தில், "இந்தத் திட்டத்திற்காகக் குறிப்பிட்ட சர்வே எண்களைக் கொண்ட நிலங்களில் மனைப்பிரிவு அமைப்பதற்கான விண்ணப்பம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.. நிலங்களின் வகைப்பாடு நஞ்சை என இருப்பதால், இவற்றை மனைப்பிரிவு நோக்கத்திற்காக மாற்றுவதற்கான (Reclassification) கோப்பு, தஞ்சாவூர் மாவட்ட நகர மற்றும் ஊரமைப்பு அலுவலகம் முதல் இயக்குநர் அலுவலகம் வரை பல்வேறு நிலைகளைக் கடந்து வந்துள்ளது..
விண்ணப்பதாரர் தரப்பில் கேட்கப்பட்ட அனைத்து இணக்க ஆவணங்கள், குறைபாடுகள் நிவர்த்தி செய்யப்பட்ட கடிதங்கள் மற்றும் நாளிதழ் அறிவிப்புகள் உள்ளிட்ட அனைத்து சட்டப்பூர்வ நடைமுறைகளும் முறையாகப் பூர்த்தி செய்யப்பட்டுள்ளன.. இத்தனை நிலைகளைக் கடந்தும், இன்னும் கோப்பு இறுதி முடிவை எட்டாமல் இருப்பது மிகுந்த வருத்தமளிக்கிறது.
வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை
எனவே, இந்த விவகாரத்தில் ஏதேனும் சட்டரீதியான தடைகள் இருப்பின், அவற்றை எழுத்துப்பூர்வமாகத் தெரிவித்து, விண்ணப்பதாரர் அதனை நிவர்த்தி செய்ய உரிய வாய்ப்பினை அரசு வழங்க வேண்டும்.. மாறாக, அனைத்து நடைமுறைகளும் சரியாக இருந்தால், அதனை முன்னுரிமை அடிப்படையில் பரிசீலித்து, நில வகைப்பாடு மாற்றத்திற்கான அரசாணையை (G.O.) விரைந்து வெளியிட வேண்டும்.
வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறைக்குத் தகுந்த வழிகாட்டுதல்களை வழங்கி, அதன் பிறகு மனைப்பிரிவு அனுமதி வழங்கும் பணிகளையும் போர்க்கால அடிப்படையில் நிறைவேற்ற வேண்டும் என்பதே அவரது எதிர்பார்ப்பாகும்..
நோ பார்ட்டி ஃபண்ட்
"கட்சி நிதி பெறாத நிர்வாகம்" என்ற உயர்ந்த கொள்கை, "கோப்புகள் கிடப்பில் போகாத நிர்வாகம்" என்ற செயல்திறனுடன் இணையும்போதுதான், தமிழ்நாட்டின் தொழில் வளர்ச்சி புதிய உச்சத்தைத் தொடும்..
சட்டத்திற்கு உட்பட்டு செயல்படும் ஆயிரக்கணக்கான தொழில்துறையினரின் நம்பிக்கையை உறுதிப்படுத்தும் வகையில், அரசின் இந்த அதிரடி நடவடிக்கை அமையும் என ஆணித்தரமாக நம்புகிறோம்" என்று டாக்டர் ஹென்றி முதலமைச்சருக்கு எழுதியுள்ள அந்த கடிதத்தில் தன்னுடைய நம்பிக்கையை வெளிப்படுத்தி உள்ளார்.












Click it and Unblock the Notifications