தண்டாவளங்களில் தேங்கிய மழைநீர் அகற்றம்: ரயில்பாதை சீரானதால் 500 மின்சார ரயில்கள் இயக்கம்
கனமழை வெள்ளம் காரணமாக தண்டவாளத்தில் தேங்கிய தண்ணீர் அகற்றப்பட்டதால் ரயில் போக்குவரத்து சீரானது.
சென்னை: தண்டவாளங்களில் தேங்கிய மழைநீர் அகற்றப்பட்டதால் 500 புறநகர் மின் ரயில்கள் இயக்கப்பட்டு வருவதாக சென்னை ரயில்வே கோட்டம் தெரிவித்துள்ளது. சென்னை எழும்பூர், சென்ட்ரலில் இருந்து பல்வேறு இடங்களுக்கு செல்லும் ரயில்களை மிதமான வேகத்தில் இயக்க அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் ரயில்வேத்துறை அதிகாரிகள் கூறியுள்ளனர்.
தமிழ்நாட்டில் பெய்து வரும் கனமழையால் பல மாவட்டங்கள் வெள்ளத்தில் மிதக்கின்றன. சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு,திருவள்ளூரில் விடாமல் பெய்து வரும் மழையால் குடியிருப்புகளை வெள்ளநீர் சூழ்ந்துள்ளது. மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. பல மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. சாலை போக்குவரத்து முற்றிலும் முடங்கியுள்ளது.

சென்னை சென்ட்ரல் - திருவள்ளூர் - அரக்கோணம் இடையே தேங்கிய மழைநீர் அகற்றியதால் ரயில் சேவை மீண்டும் தொடங்கியது. ஆவடி - அம்பத்தூர் இடையே தேங்கி மழைநீர் அகற்றப்பட்டு சென்னை சென்ட்ரலுக்கு புறநகர் மின் ரயில் சேவை சீரானது.
சென்னை கடற்கரை - வேளச்சேரிக்கு மேம்பால ரயில் சேவை, புறநகர் பகுதிகளுக்கும் ரயில் போக்குவரத்து சீரானது. கொருக்குப்பேட்டை - திருவொற்றியூர் - கும்மிடிப்பூண்டி இடையே மழைநீர் அகற்றப்பட்டு, ரயில் சேவை நடைபெறுகிறது. சென்னை புறநகர் பகுதிகளுக்கு ரயில் பாதை சீரானதால் ஞாயிற்றுக்கிழமை போல தற்போது 500 மின் ரயில்கள் இயக்கப்படுகிறது.

சென்னை எழும்பூர், சென்ட்ரலில் இருந்து பல்வேறு இடங்களுக்கு செல்லும் ரயில்களை மிதமான வேகத்தில் இயக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. ரயில் பாதைகளில் மழைநீர் தேக்கம் மற்றும் உடைப்பு குறித்து டிராலியில் சென்று கண்காணிக்க ரயில்வே உத்தரவிட்டுள்ளது. ரயில் பாதையில் மரங்கள் விழுந்தால் உடனடியாக அகற்றவும் ரயில்வே ஊழியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மழை, வெள்ளம் முன்னெச்சரிக்கையாக பாதிப்புள்ள பகுதிகளில் 10 முதல் 30 கி.மீ வேகத்தில் ரயில்களை இயக்க உத்தரவிடப்பட்டுள்ளது. சென்னையின் பல்வேறு பகுதிகளில் இடைவிடாது மழை பெய்து வருவதால், இன்றைய தினம் புறநகர் ரயில் சேவைகளான சென்னை சென்ட்ரல் - அரக்கோணம், சென்னை சென்ட்ரல் - கும்மிடிப்பூண்டி, சென்னை சென்ட்ரல் - சூலூர் பேட்டை, சென்னை கடற்கரை - செங்கல்பட்டு மற்றும் சென்னை கடற்கரை - வேளச்சேரி ஆகிய வழித்தடங்களில் ஞாயிற்றுக்கிழமை அட்டவணையின்படி ரயில்கள் இயக்கப்பட்டு வருவதாக அதிகாரிகள் கூறியுள்ளனர்.












Click it and Unblock the Notifications