சிரிப்பு போலீஸ் மாதிரி சிரிப்பு திருடர்கள்..!
சென்னை: 'சிரிப்பு போலீஸ்' என்று சொன்னாலே வடிவேலுவின் அதகளங்கள் ஆட்டோமேடிக்காக நினைவுக்கு வரும். அந்தளவுக்கு காலத்தால் மறக்க முடியாத காமெடி அது! விறைப்பு காட்ட வேண்டிய போலீசில்தான் சிரிப்பு ஆட்கள் இருக்க வேண்டும் என்பதில்லை. போலீஸ் விரட்டிப் பிடிக்கும் திருடர்களிலும் பல விநோதமான சிரிப்பு ஆசாமிகள் இருக்கிறாங்க பாஸ்.
கேரள மாநிலம் கொச்சி பக்கத்தில இருக்கிற ஊர் திருவாங்குளம். கடந்த சில தினங்களுக்கு முன்பு இங்குள்ள, ஐந்து கடைகளில் பணம் மற்றும் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டன. இது குறித்து போலீசார் நடத்திய விசாரணையில் அந்தக் கடைகளை ஒட்டியுள்ள எக்ஸ் சர்வீஸ் மேன் ஐசக் என்பவரது வீட்டிலும் திருட்டு முயற்சி நடந்திருப்பது தெரியவந்தது. ஐசக் தற்போது வெளிநாட்டிற்கு சென்றிருக்கிறார்.
ஆளில்லாத ஐசக் வீட்டிற்குள் திருடன் புகுந்தானே தவிர அங்கிருந்து எதையும் அவன் ஆட்டயப் போடவில்லை. இத்தனைக்கும் ஐசக் வீட்டில் விலை உயர்ந்த பல பொருட்கள் இருந்தன. ஆட்கள் யாரும் இல்லாததால் திருடன் அனைத்தையும் அபேஸ் செய்திருக்க முடியும். ஆனால் அப்படிச் செய்யவில்லை. திருட வந்தவன் வெறும் கையுடன் திரும்பிப் போனது ஏன்? குழம்பிப்போன போலீசாருக்கு அங்குள்ள சுவரில் மலையாளத்தில் எழுதப்பட்டிருந்த வாசகங்கள் தெளிவைத் தந்தன.
அடடா தெரியாம போச்சே
``இது நாட்டிற்காக சேவை செய்யும் ஒரு ராணுவ வீரரின் வீடு என்று தெரியாமல் உள்ளே நுழைந்து விட்டேன். கடைசி நேரத்தில்தான், அவரது தொப்பியை வைத்து இது ராணுவ வீரரின் வீடு எனத தெரிந்தது. தெரியாமல் பூட்டை உடைத்து உள்ளே வந்துவிட்டேன். என்னை மன்னித்துவிடுங்கள்`` என்கிற வாசகங்களைப் பார்த்த போலீசார், அட்டென்ஷனில் நின்று சல்யூட் அடிக்காத குறையாக திருடனின் தேசபக்தியை பாராட்டியிருக்கின்றனர்.
இதில் இன்னொரு காமெடியான விஷயம் தெரியுமா!
தேச பக்தி முக்கியம்ப்பே!
`ஜெய்ஹிந்த்' அர்ஜூன் ரேஞ்சுக்கு தேசபக்தியை வெளிப்படுத்திய அந்த நூதனத் திருடன், கொஞ்சம் சரக்கு பிரியர் போல! வீட்டில் இருந்த நகை உள்ளிட்ட எந்த ஒரு விலை உயர்ந்த பொருட்களையும் தொட்டுப் பார்க்காத அந்த தேசபக்தர், பீரோவில் வைத்திருந்த மது பாட்டில் ஒன்றை எடுத்து, அதிலிருந்து ஒன்றிரண்டு 'பெக்'கை மட்டும் தொண்டைக்குள் இறக்கிவிட்டு நடையைக் கட்டியிருக்கிறார்.
யார்டா நீ
சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில் அருகே கடந்த சில மாதங்களுக்கு முன்பு அடுத்தடுத்து இரு சக்கர வாகனங்கள் திருடு போயின. சொல்லி வைத்தாற்போல எல்லாமே கியர் இல்லாத ஸ்கூட்டி ரக வாகனங்கள். ஸ்கூட்டி வாகனங்கள் மீது திருடனுக்கு அப்படியென்ன மோகம்! என குழம்பிப் போனார்கள் போலீசார். கடைசியில் ஒருவழியாக ஸ்கூட்டி திருடன் அகப்பட்டுக் கொண்டான்.
பேஸ்மென்ட்டும் வீக்கு சார்!
``இங்க பாருங்க சார்... நம்ம பாடி ரொம்ப வீக். வெயிட்டான கியர் வண்டிகளை ஓட்டத் தெரியாது. அதனால அதைத் திருடி, ஓட்டத் தெரியாமல் சிக்கலில் மாட்டிக்கொள்ளத் தயாராக இல்லை. அதோடு பெரிய வண்டிகளைத் திருடுவது கொஞ்சம் கஷ்டம். ஆனால் ஸ்கூட்டியை ஈசியா தள்ளிக்கிட்டு போயிடலாம்'' என அந்த காமெடி திருடன் சொன்ன விளக்கத்தைக் கேட்டு போலீஸார் விழுந்து விழுந்து சிரித்தார்களாம்.
பார்ட் பார்ட்டா கழற்றிய பாபு
ஈஸி டிரான்ஸ்சேக்ஷனுக்காக ஸ்கூட்டியை திருடியதையாவது ஜீரணித்துக் கொள்ளலாம். ஆனால் காரை பார்ட் பார்ட்டாகக் கழற்றி குறிப்பிட்ட பகுதிகளை மட்டும் அபேஸ் பண்ணிய திருடர்களை என்ன சொல்வது! சென்னை விருகம்பாக்கத்தைச் சேர்ந்த ராம்பாபு என்பவர், அண்மையில் புதிய கார் ஒன்றை வாங்கினார். ராம்பாபு வீட்டின் முன்பாக காரை பார்க்கிங் செய்ய இடமில்லை. இதனால் தனது வீட்டிலிருந்து இரண்டு தெருக்கள் தள்ளி இருக்கும் உறவினர் வீட்டு முன்பு காரை நிறுத்தி வைத்துவிட்டு காலையில் எடுத்துச் செல்வது வழக்கம்.
இங்க இருந்த டயரைக் காணோம்
சமீபத்தில் ஒருநாள் காலையில் அப்படி காரை எடுக்கச் சென்றபோது அதிர்ந்து போனார். கார்களிலுள்ள 4 டயர்களையும் கழற்றி எடுத்துவிட்டு வீல்களுக்கு பதிலாக கற்களை வைத்து அதில் காரை நிற்க செய்துள்ளனர். மற்றபடி காரின் எந்தவொரு பகுதியையும் திருடர்கள் டச் பண்ணவில்லை.
ஒரேடியாக காரை திருடியிருந்தால் கூட ஆச்சரியப்பட்டிருக்க மாட்டார்கள். ஆனால் காரை விட்டுவிட்டு வெறும் டயர்களை மட்டும் லவட்டிக்கொண்டு சென்ற அந்தத் திருடன் இன்னமும் பிடிபடவில்லை. டயர் மேல் திருடர்களுக்கு அப்படியென்ன மோகம் என்பது போலீஸாருக்கு விளங்காத புதிராகவே இருக்கிறது. போகிற போக்கில் கார் டயர்களை சங்கிலி மூலம் சுற்றி பூட்டுபோடும் காலம் வந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை!
தாமதம் ஆகப்படாது
பொதுவாக திருடர்கள், காரியம் முடிந்ததும் தப்பித்தோம், பிழைத்தோம் என இடத்தைக் காலி செய்வதுதான் வழக்கம். கொஞ்சம் டிலே பண்ணினாலும் சிக்கிக் கொள்வோம் என்கிற பயம்தான் காரணம். ஆனால் வாணியம்பாடியில் இதற்கு நேர்மாறான சம்பவம் ஒன்று நடந்திருக்கிறது. வாணியம்பாடி சென்னாம்பேட்டையைச் சேர்ந்தவர் ஃபாரூக். இவர் சமீபத்தில் வீட்டைப் பூட்டிவிட்டு குடும்பத்துடன் வெளியூர் சென்றுள்ளார். அடுத்த நாள் காலை ஃபாரூக்கின் வீட்டுக் கதவு திறந்து கிடந்ததை அக்கம் பக்கத்தினர் பார்த்துள்ளனர்.
சாப்ட்டு நிதானமா போவோம்டே
இது குறித்து ஃபாரூக்கிற்கு உடனே தகவல் கூறினர். இதன் பின்பு ஃபாரூக்கின் உறவினர்கள் வீட்டுற்குள் சென்று பார்த்தபோது, வீட்டிலிருந்த பீரோ உடைக்கப்பட்டு அதிலிருந்த 50 பவுன் நகைகளும், 5 லட்சம் பணமும் திருடுபோனது தெரியவந்தது. மேலும் அந்தத் திருட்டு கும்பல், சமயலறையில் நுழைந்து சாவகாசமாக மக்ரூனி சமைத்து சாப்பிட்டுள்ளனர். விஷயமறிந்து தலையிலடித்துக் கொண்ட போலீஸார், சாப்பாட்டு பிரியர்களான இந்த நூதன கொள்ளையர்களை வழக்கம்போல வலைவீசி தேடி வருகின்றனர்.
ஏகப்பட்ட பேரு
இப்படி ஏராளமான சம்பவங்களை சொல்லிக்கொண்டே போகலாம். திருடர்களின் மனநிலை காலத்திற்கேற்ப மாறி வருகிறது. ஆரம்பக் கட்டங்களில் வறுமைக்காக, அப்புறம் வசதியான வாழ்க்கைக்காக என திருட ஆரம்பித்தார்கள். நாளாவட்டத்தில் சாகசத்திற்காகவும், ஒரு சிலர் பொழுது போக்கிற்காகவும் திருட ஆரம்பித்துள்ளனர். இதன் எதிரொலியாகவே டெரர் கிளப்ப வேண்டிய திருடர்கள், சில நேரங்களில் காமெடி பீஸ்களாக மாறி விடுகின்றனர்.
3 ஆட்டைக் காணோம்லே
சரி, திருடர்களின் செயல்பாடுகள்தான் இப்படி சிரிப்பை வரவழைக்கும் வகையில் இருக்கிறதென்றால் பல நேரங்களில் திருட்டை கண்டுபிடிக்க வேண்டிய போலீஸாரின் செயல்பாடுகள் அதைவிட காமெடியாக இருக்கின்றன. நெல்லை மாவட்டம் சூரங்குடி என்ற கிராமத்தைச் சேர்ந்த ஒரு பாட்டி, தனது வீட்டின் பின்னால் கட்டப்பட்டிருந்த 3 ஆடுகளைக் காணவில்லை என கூறி சமீபத்தில் போலீஸ் ஸ்டேஷனுக்கு புகார் அளிக்கச் சென்றார். ‘'டென்ஷன்.. டென்ஷன்.. ஆட்டைக் காணல, மாட்டைக் காணலண்ணா என் கிட்ட கேஸ் தர்றது!`` என சிபிஐ ஆபிசர் ரேஞ்சுக்கு அலுத்துக்கொண்ட எஸ்.ஐ, ``ஏம்மா.. வீட்டைச் சுற்றி சிசிடிவி கேமரா வெச்சிருக்கலாம்ல`` என்றார். விபரமான அந்த கிராமத்து பாட்டி, ‘' வைக்கலாம்தான். அப்புறம் உங்களை மாதிரி ஆளுங்களுக்கு வேலையில்லாமல் போயிடுமே!'' என நெத்தியடியாக பதில் சொல்ல, எஸ்.ஐயின் சப்தநாடியும் அடங்கிவிட்டது.
களவும் கற்று மற என்பார்கள். நாடு போகிற போக்கில் எளிதில் மறக்க முடியாத அளவுக்கு களவும், காமெடி சமாச்சாரமாக மாறிக் கொண்டிருக்கிறது.
- கௌதம்