தூக்கி அடித்த கேஸ் விலை! ஆமா.. இந்த கதர்களை காணோமே! சைலண்ட் மோடில் காங்கிரஸ்! சரமாரி கேள்வி!
சென்னை: வணிக சிலிண்டரின் விலை ரூ.993 என உயர்த்தப்பட்டு, ஒரு சிலிண்டர் ரூ.3,237க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதன் காரணமாக டீ, பரோட்டா என அனைத்து உணவு பொருட்களின் விலையும் எகிறியருக்கிறது. இவ்வளவு நடந்தும் காங்கிரஸ் பெரிய அளவில் போராட்டத்தை அறிவிக்காதது ஏன் என பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
இதுவே காங்கிரஸ் ஆட்சி நடைபெற்றிருந்தால், இந்நேரம் சிலிண்டரோடு பாஜகவினர் நாடாளுமன்றத்திற்குள் குதித்திருப்பார்கள். அந்த அளவுக்கு அவர்கள் காங்கிரஸ் எதிர்ப்பில் தீவிரம் காட்டினார்கள். ஆனால், காங்கிரஸ் இந்த அளவுக்கு வீரியமாக இல்லை என்று விமர்சனங்கள் எழுந்திருக்கின்றன.

கேஸ் விலை உயர்வு
சர்வதேச அளவில் நிலவும் கச்சா எண்ணெய் விலை மாற்றம் மற்றும் புவிசார் அரசியல் சூழல்களைக் கருத்தில் கொண்டு, பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களான இந்தியன் ஆயில் (IOC), பாரத் பெட்ரோலியம் (BPCL) மற்றும் ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் (HPCL) ஆகியவை இந்த விலை உயர்வை அறிவித்துள்ளன.
அதன்படி 19 கிலோ எடையுள்ள வணிக சிலிண்டரின் விலை சுமார் ₹993 வரை உயர்த்தப்பட்டுள்ளது. இந்த உயர்வால் சென்னையில் வணிக சிலிண்டர் விலை சுமார் ₹3,237-ஐ எட்டியுள்ளது.
காங்கிரஸ் ரியாக்ஷன்
காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை, எம்பிக்கள் ஜோதிமணி, மாணிக்கம் தாகூர் போன்றோர் ட்விட்டரில், இந்த விலை உயர்வுக்கு எதிராக தங்கள் கண்டனத்தை பதிவிட்டிருக்கிறார்கள். ஆனால், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி இந்த விலை உயர்வை எதிர்த்து எந்த போராட்டத்தையும் இன்னும் நடத்தவில்லை. இந்திய வரலாற்றில் இதற்கு முன்னர், ஒரே நாளில் ரூ.993 என்கிற அளவுக்கு விலை உயர்த்தப்பட்டது கிடையாது.

களத்தில் இறங்கிய பாஜக
கடந்த காங்கிரஸ் ஆட்சியில், சிலிண்டருக்கு ரூ.50 உயர்த்தப்பட்டபோது, அதை எதிர்த்து அப்போது பாஜகவின் மகளிர் அணித் தலைவியாக இருந்த ஸ்மிருதி இரானி, டெல்லி வீதிகளில் சிலிண்டர்களைச் சுமந்து கொண்டு போராட்டத்தை நடத்தியிருந்தார். இது நாடு முழுவதும் எதிரொலித்திருந்தது.

அதேபோல, கடந்த 2011ல் ஜெய்ப்பூரில் நடந்த போராட்டம் மொத்த நாட்டையும் திரும்பி பார்க்க வைத்தது. வெறும் ₹50 சிலிண்டர் விலை உயர்வுக்கே பாஜகவின் யுவ மோர்ச்சா வீதியில் இறங்கிப் போராடியது. அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங் மற்றும் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு எதிராக "சாமானிய மக்களின் முதுகெலும்பை காங்கிரஸ் உடைக்கிறது" என முழக்கமிட்டது, மக்களிடையே பெரும் ஆதரவை பெற்றது.
திரும்பி பார்க்க வைத்த போராட்டங்கள்
பாஜக வெறும் போராட்டங்களை மட்டும் நடத்தாமல், மக்கள் எளிதில் புரிந்துகொள்ளும் வகையில் குறியீடுகளை பயன்படுத்தியது. அதாவது, காலி சிலிண்டர்களைச் சுமந்து செல்வது, சிலிண்டர்களுக்கு மாலை அணிவிப்பது போன்ற செயல்கள் குடும்பப் பெண்களின் கவனத்தை ஈர்த்தன. நவீன எரிபொருளைப் பயன்படுத்த முடியாமல் மக்கள் பழைய காலத்திற்கே தள்ளப்படுகிறார்கள் என்பதைக் காட்ட, பாஜகவினர் மாட்டு வண்டிகளைப் பயன்படுத்தினர்.
பாஜக வைத்த முழக்கம்
பாஜக அந்த விலை உயர்வை வெறும் பொருளாதாரப் பிரச்சினையாகப் பார்க்காமல், அதை ஊழல் மற்றும் நிர்வாகத் திறமையின்மையுடன் இணைத்தது. காங்கிரஸ் அரசு செல்வந்தர்களுக்காகச் செயல்படுகிறது, ஏழைத் தாய்மார்களின் சமையலறையைச் சிதைக்கிறது என்ற கருத்தை முன்வைத்தனர். 2G ஸ்பெக்ட்ரம், நிலக்கரி ஊழல் போன்றவற்றால் அரசுக்கு ஏற்பட்ட இழப்பை ஈடுகட்டவே மக்களிடம் வரி வசூலிக்கப்படுகிறது என்ற குற்றச்சாட்டை பாஜகவினர் முன்வைத்தனர்.
சைலண்ட் மோடில் காங்கிரஸ்
ஆனால், இன்று ஒரேயடியாக ரூ.993 என விலை உயர்த்தப்பட்டிருந்த போதும் காங்கிரஸ் பெரிய அளவில் போராட்டத்தை முன்னெடுக்காமல் இருப்பது ஏன் என்று பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
பாஜக ஆட்சியில் சிலிண்டர் விலை உயர்த்தப்படுவது இது முதல்முறை கிடையாது. இதற்கு முன்னரும் பலரும் ரேட் ஏற்றப்பட்டிருக்கிறது. ஆனால், பாஜகவை போல காங்கிரஸ் அவ்வளவு தீவிரமாக களத்தில் இறங்கியது இல்லை.

இதற்கு முன்னர் எவ்வளவு விலை உயர்த்தப்பட்டது?
- 2014 - ₹1,200-₹1,300
- 2016 - ₹1,250-₹1,400
- 2018 - ₹1,400-₹1,600
- 2020 - ₹1,200-₹1,300
- 2021 - ₹1,600-₹1,800
- 2022 - ₹2,200-₹2,400
- 2023 - ₹2,500-₹2,700
- 2024 - ₹2,800-₹2,900
- 2025 - ₹2,000-₹2,100
- 2026(இன்று) - ₹3,237 (சென்னை)
இதையெல்லாம் பார்க்கும்போது, பாஜக ஒன்றும் அவ்வளவு பலமானதாக இல்லை. மாறாக, காங்கிரஸ்தான் ரொம்பவே பலவீனமாக இருப்பதாக விமர்சனங்கள் எழுகிறது. காங்கிரஸ் இனியாவது விழித்துகொண்டு களத்தில் இறங்குமா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.












Click it and Unblock the Notifications