வேளச்சேரியில் உள்ள ஏரியை புனரமைக்கும் பணி தொடங்கியது... நாம் தமிழர் கட்சி களமிறங்கியது
சென்னை: நாம் தமிழர் கட்சியின் சுற்றுச்சூழல் பாசறை சார்பில் சென்னை வேளச்சேரியில் உள்ள ஏரியை புனரமைக்கும் பணி நடைபெற்றது. இதில், திரளானோர் ஆர்வத்துடன் பங்கேற்றனர்.
வேளச்சேரி ஏரி, 256.48 ஏக்கர் பரப்பளவு கொண்டது. அரசு கையகப்படுத்தியது போக, தற்போது, 55 ஏக்கரில் ஏரி உள்ளது. இதில், 600க்கும் மேற்பட்ட ஆக்கிரமிப்புகள் உள்ளன என கூறப்படுகிறது. வேளச்சேரி ஏரியை துார்வாரி, 50 ஆண்டுகளுக்கு மேல் ஆகிறது.ஏரி ஆக்கிரமிப்பில், தி.மு.க., - அ.தி.மு.க.,வினரின் பங்கு அதிகம் என்றும் சொல்லப்படுகிறது.
தேர்தல் நேரத்தில் கூட, வேளச்சேரி ஏரியை பாதுகாப்போம் என்று வேட்பாளர்கள் வாக்குறுதி அளிப்பதாகவும் ஆனால், உரிய நடவடிக்கை இதுவரை எடுக்கப்படவில்லை என்று அப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.
இந்நிலையில் நாம் தமிழர் கட்சி சுற்றுச்சூழல் பாசறையைச் சேர்ந்த 50க்கும் மேற்பட்டோர் வேளச்சேரி நூறு அடி சாலை- வேளச்சேரி பிரதான சாலைக்கு இடைப்பட்ட பகுதியில் உள்ள ஏரியை, புனரமைக்கும் பணியில் ஈடுபட்டனர். அப்போது ஏரியை சுற்றி உள்ள ஆகாய தாமரையை சுற்றி வலை அமைப்பது, ஜேசிபி உதவியுடன் குப்பைக்கழிவுகளை அகற்றும் பணிகளை மேற்கொண்டனர்.
மேலும் ஏரிக்கரையை சுற்றி மரக்கன்றுகள் நட்டதுடன், பராமரிப்பு வேலியையும் அமைத்தனர். மேலும், நடமாடும் ரத்த தான முகாமும் நடத்தப்பட்டது.
நாம் தமிழர் கட்சியின் சுற்றுச்சூழல் பாசறை, 2019 ஆம் ஆண்டிற்கான திட்டங்களில் ஒன்றான நீர்நிலைகள் புனரமைப்பை நாம் தமிழர் கட்சி - வேளச்சேரி சட்டமன்றத் தொகுதி உறவுகளுடன் இணைந்து முன்னெடுக்கவிருக்கிறது என சுற்றறிக்கை விடுக்கப்பட்டு இருந்தது. அதில், களப்பணியில் பங்கேற்க வாய்ப்புள்ள அனைத்துத் தொகுதி உறவுகளும் கலந்துகொண்டு ஒத்துழைப்பு வழங்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம எனத் தெரிவிக்கப்பட்டு இருந்தது.
இதன் முதற்கட்டமாக, வேளச்சேரி 100 அடி சாலை - வேளச்சேரி முதன்மைச் சாலைக்கு இடைப்பட்ட பகுதிக்குள் இருக்கும் ஏரியைப் புனரமைக்கும் பணியில் ஏராளமானோர் பங்கெடுத்துக் கொண்டனர்.