கரூர் கூட்ட நெரிசல்: சம்பவ இடத்துக்குச் சென்று இன்றே விசாரணையை தொடங்கினார் அருணா ஜெகதீசன்!
சென்னை: கரூர் கூட்ட நெரிசல் தொடர்பாக விசாரிக்க தமிழக அரசு நியமித்த ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன், கரூர் சென்று வேலுச்சாமிபுரத்தில் விசாரணையை தொடங்கி உள்ளார். சென்னையில் இருந்து கிளம்பிய அவர் இன்று மாலை சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தி வருகிறார். இந்த சம்பவம் குறித்து நேரில் பார்த்தவர்களிடமும் கரூர் அரசு மருத்துவமனையில் காயமடைந்து சிகிச்சை பெற்று வருவோரிடமும் அவர் விசாரணை நடத்துகிறார்.

தமிழகத்தில் அடுத்த ஆண்டு நடைபெறும் சட்டசபைத் தேர்தலை கருத்தில் கொண்டு அரசியல் கட்சிகள் பிரச்சாரம் செய்து வருகிறார்கள். அந்த வகையில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும் நடிகருமான விஜய், கடந்த 3 வாரங்களாக பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார்.
முதல் வாரமான கடந்த 13 ஆம் தேதி திருச்சி, அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்களிலும் இரண்டாவது வாரமான செப்டம்பர் 20ஆம் தேதி நாகை, திருவாரூர் ஆகிய மாவட்டங்களிலும் பிரச்சாரம் செய்திருந்தார்.
வாரந்தோறும் சனிக்கிழமைகளில் பிரச்சாரம் செய்யும் வகையில் விஜய்யின் பிரச்சார பயணம் திட்டமிடப்பட்டுள்ளது. அந்த வகையில் 3ஆவது வாரமாக நேற்று நாமக்கல், கரூர் மாவட்டங்களில் அவர் பிரச்சாரம் மேற்கொண்டார். காலையில் நாமக்கல்லில் பிரச்சாரத்தை தொடங்க வேண்டிய அவர் 12 மணிக்கு மேல்தான் நாமக்கல்லுக்கே வந்தார்.
8.45 மணிக்கு விஜய் பிரச்சாரம் என்பதால் அதிகாலை 5 மணி முதலே இடம் பிடிக்க தொண்டர்கள் கே.எஸ்.திரையரங்கம் முன்பு கூடியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.கரூர் வேலுச்சாமிபுரத்திற்கு பகல் 12 மணிக்கு வருவதாக டிவிட்டரில் போட்டுவிட்டு இரவு 7 மணிக்குத்தான் விஜய் வந்தாராம். இதனால் வெயிலிலும் கூட்ட நெரிசலிலும் மக்கள் குவிந்திருந்தனர். விஜய் பேசத் தொடங்கிய போதே பலர் கீழே விழுந்தனர். அப்போது 60 வயது ஆட்டோ டிரைவர் உயிரிழந்தார்.
அவரை தொடர்ந்து குழந்தைகள் மயங்கி விழுந்தனர். இந்த கூட்ட நெரிசலில் சிக்கி 39 பேர் பலியான நிலையில் 51 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் ஒரு பெண் மட்டும் ஆபத்தான நிலையில் இருக்கிறார். மற்றவர்களிந் உடல் நிலை சீராக இருக்கிறது. இந்த சம்பவத்திற்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, துணைத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன், பிரதமர் நரேந்திர மோடி, முதல்வர் ஸ்டாலின், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்தனர்.
இந்த நிலையில் கரூரில் கூட்ட நெரிசலில் இவ்வளவு பேர் உயிரிழப்புக்கு காரணம் என்ன? நெரிசல் ஏற்பட்டது எதனால்? நடந்தது என்ன? என்று முழு விளக்க அறிக்கை அளிக்க வேண்டும் என்று மத்திய உள்துறை அமைச்சகம் கூறியுள்ளது. இதற்காக ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் ஒரு நபர் விசாரணை ஆணையம் அமைத்து முதல்வர் உத்தரவிட்டுள்ளார். மேலும் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த குடும்பத்தினருக்கு தலா 10 லட்சம், சிகிச்சை பெற்று வீடு திரும்புவோருக்கு தலா ஒரு லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
இதுகுறித்து அவர் நியூஸ் 18 தமிழ்நாடு சேனலுக்கு அளித்த பேட்டியில் கூறுகையில், கரூர் கூட்ட நெரிசல் குறித்து விசாரிக்கும் அரசாணை எனக்கு கிடைக்கவில்லை. அது இன்றோ அல்லது நாளையோ கிடைத்தவுடன் உடனே விசாரணையை தொடங்குவேன் என தெரிவித்திருந்தார். இந்த நிலையில் இன்று மதியம் கரூருக்கு செல்ல அருணா ஜெகதீசன் சென்னை விமான நிலையத்திற்கு புறப்பட்டார். அங்கிருந்து விமானம் மூலம் திருச்சி சென்று சாலை மார்க்கமாக அருணா ஜெகதீசன் கரூர் செல்வார் என சொல்லப்படுகிறது. தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் குறித்தும் அருணா ஜெகதீசன்தான் விசாரித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் கரூர் துயரச் சம்பவம் குறித்து விசாரணை நடத்த சென்னையில் இருந்து கரூர் சென்றார் அருணா ஜெகதீசன். கரூர் துயரச் சம்பவம் நடந்த வேலுச்சாமிபுரத்தில் அருணா ஜெகதீசன் விசாரணையைத் தொடங்கியுள்ளார்.












Click it and Unblock the Notifications