சாரி.. தவிர்க்க முடியாத காரணத்தால் என்னால் வர முடியல.. வீடியோவில் மன்னிப்பு கேட்ட முகேஷ் அம்பானி!
சென்னை: உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் என்னால் பங்கேற்க முடியவில்லை, அதற்காக மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன் என முகேஷ் அம்பானி தெரிவித்துள்ளார்.
உலக முதலீட்டாளர்கள் மாநாடு சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் இன்றும், நாளையும் நடைபெறுகிறது. உலக முதலீட்டாளர்கள் மாநாட்டை இன்று காலை 10 மணிக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இந்த மாநாட்டில் தொழில் முதலீட்டை ஈர்க்கும் விதமாக பல்வேறு வெளிநாடுகளில் இருந்து ஏராளமான தொழிலதிபர்கள் பங்கேற்றுள்ளனர். பல்வேறு தொழில் நிறுவனங்களுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்களும் கையெழுத்தாகிறது.

இந்த மாநாட்டில் 50 நாடுகளைச் சேர்ந்த 450க்கும் மேற்பட்ட சர்வதேச பிரதிநிதிகள், உலகப் புகழ்பெற்ற 170 பேச்சாளர்கள் பங்கேற்றுள்ளனர். இந்த மாநாட்டில் தொழில் கருந்தரங்குகள், வணிக நிறுவனங்கள் தொடர்பான கண்காட்சிகள் உள்ளிட்டவை இடம்பெற்றுள்ளன. இந்த மாநாட்டில் கலந்து கொண்டுள்ள நிறுவனங்கள் தமிழ்நாட்டில் முதலீடு செய்ய புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளன.
உலகின் முன்னணி மின் வாகனத் தயாரிப்பு நிறுவனமான VinFast தமிழகத்தில் ரூ.16,000 கோடி முதலீடு செய்ய ஒப்பந்தம் செய்துள்ளது. தமிழ்நாட்டில் JSW எனர்ஜி நிறுவனம் ரூ.12,000 கோடி முதலீடு செய்யவும், டாடா நிறுவனம் ரூ.12,000 கோடி முதலீடு செய்யவும் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. டிவிஎஸ் நிறுவனம் கூடுதலாக ரூ.5000 கோடி முதலீடும், ஹூண்டாய் நிறுவனம் கூடுதலாக ரூ.6,000 கோடி முதலீடு செய்யவும் ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டது. Pagatron நிறுவனம் ரூ.1,000 கோடி முதலீடு செய்வதற்கான ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டது.
ரிலையன்ஸ் குழுமத்தின் ஜியோ நிறுவனம் தமிழ்நாட்டில் 35 ஆயிரம் கோடி ரூபாய் முதலீடு செய்துள்ளது. உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் பங்கேற்காவிட்டாலும், காணொலி காட்சி மூலம் உரையாற்றினார் ரிலையன்ஸ் குழும தலைவர் முகேஷ் அம்பானி. அப்போது அவர் பேசுகையில், "தவிர்க்க முடியாத காரணங்களால் உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் என்னால் பங்கேற்க முடியவில்லை. இதற்காக மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்.
முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு, நாட்டிலேயே தொழில் நிறுவனங்களுக்கு இணக்கமான மாநிலங்களில் முன்னிலையில் உள்ளது. தமிழ்நாடு எப்போதுமே தொழில், கலாச்சாரத்திற்கு சிறந்த மாநிலம். தமிழ்நாடு முழுவதும் ரூ.35 ஆயிரம் கோடி ரிலையன்ஸ் குழுமம் முதலீடு செய்துள்ளது. ஏஐ, புதுப்பிக்கத்தக்க ஆற்றல் துறைகளில் தமிழ்நாடு முன்னிலை வகித்து வருகிறது. புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, பசுமை ஹைட்ரஜன் துறைகளில் தமிழ்நாட்டில் புதிய முதலீடுகளைச் செய்யவுள்ளோம்" என்று பேசினார்.












Click it and Unblock the Notifications