டவ் தே புயல்: தமிழகம் உள்பட 3 மாநிலங்களுக்கு ரெட் அலர்ட் விடுத்தது வானிலை மையம்
சென்னை: தமிழகம், குஜராத், மகாராஷ்டிரா ஆகிய 3 மாநிலங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கையை வானிலை மையம் விடுத்துள்ளது.
தென் கிழக்கு அரபிக் கடலில் நிலை கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமானது நேற்றைய தினம் புயலாக மாறியது. இந்த புயலுக்கு டவ் தே என பெயரிடப்பட்டுள்ளது. இதை மியான்மர் நாடு பெயர் சூட்டியது.
தற்போது கோவா கடற்கரை பகுதியில் இந்த புயல் மையம் கொண்டுள்ளது. இதனால் குஜராத், மகாராஷ்டிரா, கேரளா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களுக்கு கனமழையை கொடுக்கும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கரையை கடக்கும்
இந்த புயல் நாளை மறுநாள் குஜராத்தின் போர்பந்தர்- நலியா இடையே கரையை கடக்கும். இந்த புயல் அரபிக் கடலில் மத்திய கிழக்கு பகுதியில் உள்ளது. கோவாவிலிருந்து வடக்கு நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது. இந்த நிலையில் தமிழகம், குஜராத், மகாராஷ்டிரா ஆகிய 3 மாநிலங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேற்கண்ட மாநிலங்களில் மிக பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளது.

தமிழகம்
பலத்த சூறாவளியுடன் தமிழகம் உள்பட மாநிலங்களிலும் கனமழை பெய்யக் கூடும் என வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களுக்கு நல்ல மழையை கொடுக்கும். சென்னை உள்பட வடகடலோர மாவட்டங்கள், உள் மாவட்டங்கள், தென் மாவட்டங்களிலும் நல்ல மழை பெய்யும்.

நீலகிரி மாவட்டம்
கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் நீலகிரி மாவட்டத்தில் பந்தலூரில் 18 செ.மீ. மழை பெய்துள்ளது. நடுவட்டம், சின்கோனா ஆகிய இடங்களில் தலா 9 செ.மீ. மழையும், சிவலோகத்தில் 8, சுருளக்கோடு, சிற்றார், கூடலூர் பஜார், பெருஞ்சாணி, புத்தர் அணை ஆகிய பகுதிகளில் தலா 7 செ.மீ. மழை பெய்துள்ளது.

தக்கலை
குளித்துறை, தக்கலை ஆகிய இடங்களில் தலா 6 செ.மீ. மழையும் குளச்சல், தேக்கடி, பெரியார், அவலாஞ்சி, கன்னியாகுமரி ஆகிய பகுதிகளில் தலா 5 செ,மீ. மழையும் பதிவாகியுள்ளது. இரணியல், தென்காசி, பாபநாசம் தலா 4 செ.மீ. மழையும் மயிலாடி, நாகர்கோவில், கொட்டாரம், பொள்ளாச்சியில் தலா 3 செ.மீ. மழையும் பெய்துள்ளது.












Click it and Unblock the Notifications