குவைத் தீ விபத்தில் தூத்துக்குடியைச் சேர்ந்த வீராசாமி மாரியப்பன் பலி? வெளியான அதிர்ச்சி தகவல்!
சென்னை: குவைத் தீ விபத்தில் தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு அருகே உள்ள வானரமுட்டியைச் சேர்ந்த வீராசாமி மாரியப்பன் என்பவர் பலியானதாக தகவல் வெளியாகியுள்ளது.
குவைத்தின் தெற்கு பகுதியில் உள்ள அகமதி மாகாணத்தின் மங்காப் நகரில் 6 மாடிகளை கொண்ட குடியிருப்பு உள்ளது. இந்த குடியிருப்பு கேரளாவை சேர்ந்த ஆபிரகாம் என்ற தொழிலதிபருக்கு சொந்தமானது. இந்த குடியிருப்பில் ஒரு தனியார் கட்டுமான நிறுவனத்தின் ஊழியர்கள் ஏராளமானோர் தங்கியுள்ளனர். இந்த நிலையில் கட்டிடத்தின் சமையலறையில் நேற்று அதிகாலை 4 மணியளவில் திடீரென தீப்பிடித்தது.

இந்த தீ கட்டிடம் முழுவதும் பரவியதில், கட்டிடம் முழுவதும் புகை மண்டலமாக காட்சி அளித்தது. தீயில் சிக்கி கொண்ட தொழிலாளர்கள் பதற்றத்தில் கட்டிடத்தில் இருந்து வெளியே ஓடி வந்தனர். கட்டிடத்தில் இருந்து தொழிலாளர்கள் பலர் வெளியே ஓடி தப்பிய நிலையில், அறைகளில் தூங்கி கொண்டிருந்தவர்கள் உள்ளே சிக்கி கொண்டனர்.
இந்த தீ விபத்து குறித்த தகவல் கிடைத்ததும் தீயணைப்பு படையினர் விரைந்து சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். தீயணைப்பு வீரர்கள் பல மணி நேர போராட்டத்துக்கு பின் தீயை அணைத்தனர். இந்த தீ விபத்தில்,53 பேர் உயிரிழந்தனர். மேலும் 50 பேர் படுகாயமடைந்தனர். விபத்தில் பலியானவர்கள், படுகாயமடைந்தவர்களில் பெரும்பாலானோர் இந்தியர்கள்.
தீ விபத்தில் இந்தியர்கள் அதிகளவில் பலியானதாக வந்த தகவலையடுத்து பிரதமர் நரேந்திர மோடியின் உத்தரவின் பேரில் ஒன்றிய வெளியுறவு இணை அமைச்சர் கே.வி.சிங் அவசரமாக குவைத்துக்கு புறப்பட்டு சென்றுள்ளார். அங்கு, இந்தியர்கள் உடல்களை அடையாளம் கண்டு இந்தியாவுக்கு கொண்டு வரும் பணிகளை ஒருங்கிணைத்து வருகிறார்.
இதற்கிடையே, குவைத் நாட்டில் உள்ள இந்தியத் தூதரகம் மற்றும் அங்குள்ள தமிழ் அமைப்புகளைத் தொடர்பு கொண்டு விபத்தில் சிக்கிய தமிழர்களுக்குத் தேவையான மருத்துவ உதவிகள் கிடைக்க நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு அயலகதமிழர் நலன் மற்றும் மறுவாழ்வு துறை ஆணையரகத்துக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார். அதன்படி, அயலகத் தமிழர் நலத்துறை, பணிகளை தீவிரப்படுத்தி உள்ளது.
குவைத்தில் அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் தமிழகத்தின் தஞ்சாவூர், ராமநாதபுரம், தூத்துக்குடி, விழுப்புரம் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் உட்பட 5 தமிழர்கள் உயிரிழந்தது தெரியவந்துள்ளது.
அதில் ஒருவர் ராமநாதபுரம் மாவட்டம் தென்னவனூரை சேர்ந்த ராமு கருப்பண்ணன் என்பது உறுதியாகியுள்ளது. மற்றொருவர் தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி ஆதனூர் பகுதியை சேர்ந்த புனாப் ரிச்சர்ட் ராய் எனக் கூறப்படுகிறது.
குவைத் தீ விபத்தில் தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு அருகே உள்ள வானரமுட்டியைச் சேர்ந்த வீராசாமி மாரியப்பன் என்பவர் பலியானதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. அவரை தொடர்பு கொள்ள முடியவில்லை என்பதால் அவர் பலியாகி இருக்கலாம் என தமிழ்ச் சங்கங்கள் மூலமாக தகவல் கிடைத்துள்ளது. எனினும், இந்திய தூதரகம் இதனை உறுதி செய்யவில்லை.
அமைச்சர் செஞ்சி மஸ்தான் கூறுகையில், "குவைத் தீ விபத்தில் 5 தமிழர்கள் உயிரிழந்திருக்கலாம் என தகவல் தெரியவந்துள்ளது. ராமு கருப்பண்ணன், சின்னதுரை கிருஷ்ணமூர்த்தி, முகமது ஷெரீப், ரிச்சர்ட் ராய், வீராசாமி மாரியப்பன் ஆகிய 5 பேர் உயிரிழந்திருக்கலாம் என குவைத் தமிழ் சங்கம் தெரிவித்துள்ளது. ஆனாலும், உயிரிழப்பு பற்றிய அதிகாரப்பூர்வ தகவல்கள் இன்னும் கிடைக்கவில்லை" எனத் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications