சென்னை எம்டிசி தாழ்தள பஸ்சில் இப்படி ஒரு பிரச்சினையா? தவிக்கும் பயணிகள்.. என்ன சொல்றாங்க பாருங்க
சென்னை: சென்னை மாநகர போக்குவரத்து கழகத்தில் புதிதாக தாழ்தள பேருந்துகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்த வசதியாக இந்த பேருந்து உருவாக்கப்பட்டுள்ளது. இந்த பேருந்தில் போதிய காற்றோட்ட வசதி இல்லை என்பதால் மதிய வேளைகளிலும் பீக் நேரங்களிலும் பயணம் செய்யும் போது கடும் சிரமத்தை சந்திக்க வெண்டியிருப்பதாக பயணிகள் ஆதங்கம் தெரிவித்து இருக்கிறார்கள்.
சென்னையில் தாழ்தள பேருந்துகள் கடந்த சில நாட்களுக்கு முன்பாக அறிமுகம் செய்யப்பட்டன. மாற்றுத்திறனாளிகள், முதியவர்கள் எளிதாக ஏறும் வகையில் இந்த பேருந்தில் வசதிகள் இருந்தன. முதல் கட்டமாக 17 வழித்தடங்களில் 58 தாழ்தள பேருந்துகள் பயன்பாட்டிற்கு வந்துள்ளது.

அதிகபட்சமாக கோயம்பேடு பஸ் ஸ்டாண்டில் இருந்து கிளாம்பாக்கம் புதிய பேருந்து நிலையத்திற்கு இயக்கப்படும் 70 வி வழித்தடத்தில் 7 பேருந்துகளும், கோயம்பேட்ட்டில் இருந்து கிளாம்பாக்கத்திற்கு மதுரவாயல் புறவழிச்சாலை வழியாக இயக்கப்படும் 104 சி வழித்தடத்தில் 6 பஸ்களும் இயக்கப்படுகின்றன.
இந்த பேருந்துகள் அனைத்தும் நான் ஏசி பஸ்கள் ஆகும். ஆனால் ஏசி பஸ்கள் போன்ற டிசைனுடன் இந்த பஸ்சின் பாடி பில்ட் செய்யப்பட்டுள்ளது. இந்த பேருந்துகள் பயணிகளை கவரும் விதமாக உள்ளதோடு.. உட்புறமும் நவீன தொழில்நுட்பத்துடன் உள்ளது. பேருந்து செல்லும் வழித்தடம் குறித்த டிஜிட்டல் போர்டு பேருந்திற்கு உள்புறம் உள்ளது. தானியங்கி கதவுகள், ஆட்டோமெடிக் கியர் வசதி என பல வசதிகள் இந்த பேருந்துகளில் உள்ளன.
இந்த பேருந்தில் 35 பேர் அமர்ந்து செல்ல வசதி உள்ளது. மாற்றுத்திறனாளிகள் அமர்வதற்காக விசாலமான இடத்துடன் கூடிய இருக்கைகள் உள்ளன. இந்த பேருந்தில் பல்வேறு சிறப்பு வசதிகள் உள்ளன. வழக்கமாக எம்.டி.சி பேருந்துகளை போல இல்லாமல் இந்த பேருந்தில் என்ஜின் பின்பக்கமாக உள்ளது. இதனால் பின்பக்க இருக்கைகள் சற்று உயர்வான இடத்தில் உள்ளது.
ஆனால் இந்த பேருந்து காற்றோட்டம் போதிய அளவில் இருக்கும் வகையில் இல்லை என்று பயணிகள் ஆதங்கம் தெரிவித்துள்ளனர். குறிப்பாக கடைசி இரு வரிசையில் உள்ள இருக்கைகளில் அமர்ந்து செல்லும் பயணிகளுக்கு கடும் சிரமத்துடன் பயணிக்க வேண்டிய நிலை இருக்கிறது. கடைசி வரிசை இருக்கைகளுக்கான ஜன்னலும் சிறிய அளவில் தான் உள்ளது. இதனால் மதிய வேளைகளில் கடுமையான புழுக்கமாக உணர முடிகிறது என்று பயணிகள் தெரிவித்துள்ளனர்.
அதிலும் நின்று கொண்டு செல்லும் பயணிகளும் கடும் சிரமத்தை சந்திக்க வேண்டியுள்ளதாக தெரிவிக்கின்றனர். இதுபோன்ற டிசைன்களுடன் நான் ஏசி பேருந்துகளை பெங்களூர் போன்ற வெப்பம் குறைவான நகரங்களுக்கு பொருத்தமானதாக இருக்கும். ஆனால், 35 டிகிரி செல்சியஸுக்கு மேலே வெப்பம் வாட்டி வதைக்கும் சென்னையில் இந்த பஸ்சில் பயணிப்பது பயணிகளுக்கு பெரும் சிரமம் அளிப்பதாக இருக்கும் என்றும் அத்துறையை சேர்ந்த வல்லுனர்கள் சொல்கிறார்கள்.
இது குறித்து எம்.டி.சி தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டு இருக்கும் பதிவில், "இது குறித்து ஆய்வு செய்து பிரச்சினை சீர் செய்யப்படும்" என்று தெரிவித்துள்ளது. டெல்லியில் உள்ள பேருந்துகளில் வெப்பத்தை சமாளிக்க பேருந்துக்குள் காற்று வர Blowres பயன்படுத்தப்படுகிறது. தற்போது புறநகர் மின்சார ரயில்களில் கூட இந்த வசதி உள்ளது. இதேபோன்ற வசதியை இந்த தாழ்தள பேருந்தில் கொண்டு வந்தால்,பீக் நேரங்களில் பயணிக்கும் போது பேருந்துக்குள் காற்றோட்டம் இருக்கும் என வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications