இன்று போல் அன்று-சபாநாயகர் அப்பாவு வழக்கு-மீண்டும் எண்ணப்பட்ட ராதாபுரம் தபால் வாக்கு- 7ஆண்டு இழுபறி!
சென்னை: 2021 தேர்தலில் தென்காசி சட்டசபை தொகுதியில் பதிவான தபால் வாக்குகள் சென்னை உயர்நீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து இன்று மீண்டும் எண்ணப்பட்டன. இதேபோல 2016 தேர்தலில் ராதாபுரம் தொகுதியில் பதிவான தபால் வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் இன்னமும் அறிவிக்கப்படாமல் வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கிறது.

இன்று தென்காசி: 2021-ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் தென்காசி தொகுதியில் திமுக அணியில் காங்கிரஸ் வேட்பாளராக பழனிநாடார்; அதிமுக வேட்பாளராக செல்வமோகன்தாஸ் பாண்டியன் போட்டியிட்டனர். இத்தேர்தலில் 370 வாக்குகள் கூடுதலாக பெற்று பழனி நாடார் வெற்றி பெற்றார். ஆனால் தென்காசி தொகுதியில் தபால் வாக்கு எண்ணிக்கையில் முறைகேடுகள், குளறுபடிகள் நடந்ததால் மறுவாக்கு எண்ணிக்கை நடத்த கோரி அதிமுக வேட்பாளர் செல்வமோகன்தாஸ் பாண்டியன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இவ்வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், தென்காசி தொகுதி தபால் வாக்குகளை மீண்டும் எண்ணுவதற்கு உத்தரவிட்டது. இதனடிப்படையில் இன்று வாக்குகள் எண்ணப்பட்டன.
அன்று ராதாபுரம்: இதேபோல ஒரு வழக்கை ராதாபுரம் சட்டசபை தொகுதியும் எதிர்கொண்டிருக்கிறது. 2016 சட்டசபை தேர்தலில் ராதாபுரம் தொகுதியில் திமுக வேட்பாளராக தற்போதைய சட்டசபை சபாநாயகர் அப்பாவு, அவரை எதிர்த்து அதிமுக வேட்பாளராக இன்பதுரை போட்டியிட்டனர். அத்தேர்தலில் அப்பாவுவை விட இன்பதுரை 49 வாக்குகள் கூடுதலாக பெற்று வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. இதனை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் அப்பாவு வழக்கு தொடர்ந்தார். இவ்வழக்கிலும் தபால் வாக்குகளில் கடைசி 3 சுற்றுகள் மீண்டும் எண்ணப்பட்டன. ஆனால் நீதிமன்ற உத்தரவுகளால் முடிவுகள் அறிவிக்கப்படவில்லை. இந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் இன்னமும் நிலுவையில் இருக்கிறது. கடந்த பிப்ரவரி மாதம் இவ்வழக்கு விசாரணைக்கு வந்த போது, 2021-ம் ஆண்டு சட்டசபை தேர்தலும் முடிவடைந்துவிட்டது; அப்பாவும் சபாநாயகராகிவிட்டார்; ஆகையால் இவ்வழக்கை முடித்து வைக்க வேண்டும் என இன்பதுரை சார்பாக வாதிடப்பட்டது. ஆனால் அப்பாவு தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் வில்சன், இன்பதுரை இப்போதும் முன்னாள் எம்.எல்.ஏ.வுக்கான ஓய்வூதியம் பெறுகிறார். பொதுமக்களுக்கும் மறுவாக்கு எண்ணிக்கை முடிவுகள் தெரியவேண்டும். ஆகையால் வழக்கை முடித்து வைக்கக் கூடாது என வாதிட்டார். இதனையடுத்து இன்பதுரை மனு டிஸ்மிஸ் செய்யப்பட்டது. தற்போது வரை உச்சநீதிமன்றத்தில் இவ்வழக்கு நிலுவையில் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications