குடியரசு தின விழா..பட்டியலின தலைவர்கள் கொடியேற்றுவதை உறுதி செய்க..இறையன்பு கடிதம்
சென்னை: குடியரசு தின விழாவில் பட்டியலின தலைவர்கள் கொடியேற்றுவதை உறுதி செய்ய வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர்களுக்கு தலைமை செயலாளர் இறையன்பு கடிதம் எழுதி உள்ளார். அதில் 15 விதமான அறிவுரைகளை சுட்டிக்காட்டி கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.
குடியரசு தின விழா வருகிற 26ஆம் தேதி நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. மெரினா கடற்கரை காமராஜர் சாலையில் அமைந்துள்ள காந்தி சிலை அருகே குடியரசு தின விழா கொண்டாட்டங்கள் நடைபெறும். ஆனால் இந்த ஆண்டு உழைப்பாளர் சிலை அருகே குடியரசு தின விழா கொண்டாட்டங்கள் நடைபெற உள்ளது.
இதற்கான அணிவகுப்பு ஒத்திகை சென்னை மெரினா கடற்கரை சாலையில் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் குடியரசு தின விழாவில் பட்டியலின தலைவர்கள் கொடியேற்றுவதை உறுதி செய்ய வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர்களுக்கு தலைமை செயலாளர் இறையன்பு கடிதம் எழுதி உள்ளார். அதில் 15 விதமான அறிவுரைகளை சுட்டிக்காட்டி கடிதம் அனுப்பப்பட்டுள்ளது
குடியரசு தினத்தை ஒட்டி தமிழ்நாடு முழுவதும் கிராமசபை கூட்டம் நடத்த வேண்டும் என்று தலைமை செயலாளார் உத்தரவு பிறப்பித்துள்ளார். ஜனவரி 26ஆம் தேதியன்று அனைத்து கிராமங்களிலும் கிராம சபை கூட்டம் நடத்தக்கோரி மாவட்ட ஆட்சித்தலைவர்களுக்கு தலைமை செயலாளர் இறையன்பு கடிதம் எழுதியுள்ளார்.
குடியரசு தினத்தன்று ஊராட்சிகளில் பட்டியலின தலைவர்கள் கொடியேற்றுவதை உறுதிசெய்ய வேண்டும். பிரச்சனைக்குரிய 15 இடங்களில் சாதி பாகுபாடின்றி நடத்த உத்தரவு பிறப்பித்துள்ளார். எவ்வித புகார்களுமின்றி குடியரசு தினவிழா இணக்கமாக நடைபெறுவதை உறுதி செய்யவேண்டும் என இறையன்பு எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
குடியரசு தின கிராம சபை கூட்டத்தில் பட்டியலின கிராம ஊராட்சி தலைவர்கள் கண்ணியத்துடன் நடத்தப்பட வேண்டும். கிராம சபை கூட்டங்கள் முடிந்ததும், பிரச்சினையின்றி முடிந்ததா என உறுதி செய்ய வேண்டும். உரிய ஆதாரங்களை புகைப்படத்துடன் அரசுக்கு உடனுக்குடன் அனுப்ப வேண்டும். விரிவான அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். அனைத்து ஊராட்சிகளிலும் குடியரசு தின விழா, எந்தவித புகாருமின்றி இணக்கமாக நடைபெறுவதை உறுதி செய்ய வேண்டும் என அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.