காசிமேடு அருகே மாயமான நான்கு மீனவர்கள் மீட்பு - ஆனந்த கண்ணீருடன் வரவேற்ற உறவினர்கள்
சென்னை காசிமேடு அருகே மீன்பிடிக்கச் சென்றபோது கடலில் மாயமான 4 மீனவர்கள் மீட்கப்பட்டனர்.
சென்னை: காசிமேடு அருகே மீன்பிடிக்கச் சென்றபோது கடலில் மாயமான 4 மீனவர்கள் மீட்கப்பட்டனர். விழுப்புரத்தை சேர்ந்த 4 மீனவர்களை சக மீனவர்களே நடுக்கடலில் இருந்து மீட்டு கரைக்கு அழைத்து வந்தனர். அவர்களைப் பார்த்த உறவினர்கள் ஆனந்த கண்ணீர் வடித்தனர்.
Recommended Video
விழுப்புரம் மாவட்டம், வானூர் தாலுகா, நடுக்குப்பத்தை சேர்ந்தவர் தர்மலிங்கம்,52. அதே பகுதியை சேர்ந்தவர்கள் சம்பந்தம்,58, கமல்நாதன்,50, சக்தி,45 ஆகிய 3 பேரும் மீனவர்கள். தனக்கு சொந்தமான விசைப்படகில் தர்மலிங்கம் தனது 3 நண்பர்களுடன் சென்னைக்கு வந்திருக்கிறார். பின்னர் 4 பேரும் கடந்த ஒரு மாதமாக தண்டையார்பேட்டை, திடீர் நகரில் வசிக்கும் தர்மலிங்கத்தின் உறவினர் கோவிந்தராஜ் வீட்டில் தங்கியுள்ளனர்.
இவர்கள் நான்கு பேரும் கடந்த 27ம் தேதி அதிகாலை 2 மணிக்கு கடலுக்கு மீன் பிடிக்கச் சென்றனர். அவர்கள் வழக்கமாக 12 நாட்டிங்கல் மைல் தூரத்தில் மீன்பிடிப்பது வழக்கம். அதிகாலை விசைப்படகில் தர்மலிங்கம் உள்பட 4 பேரும் கடலுக்கு சென்று மீன்பிடித்து, அன்று மாலைக்குள் கரை திரும்பி மீன்களை விற்றுவிடுவது வழக்கம். இந்நிலையில், நேற்று அதிகாலை வழக்கம் போல் 4 பேரும் விசைப் படகில் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர். அதன்பிறகு நேற்றிரவு வரை 4 பேரும் படகுடன் கரைக்கு திரும்பவில்லை. அவர்களை தொடர்பு கொள்ளவும் முடியவில்லை.
மாலையில் கரை திரும்ப வேண்டிய 4 மீனவர்களும் குறித்த நேரத்திற்குள் வீடு திரும்பாததால் பதறிப்போன அவர்களது உறவினர்கள், நால்வரையும் பத்திரமாக மீட்க வேண்டும் எனக் கடலோர காவல்படைக்கு கோரிக்கை வைத்தனர்.
இதனால் பதட்டம் அடைந்த தர்மலிங்கத்தின் மகன் சந்திரசேகர் காசிமேடு மீன்பிடி துறைமுக போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். இதேபோல் மீன்வளத்துறை உதவி இயக்குனரக அலுவலகத்திலும் சம்பந்தம், தர்மலிங்கம், சக்தி, கமலநாதன் ஆகிய 4 மீனவர்கள் மாயமானது குறித்து புகாரளிக்கப்பட்டது.
இதையடுத்து, நால்வரையும் தேடும் பணியில் கடலோர காவல்படை அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டுவந்த நிலையில்,காசிமேடு மீனவர்கள் விசைப்படகுகளில் சென்று பைபர் படகில் மாயமான 4 மீனவர்களையும் தேடி வந்தனர். பல மணி நேர தேடுதல் வேட்டைக்குப் பிறகு மீனவர்கள் இருந்த இடத்தை சக மீனவர்கள் கண்டு பிடித்தனர்.
இந்த நிலையில் நடுக்கடலில் விசைப்படகு மீனவர்கள் மீன்பிடித்து கொண்டு இருந்தபோது பைபர் படகில் என்ஜின் பழுதால் கரை திரும்ப முடியாமல் தர்மலிங்கம், கமலநாதன், சக்தி, சம்பந்தம் ஆகியோர் தத்தளித்தபடி இருப்பதை கண்டனர்.
இதையடுத்து அவர்களை மீனவர்கள் மீட்டு கரைக்கு அழைத்து வந்தனர். தங்களின் உறவினர்கள் இறந்து விட்டதாகவே நினைத்த நிலையில் நால்வரும் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர்.
காணாமல் போன நால்வரும் பத்திரமாக மீட்கப்பட்டதையடுத்து, அவர்களது உறவினர்கள் நிம்மதி அடைந்துள்ளனர். நான்கு பேரையும் பார்த்த உறவினர்கள் ஆனந்த கண்ணீர் வடித்தனர். உயிரோடு தங்களை மீட்ட மீனவர்களுக்கு நன்றி தெரிவித்தனர்.