கச்சத்தீவை மீட்க வலியுறுத்தும் தீர்மானம் தமிழக சட்டசபையில் ஒருமனதாக நிறைவேற்றம்! பாஜக, அதிமுக ஆதரவு!
சென்னை: இலங்கைக்கு தாரைவார்க்கப்பட்ட தமிழ்நாட்டுக்குச் சொந்தமான கச்சத்தீவை அந்நாட்டிடம் இருந்து திரும்பப் பெற வேண்டும் என்று மத்தியில் ஆளும் பாஜக கூட்டணி அரசை வலியுறுத்தி தமிழக சட்டசபையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தாக்கல் செய்த தனிநபர் தீர்மானம் அனைத்து கட்சிகளின் முழுமையான ஆதரவுடன் இன்று ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.
தமிழ்நாட்டுக்கு சொந்தமானது கச்சத்தீவு. 1974-ம் ஆண்டு பிரதமராக இருந்த இந்திரா காந்தி அம்மையார், தமிழ்நாட்டின் ஒப்புதல் இல்லாமல் தன்னிச்சையாக இலங்கைக்கு கச்சத்தீவை தாரை வார்த்தார். 1974-ம் ஆண்டு ஒப்பந்தத்தின் படி, கச்சத்தீவு தமிழ்நாட்டு மீனவர்களின் பாரம்பரிய மீன்பிடி பகுதியாக இருந்தது. ஆனால் 1976-ம் ஆண்டு இலங்கையுடனான மற்றொரு ஒப்பந்தம் மூலம், தமிழ்நாட்டு மீனவர்களின் பாரம்பரிய மீன்பிடி உரிமை உள்ளிட்டவை பறிக்கப்பட்டது.

1980களில் இலங்கையில் உள்நாட்டு யுத்தம் தொடங்கியபோது தமிழ்நாட்டு மீனவர்களை காக்கை குருவிகளைப் போல இலங்கை கடற்படை சுட்டுக் கொன்றது. இதுவரை 800-க்கும் அதிகமான தமிழ்நாட்டு மீனவர்கள், இலங்கை கடற்படையால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்.
தமிழ்நாட்டு மீனவர்கள் இன்று வரை இலங்கை கடற்படையால் கைது செய்யப்படுவது தொடர்ந்து நடைபெறுகிறது. தமிழக மீனவர்கள் பல்வேறு போராட்டங்களை மேற்கொண்டும் மத்திய அரசு, இலங்கை அரசுக்கு எதிராக எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
தமிழ்நாடு அரசும் மத்திய அரசுக்கு பலமுறை கடிதங்கள் மூலமாகவும் நேரில் வலியுறுத்தியும் இலங்கை கடற்படையின் தாக்குதல் நிறுத்தப்படவில்லை. இதனால் தமிழ்நாட்டு மீனவர்கள் கடல் தொழிலைக் கைவிட்டாக வேண்டிய நெருக்கடிக்கு தள்ளப்பட்டுள்ளன்ர்.
இதனால் இலங்கைக்கு வழங்கப்பட்ட கச்சத்தீவை திரும்பப் பெற வேண்டும் என்பதுதான் தமிழ்நாட்டின் ஒரே கோரிக்கையாக இருந்து வருகிறது. 1974-ம் ஆண்டு முதலே தமிழ்நாட்டில் சட்டசபை தீர்மானம், அனைத்து கட்சிக் கூட்டம், தேர்தல் வாக்குறுதிகள் என கச்சத்தீவு விவகாரம் முதன்மை பிரச்சனையாக இருந்து வருகிறது.
உச்சநீதிமன்றத்திலும் கச்சத்தீவு மீட்பு தொடர்பாக முன்னாள் முதல்வர்கள் ஜெயலலிதா, கருணாநிதி தொடர்ந்த வழக்கு இன்னமும் நிலுவையில் இருந்து வருகிறது. நாடாளுமன்றத்தில் திமுக நேற்று , மீனவர்கள் பிரச்சனை தொடர்பாக சிறப்பு கவன ஈர்ப்புத் தீர்மானம் கொண்டு வந்தது. அப்போது பேசிய மத்திய அமைச்சர், தமிழ்நாட்டு மீனவர்கள் எல்லை தாண்டி மீன்பிடிப்பதாக குற்றம்சாட்டியது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதற்கு எதிராக தமிழக எம்பிக்கள் வெளிநடப்பு செய்தனர்.
இந்த பின்னணியில் இன்று தமிழ்நாடு சட்டசபையில் கச்சத்தீவை மீட்க வலியுறுத்தி மீண்டும் தீர்மானம் நிறைவேற்றப்பட உள்ளது. தமிழ்நாடு சட்டசபையில் 1974, 1991 மற்றும் 2013 ஆகிய ஆண்டுகளில் கச்சத்தீவை மீட்க வேண்டும் என மத்திய அரசை வலியுறுத்தி தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. தற்போது 4-வது முறையாக தமிழ்நாடு சட்டசபையில் கச்சத்தீவை மீட்க வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட உள்ளது. இந்த சிறப்புத் தீர்மானத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் தாக்கல் செய்தார்.
அப்போது பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின், தமிழ்நாட்டைச் சேர்ந்த இந்திய மீனவர்கள் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு கச்சத்தீவு மீட்புதான். மீனவர்கள் விடுதலை தொடர்பாக இதுவரை 74 முறை பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் அனுப்பி உள்ளேன். கடந்த 2024-ம் ஆண்டு மட்டும் 530 மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். தமிழ்நாட்டை சேர்ந்த இந்திய மீனவர்கள் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வாக கச்சத்தீவை மீட்க வேண்டும். இலங்கை செல்லும் பிரதமர் மோடி கச்சத்தீவை மீட்பது தொடர்பாக அந்நாட்டு அரசுடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். தமது பயணத்தின் போது நல்லெண்ண அடிப்படையில் இலங்கை சிறையில் வாடும் தமிழ்நாட்டைச் சேர்ந்த இந்திய மீனவர்களை விடுதலை செய்யவும் அவர்களது பறிமுதல் செய்யப்பட்ட படகுகளை மீட்கவும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி தீர்மானத்தை தாக்கல் செய்தார்.
இதன் பின்னர் அனைத்து கட்சி எம்.எல்.ஏக்கள் இந்த தீர்மானம் மீது கருத்துகளை முன்வைத்தனர். மத்தியில் ஆளும் பாஜகவும் தமிழக முதல்வர் ஸ்டாலினின் தனித் தீர்மானத்தை ஆதரிப்பதாக தெரிவித்தது. பாஜக எம்.எல்.ஏ. வானதி சீனிவாசன், தீர்மானத்தை ஆதரிப்பதாக சட்டசபையில் தெரிவித்தார். அதிமுகவும் இந்த தீர்மானத்தை ஆதரித்தது.
இதனையடுத்து முதல்வர் மு.க.ஸ்டாலின் தாக்கல் செய்த, கச்சத்தீவு மீட்புக்கான தனிநபர் தீர்மானம் தமிழக சட்டசபையில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. இந்த தீர்மானம் மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்படும்.












Click it and Unblock the Notifications