வீட்டு வாசலில் இருந்து மெட்ரோ ஸ்டேஷனுக்கு குறைந்த செலவில் பசுமை ஆட்டோ! மெட்ரோ நிறுவனத்தின் முயற்சி
சென்னை: மினி பஸ் போகாத இடங்களுக்கும் ஓலா, ஊபர் சேவை கிடைக்காத பகுதிகளுக்கும் மெட்ரோ ரயில் பயணத்தை எளிதாக்கும் விதமாக எலக்ட்ரிக் ஆட்டோகள் சேவை தொடங்கியுள்ளது.
சென்னையில் பெரும்பாலான இடங்களில் மெட்ரோ ரயில் சேவைகள் தொடங்கப்பட்டுள்ளன. இந்த ரயில்கள் மூலம் நாளொன்றுக்கு லட்சக்கணக்கான மக்கள் பயணிக்கிறார்கள். அவர்கள் மெட்ரோ ரயிலில் இருந்து வீட்டுக்கோ அலுவலகத்திற்கோ செல்ல ஆட்டோக்கள், ஊபர், ஓலா கார் சேவைகளை பயன்படுத்தி வருகிறார்கள்.

சிலர் அரசின் மினி பேருந்து மூலம் மெட்ரோ ரயில் நிலையங்களுக்கு சென்று வருகிறார்கள். இன்னும் சிலர் அருகில் உள்ள ரயில் நிலையங்களுக்கு செல்ல ஆட்டோ,டாக்ஸிகளை பயன்படுத்தி வருகிறார்கள். இந்த நிலையில் அவர்களுடைய பயணத்தை எளிதாக்கும் விதமாக எலக்டரிக் ஆட்டோ திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.
லெகோ எனும் நிறுவனத்துடன் இணைந்து ரெட்ரோஃபிட் என்ற பெயரில் குடியிருப்பு பகுதிகளில் இருந்து மெட்ரோ ரயில் நிலையங்களுக்கும் அங்கிருந்து 5 கி.மீ.தூரத்திற்குள் இருக்கும் சுற்று வட்டார பகுதிகளுக்கும் இந்த சேவை வழங்கப்படுகிறது. இந்த ஆட்டோக்கள் நியாயமான கட்டணத்தில் இயங்குவதாக பொதுமக்கள் தெரிவிக்கிறார்கள்.
முதல்முறையாக இந்த ரயில் திட்டம் மதுரவாயல் பைபாஸில் உள்ள ஒரு பெரிய குடியிருப்புக்குள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த திட்டம் கொளத்தூர், முகப்பேர் உள்ளிட்ட பகுதிகளுக்கும் விரிவுப்படுத்தப்படுகிறது. கி.மீ.ருக்கு ரூ 20 கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. மாதந்தோறும் பயன்படுத்துவோருக்கு கட்டணச் சலுகையில் 20 சதவீதம் குறைக்கப்படும்.
அது போல் ஜிபே, போன்பே உள்ளிட்ட யூபிஐ மூலம் பணம் செலுத்தும் வாடிக்கையாளர்களுக்கு 10 சதவீதம் கட்டணம் குறைக்கப்படும். இந்த குடியிருப்பில் 3 ஆட்டோக்கள் என மொத்தம் 28 ஆட்டோக்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இது மேலும் பல இடங்களுக்கு விரிவுபடுத்தப்படும். இதுகுறித்து மெட்ரோ பொது மேலாளர் விஜய் வரதன் கூறுகையில் போக்குவரத்து கழக சேவை, ஊபர் ஓலா கால் டாக்ஸி சேவைகள் கிடைக்காத இடங்களில் இந்த ஆட்டோக்கள் இயக்கப்படும்.
குடியிருப்பு பகுதிகளில் சர்வே எடுத்து அங்கு இந்த ஆட்டோக்கள் எத்தனை பேருக்கு பயனடையும் என்ற தகவல்களை தெரிந்து கொண்டு நாங்கள் ஆட்டோ இயக்கத்தை அறிமுகப்படுத்துகிறோம். முதலில் மதுரவாயலில் உள்ள குடியிருப்பு பகுதியில் 3 ஆட்டோக்கள் இயக்கப்படுகின்றன.அங்கிருந்து கோயம்பேடு மெட்ரோ, திருமங்கலம் மெட்ரோவுக்கும் சுற்றியிருக்கும் பகுதிகளுக்கும் இயக்கப்படுகிறது.
தற்போது 109 ஆட்டோக்களுக்கு மெட்ரோ ரயில் நிர்வாகம் ஒப்பந்தம் செய்துள்ளது. படிப்படியாக 500 ஆட்டோக்களை களமிறங்கி மெட்ரோ ரயில் பயணிகள் எந்தவித சிரமங்களும் இல்லாமல் தங்கள் வீடுகளுக்கு செல்ல வழி வகை செய்யப்படும் என தெரிவித்துள்ளார். இந்த சேவை முதலில் ஆலந்தூர் மெட்ரோ ரயில் நிலையத்தில் தொடங்கப்பட்டது. அங்கு கி.மீ. 12 என்ற சலுகை விலையில் இயக்கப்பட்டு வருகிறது.

கி.மீருக்கு 20 ரூபாய் எனும் போது நாம் செல்லும் இடத்திற்கு இன்னொருத்தர் போனால் பாதி பாதி கட்டணத்தை கொடுத்துவிடலாம் என்பதால் இந்த சேவை எளிதாகவும் பயனுள்ளதாகவும் இருப்பதாக தெரிவிக்கிறார்கள். சென்னையில் பெரும்பாலான புறநகர் பகுதிகளில் வளர்ச்சி அடைந்து வருகின்றன. இங்கு கார்கள், டீவிலர்கள் இருந்தால் மட்டுமே வெளியே செல்ல முடியும் என்ற நிலையை மாற்ற மெட்ரோ ரயில் நிறுவனம் இது போன்ற சேவையை செய்து வருகிறது.












Click it and Unblock the Notifications