3 சுற்றுகள்.. தமிழக அலங்கார ஊர்திக்கு ஏன் அனுமதி தரப்படவில்லை? முதல்வருக்கு அமைச்சர் ராஜ்நாத் கடிதம்
சென்னை: 2022ம் வருட குடியரசுத் தின அணிவகுப்பில் தமிழ்நாட்டின் அலங்கார ஊர்தி நிராகரிக்கப்பட்டது குறித்து மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலினுக்கு கடிதம் எழுதி உள்ளார்.
குடியரசுத் தினத்தை முன்னிட்டு டெல்லியில் ஆண்டுதோறும் குடியரசு தின அணிவகுப்பு நடக்கும். இதில் பல்வேறு மாநிலங்களின் அலங்கார ஊர்தி அணிவகுப்புகள் நடைபெறும். மாநிலங்களின் கலாச்சாரங்களை பறைசாற்றும் விதமாக பல தீம்களில் இந்த ஊர்தி அணிவகுப்பு நடக்கும்.
தமிழ்நாடு சார்பாக கடந்த 3 வருடமாக அலங்கார ஊர்தி அணிவகுப்பு நடத்தப்பட்டது. இந்த வருடம் தமிழ்நாடு சார்பாக வேலுநாச்சியார், பாரதியார் ஆகியோரை மையமாக வைத்து அலங்கார ஊர்தி உருவாக்கப்பட்ட நிலையில் அதற்கு அனுமதி அளிக்கப்படவில்லை. இது பெரிய அளவில் சர்ச்சையானது.
காங்கிரஸ் கட்சியை தமிழகத்தில் அனுமதிக்க மாட்டோம்! பி.ஆர்.பாண்டியன் திடீர் போர்க்கொடி!
முதல்வர் கடிதம்
இந்த நிலையில் குடியரசுத் தின ஊர்வலத்தில் தமிழ்நாட்டின் அலங்கார வாகனம் புறக்கணிக்கப்பட்டது குறித்து முதல்வர் ஸ்டாலின் பிரதமர் மோடிக்கும் கடிதம் எழுதி இருந்தார். இதில் பிரதமர் மோடி தலையிட வேண்டும். தமிழ்நாடு சுதந்திர போராட்ட வீரர்களின் தியாகத்தை பறைசாற்றும் இந்த அலங்கார ஊர்திக்கு முறையான அனுமதி வழங்க வேண்டும் என்று முதல்வர் கோரிக்கை விடுத்து இருந்தார். நேற்று மாலை உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்த டிஆர் பாலு உள்ளிட்ட தமிழ்நாடு எம்பிக்களும் இதே கோரிக்கையை வைத்து இருந்தனர்.
மத்திய அரசு விளக்கம்
ஆனால் இன்று மத்திய அரசு அளித்த விளக்கத்தில் தமிழ்நாடு அனுப்பிய அலங்கார ஊர்தி ஏற்றுக்கொள்ளப்படாது என்று திட்டவட்டமாக அறிவிக்கப்பட்டது. அதாவது பாதுகாப்பு அமைச்சகத்தின் வல்லுனர்கள் குழுதான் இந்த அலங்கார ஊர்தியை நிராகரித்துள்ளது. அதை ஏற்றுக்கொள்ள வாய்ப்பு இல்லை என்று மத்திய பாதுகாப்பு அமைச்சகம் விளக்கம் அளித்தது. இந்த நிலையில்தான் பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இது தொடர்பாக தமிழ்நாடு முதல்வருக்கும், மேற்கு வங்க முதல்வருக்கும் கடிதம் எழுதி உள்ளார்.
அமைச்சர் சொன்னது என்ன?
இரண்டு மாநில முதல்வர்களும் பிரதமர் மோடிக்கு விளக்கம் கேட்டு கடிதம் எழுதிய நிலையில், ராஜ்நாத் சிங் இதில் பதில் அளித்துள்ளார். அதில், தமிழ்நாட்டின் அலங்கார ஊர்தி 3 சுற்றுகள் வரை வந்தது. மூன்றாவது சுற்றில்தான் இந்த ஊர்தி நிராகரிக்கப்பட்டது. கடைசி சுற்றுக்கு தமிழ்நாடு ஊர்தி தேர்வு செய்யப்படவில்லை. மொத்தம் 29 வாகனங்கள் இந்தியா முழுக்க பல்வேறு மாநிலங்களில் இருந்து வந்தது. அதில் கடைசி சுற்றுக்கு 12 வாகனங்கள் தேர்வாகும்.
கடைசி சுற்று
இந்த கடைசி சுற்றுக்கு தமிழ்நாடு அரசு அனுப்பிய வாகனங்கள் தேர்வாகவில்லை. இது முழுக்க முழுக்க வல்லுனர் குழு எடுத்த முடிவு. இதற்கு முன் 2017, 2019, 2020 மற்றும் 2021 ஆகிய வருடங்களில் தமிழ்நாடு அரசின் அலங்கார ஊர்திகள் தேர்வானது. கடைசி மூன்று வருடங்கள் வரிசையாக தமிழ்நாடு அரசின் அலங்கார ஊர்திகள் தேர்வானது. இந்த முறை மட்டுமே வாகனம் தேர்வாகவில்லை. முறையான விதிகளை பின்பற்றித்தான், இந்த நிராகரிப்பு செய்யப்பட்டுள்ளது.
பாரபட்சம் எதுவும் காட்டப்படவில்லை.
ஊர்திகளை தேர்வு செய்ததில் பாரபட்சம் எதுவும் காட்டப்படவில்லை. இந்த வல்லுனர்கள் குழு என்பது பல துறையினரை உள்ளடக்கியது. கலை, இலக்கியம், இசை, நடனம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் இருந்து வல்லுனர்கள் இந்த குழுவில் இடம்பெற்று இருப்பார்கள். இது வெளிப்படைத்தன்மையுடன் நடக்கும் தேர்வு ஆகும். பல கட்ட சுற்றுகளுக்கு பின்பே இந்த தேர்வுகள் நடக்கின்றன, என்று அமைச்சர் ராஜ்நாத் சிங் தனது விளக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.