கஸ்டடியில் கைதி இறந்ததற்காக 2 போலீஸ்காரர்களுக்கு மரண தண்டனையே கொடுத்தது கேரள கோர்ட்! ரீவைண்ட்
சென்னை: திருப்புவனம் பகுதியில் விசாரணை என்ற பெயரில் போலீஸ் தாக்கியதில் அஜித் குமார் என்ற இளைஞர் கொல்லப்பட்டார். இந்தச் சம்பவம் நாடு முழுக்க பேசுபொருளாக மாறியுள்ளது. நமது அண்டை மாநிலமான கேரளாவில் இதுபோல நடந்த ஒரு லாக்கப் மரணத்தில் குற்றஞ்சாட்டப்பட்ட போலீசாருக்கு மரண தண்டனையே விதிக்கப்பட்டுள்ளது. இது குறித்து நாம் விரிவாகப் பார்க்கலாம்.
சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் நகை திருட்டு விவகாரத்தில் போலீசார் அஜிக் குமார் என்ற செக்யூரிட்டியை விசாரணை என்ற பெயரில் அழைத்துச் சென்றுள்ளனர். எஃப்.ஐ.ஆர் கூட பதிவு செய்யாமல் அந்த இளைஞரை போலீசார் மிக மோசமாகத் தாக்கியுள்ளனர். இதில் அந்த நபர் உயிரிழந்தார். மாநிலம் முழுக்க இந்தச் சம்பவம் பரபரப்பைக் கிளப்பியது.

திருப்புவனம் லாக்கப் மரணம்
இந்த வழக்கு விசாரணை முதலில் சிபிசிஐடி-க்கு மாற்றப்பட்ட நிலையில், பிறகு இது சிபிஐ விசாரணைக்கு மாற்றப்பட்டது. மேலும், சம்பந்தப்பட்ட காவலர்கள் கைதும் செய்யப்பட்டுள்ளனர்.. அதேநேரம் இதுபோன்ற வழக்குகளில் உரிய விசாரணை நடைபெறுவதில்லை என்ற பேச்சும் இருந்து கொண்டு தான் இருக்கிறது. அதேநேரம் அண்டை மாநிலமான கேரளாவில் இதுபோல ஒரு லாக்கப் மரணத்தில் குற்றம் செய்த போலீசாருக்கு மரண தண்டனையே விதிக்கப்பட்டது. இது குறித்து நாம் விரிவாகப் பார்க்கலாம்.
கடந்த 2018ம் ஆண்டு திருவனந்தபுரத்தில் உள்ள சிபிஐ சிறப்பு நீதிமன்றம் லாக்கப் மரணம் தொடர்பான வழக்கில் மிக மிக முக்கியமான ஒரு தீர்ப்பை வழங்கியிருந்தது. 26 வயதான உதயகுமார் என்ற இளைஞரைச் சித்திரவதை செய்து கொன்ற வழக்கில் இரு போலீஸ் அதிகாரிகளுக்குத் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டது.
தூக்குத் தண்டனை
அதாவது 2005ஆம் ஆண்டு ஃபார்ட் காவல் நிலையத்தில் 26 வயதே ஆன உதயகுமார் என்ற இளைஞர் போலீசார் விசாரணை என்ற பெயரில் அடித்துத் துன்புறுத்தியதில் அவர் கொல்லப்பட்டார். இந்த விவகாரத்தில் கே.ஜித்துக்குமார் மற்றும் எஸ்.வி.ஸ்ரீகுமார் ஆகிய இரு காவலர்களும் குற்றவாளி என அறிவிக்கப்பட்டுத் தூக்குத் தண்டனை விதித்து சிபிஐ சிறப்பு நீதிபதி நாசர் உத்தரவிட்டார்.
திட்டவட்டமாக சொன்ன நீதிபதி
அப்போது நீதிபதி, போலீசார் செய்த குற்றத்தின் தீவிரத்தைக் குறைக்க எந்தவிதமான காரணங்களும் இல்லை என்பதைத் தெளிவாகக் குறிப்பிட்டார். இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், "சட்டம் ஒழுங்கைப் பாதுகாப்பவர்கள் மரண வியாபாரிகள் இல்லை. குற்றம் சாட்டப்பட்டவர்கள் காவலில் இருந்த ஒரு அப்பாவியைக் கொன்றுள்ளனர். இது அரிதிலும் அரிதானது. எனவே, இந்த வழக்கு மரண தண்டனை வழங்கத் தகுதியானது. அவர்களின் சட்டவிரோதச் செயல் போலீஸ் மீது மக்கள் நம்பிக்கையை இழக்கச் செய்யும். சமூகத்திற்குத் தீங்கு விளைவித்துள்ளது" என்று கூறியிருந்தார்.
மேலும், இந்த வழக்கில் ஆதாரங்களை அழித்து, காவல் நிலைய பதிவுகளைப் பொய்யாக மாற்றியதாகக் கூறி ஓய்வுபெற்ற எஸ்பிக்கள் டி.கே.ஹரிதாஸ் மற்றும் துணை எஸ்பி அஜித் குமார் ஆகியோருக்கு மூன்று ஆண்டுகள் சிறைத் தண்டனையும் விதிக்கப்பட்டது. இந்தத் தீர்ப்பு கேரளா மட்டுமின்றி நாடு முழுக்க அப்போது முக்கியமானதாகப் பேசப்பட்டது.
நீதி நிலைநாட்டப்பட்டது
இந்த வழக்கு 13 ஆண்டுகள் நடந்தாலும் கடைசியில் நீதி நிலைநாட்டப்பட்டது. ஒரே மகனைக் கொன்றவர்களைச் சட்டத்தின் முன் நிறுத்துவதற்காக உதயகுமாரின் தாய் பார்வதி அம்மா நடத்திய நீண்ட போராட்டமும் மக்களின் கவனத்தை ஈர்த்தது. மேலும் இது போலீசாரின் மிருகத்தனமான நடவடிக்கைகள், விசாரணை என்ற பெயரில் 3வம் நிலை டரீட்மெண்ட் செய்வதையும் கண்டித்து ஒரு விவாதத்தை உருவாக்கியிருந்தது.
மக்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும் குற்றங்களைத் தடுக்கவுமே போலீசாருக்கு கூடுதல் அதிகாரம் தரப்பட்டுள்ளது. ஆனால், சில நேரங்களில் போலீசார் விசாரணை என்ற பெயரில் அந்த அதிகாரங்களைத் துஷ்பிரயோகம் செய்கிறார்கள். இதுபோன்ற சம்பவங்களை வேண்டும் என்றால் போலீஸே குற்றம் செய்தாலும் அவர்களுக்கான தண்டனை கடுமையாக்கப்பட வேண்டும்.
தமிழகத்தில் நடப்பது இல்லை
ஆனால், துருதிஷ்டவசமாக தமிழகத்தில் அதுபோல எதுவும் நடப்பதில்லை. தமிழ்நாட்டிலும் பல இடங்களில் லாக்கப் மரணங்கள் நடந்துள்ளன. அது அப்போது பெரியளவில் பேசுபொருளாக மாறும். ஆனால், கொஞ்ச நாட்களில் அதுவும் கடந்து போய்விடும். சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் தாங்கள் செய்த தவறுக்கான தண்டனையை அனுபவிக்காமலேயே இருந்துவிடுவதாக விமர்சனங்கள் இருக்கவே செய்கிறது.












Click it and Unblock the Notifications