குடும்ப சொத்து பாகப்பிரிவினை.. கடன் ரசீது, அடமானம் பத்திரத்தில் மாற்றம்? பதிவுத்துறை திடீர் உத்தரவு
சென்னை: "பொது அதிகார ஆவண ரத்து, பாகப்பிரிவினை உள்ளிட்ட பத்திரங்களை பதிவு செய்வது குறித்து பதிவுத்துறை முக்கிய உத்தரவினை பிறப்பித்திருக்கிறது.
பொதுவாக, ஆவணங்களை பதிவு செய்யும்போது, அது தொடர்பாக தடை ஏதாவது இருக்கிறதா என்பதை, சார் பதிவாளர்கள் சரிபார்ப்பது அவசியமாகும்..

ஆனால், இதுபோன்ற ஆவணங்கள் தாக்கல் செய்யப்படும்போது, வேறு சார் பதிவாளர் அலுவலகத்தில் தடை எதுவும் உள்ளதா என்பதையும் டிஐஜி. அலுவலகம் வாயிலாக சரிபார்க்க வேண்டும் என்பது நடைமுறையாக இருந்தது..
சார் பதிவாளர்: இதற்காக, சம்பந்தப்பட்ட சார் பதிவாளர் அலுவலகங்களுக்கு இடையே கடித போக்குவரத்து நடத்த, அதிக தாமதம் ஏற்படுவதாக புகார் எழுந்தது. எனவேதான் இதனை முறைப்படுத்த ஆன்லைன் பத்திரப்பதிவுக்கான, ஸ்டார் 2.0 சாப்ட்வேரில் உரிய வசதிகள் ஏற்படுத்தப்பட்டன.
எனினும், அதற்கு பிறகும் பெரும்பாலான சார் - பதிவாளர்கள், இவ்வகை பத்திரங்களை நிலுவையில் வைப்பதாக, பதிவுத்துறை கவனத்துக்கு வந்துள்ளது. இப்படிப்பட்ட சூழலில், பதிவுத்துறை தலைவர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் முக்கிய உத்தரவு ஒன்றினை பிறப்பித்திருக்கிறார். அந்த உத்தரவில் உள்ளதாவது:
10 கட்டளைகள்: "வங்கி மற்றும் நிதி நிறுவனங்களிடம் இருந்து பெறப்படும் ஆவண ஒப்படைப்பு, அடமானம், கடன் முடிந்த பிறகு மேற்கொள்ளப்படும் ரத்து மற்றும் ரசீது, பொது அதிகார ரத்து, குடும்ப நபர்களிடையே மேற்கொள்ளப்படும் பாகப்பிரிவினை பத்திரங்கள் தாக்கலாகும் போது, டி.ஐ.ஜி., அலுவலகத்தில் இருந்து ஒப்புதல் பெற வேண்டியதில்லை.
இது தொடர்பான கட்டுப்பாடுகள் தளர்த்தப்படுகின்றன. இவை தவிர, பிற ஆவணங்களுக்கு இந்த கட்டுப்பாடுகள் தொடரும். இதற்கான சுற்றறிக்கை அடிப்படையில், உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தளர்வுகள்: முன்னதாக அதாவது கடந்த ஏப்ரல் 5ம்தேதியே பதிவுத்துறை அதிகாரி சில உத்தரவுகளை பிறப்பித்திருந்தார்.. அதாவது, உரிய காரணமின்றி, பத்திரங்களை நிலுவையில் வைக்கும் சார் - பதிவாளர்களுக்கு கிடுக்கிப்பிடி போடும் வகையில், 10 கட்டளைகள் அடங்கிய உத்தரவை, பதிவுத்துறை தலைவர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் அப்போது பிறப்பித்திருந்தார்.
அதில், "பதிவுக்கு தாக்கல் செய்யப்படும் பத்திரத்தை, சார் - பதிவாளர் நிலுவையில் வைக்கும் போது, 'ஸ்டார் 2.0 'மென்பொருளில், 'டிராப் டவுன் பாக்ஸ்' என்ற பிரிவில், உரிய காரணத்தை பதிவிட வேண்டும். ஒரு பத்திரம் நிலுவையில் வைக்கப்படும் நிகழ்வில், அதற்கான எழுத்துப்பூர்வ கடிதம் பெறப்பட்டிருக்க வேண்டும்.. நிலுவையில் வைக்கப்படும் பத்திரங்கள் விஷயத்தில், 15 நாட்களுக்குள் முடிவு எட்டப்பட வேண்டும்" என்பன உட்பட 10 கட்டளைகளை பிறப்பித்திருந்தது நினைவுகூரத்தக்கது.












Click it and Unblock the Notifications